ஜெயிப்பாரா 'கேப்டன்' ஜெயா?
ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் இணைந்து மிரட்டும் இந்தக் கூட்டணியின் கதை மட்டும் அல்ல... திரைக்கதையும் புதுசு!
கட்சி ஆரம்பித்த ஐந்து ஆண்டு காலமாக, சளைக்காமல் அத்தனை தேர்தல்களையும் சந்தித்து வந்தார் விஜயகாந்த். 8 முதல் 13 சதம் வரைக்கும் அவருக்குப் பலம் இருக்கிறது என்பது தெளிவானது. திருமங்கலம் இடைத் தேர்தல்தான் தமிழகத்தின் மூன்றாவது தனிப் பெரும் சக்தியாக விஜயகாந்த்தை அடையாளம் காட்டியது. அடுத்து, நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூடத் தேறவில்லை என்றாலும், மரியாதையான வாக்குகளை வாங்கிக் காட்டினார். பல கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிட்டு வென்றவர்கள், விஜயகாந்த்தின் தோல்வியைக் கிண்டல் அடித்தார்கள். 'எனக்கு எத்தகைய செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன்’ என்று அவர் சொல்லிக்கொண்டார். தொடர் தோல்விகளின் மூலமாக விஜயகாந்த் படித்த பாடம் ஒன்றுதான்.
தி.மு.க. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் உஷாராக ஆரம்பித்தது. 'விஜயகாந்த் தனித்து நின்றால் சொல்லிக்கொள்வது மாதிரி வெற்றி பெற முடியாது’ என்பது எவ்வளவு உண்மையோ... அதைப்போல, 'விஜயகாந்த்தும் ஜெயலலிதாவும் இணைந்தால், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குத்தான் திண்டாட்டம்’ என்று கருணாநிதி நினைத்ததும் உண்மை. அதைத் தடுப்பதற்கான காரியங்களைப் பார்க்கும் வேலைகளில் தி.மு.க. தரப்பு ஆட்கள் இறங்கினார்கள். தி.மு.க. தரப்பில் இதற்காகத் தயாரித்து அனுப்பிவைக்கப்பட்ட அத்தனை மனிதர்களும் 'விஜயகாந்த் தனித்துதான் நிற்பார்!’ என்று சுருதி மாறாமல் சொன்னார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. அணியுடன் விஜயகாந்த் பேச்சு நடத்தினார். ஆனால், இறுதியில் தனித்தே நின்றார். அதேதான் இந்தத் தடவையும் நடக்கும் என்றார்கள்.
அதற்கு ஏற்பவே, ஜெயலலிதா பற்றி பாசிட்டிவ்வான எந்தக் கருத்தும் விஜயகாந்த்திடம் இருந்து வரவில்லை. அ.தி.மு.க. தரப்பும் அளவுக்கு அதிகமான மௌனம் சாதித்தது... 'விருதகிரி’ பட விளம்பரத்தை ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பியதைத் தவிர.
இவை அனைத்துமே மூன்று மாதங்களுக்கு முன்பு வரையிலான சமாசாரங்கள்!
''கருணாநிதியை ஆட்சியைவிட்டு வீழ்த்துவதுதான் என்னுடைய லட்சியம். அதற்காக எதையும் செய்வேன்!'' என்று விஜயகாந்த் முதல் தடவையாக லேசாக ஒரு ஹின்ட் காட்டியதுதான் கருணாநிதிக்குச் சுரீர் என்று உறைக்க ஆரம்பித்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் முதல் தடவையாக வருத்த ரேகை படரப் பேசினார் கருணாநிதி. 'அந்த அம்மாகூட விஜயகாந்த் சேர்ந்தால்... அவங்கதான் ஆளும் கட்சி!’ என்று அங்கே பேசப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, 'அப்படிலாம் ஆகாது தலைவரே! அவங்க ரெண்டு பேருமே ஈகோ பிடிச்சவங்க. அதுனால இறங்கி வர மாட்டாங்க. விஜயகாந்த்திடம் பேசி சரிபண்ண, நமக்கு இப்பவும் ஆள் இருக்கு. நாங்க பார்த்துக்கிறோம்!’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் கருணாநிதிக்கு உற்சாகம் ஊட்டிவிட்டு, அதற்கான வேலைகளைப் பார்த்தார். ஆனால், விஜயகாந்த் தரப்பில் அவரால் மூவ் பண்ணவே முடியவில்லை. தன்னுடைய வேதனையை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டது தி.மு.க. தலைமை!'அப்படி ஒரு கூட்டணி மட்டும் அமைந்தால்... அந்த அம்மாதான் முதலமைச்சர். விஜயகாந்த்தான் எதிர்க் கட்சித் தலைவர் என்ற எண்ணம் முன் கூட்டியே உருவாகிவிடும்!’ என்று தி.மு.க. தலைமை சொன்னது, டெல்லி காங்கிரஸ் தலைமை வரைக்கும் சொல்லப்பட்டது!
அப்படியானால், காங்கிரஸ் வழியாக தே.மு.தி.க. கூட்டுக்கு முயற்சிக்கலாமே என்று சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் சொல்ல, டெல்லியில் இருந்து விஜயகாந்துக்குப் பேசினார்கள். 'யோசிக்கலாம்’ என்று பட்டும் படாமலும் பதில் சொன்னார் விஜயகாந்த். மத்திய அமைச்சர் ஒருவரும், 'சில நாட்கள் வரை பொறுத்திருங்கள்!’ என்று சொன்னார். விஜயகாந்த்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது இது!
'காங்கிரஸ் கட்சி என்னை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த நினைக்கிறதா? அவங்க கருணாநிதியைவிட்டு எந்தக் காலத்துலயும் வர மாட்டாங்க. ஆனால், விஜயகாந்த்கிட்ட சேர்ந்திருவோம்னு சொல்லி,கலைஞர் கிட்ட அதிக சீட்டை வாங்கப் பார்க்கிறாங்க. அதுக்கு என்னைப் பலியிடப் பார்க்கிறாங் களா?’ என்று கொந்தளித்தார். இன்னொரு மத்திய அமைச்சரின் மகன், 'விஜயகாந்த் தனியாத்தான் நிற்பார். காங்கிரஸ் கட்சி கிட்ட பேசிட்டார். அதுக்காக, அவர்கிட்ட பணத்தைக் கொடுக்கிற பொறுப்பை என்னி டம்தான் ஒப்படைத்து இருக்கிறார்கள்’ என்று சொன்ன கதையும் விஜயகாந்த் காதுக்கு வந்து, கொந்தளிப்பைக் கூட்டியது. ஏற்கெனவே சிவந்த விஜயகாந்த்தின் கண் களை இன்னும் சிவப்பு ஆக்கியது தமிழக ரகசிய போலீஸ் கிளப்பிய இன்னொரு தகவல். 'தி.மு.க. பிரமுகர் ஒருத்தர்கிட்ட இருக்கிற பாண்டிச்சேரி கல்லூரியையும், தமிழ்நாட்டுல இருக்கிற ஒரு தொழிற்சாலை யையும் விஜயகாந்த் பேருக்கு மாத்தித் தர்றதா ஒப்பந்தம் போட்டாச்சு. அதனால, அவர் தனியாத்தான் நிற்பார்!’ என்பதுதான் அடுத்த தகவல்.
அ.தி.மு.க. தூதுக் குழுவிடம் தொடர்ந்து பேசினாலும் கடைசி நம்பரைச் சொல்லி கறாராகத் தீர்மானித்துவிடக் கூடாது என்பதில் விஜயகாந்த் தயக்கம் காட்டினார். அதற்குக் காரணம், தேர்தல் நெருக்கத்தில் கூட்டு சேர்ந்தால், அதற்குக் கூடுதல் கவர்ச்சி இருக்கும் என்பதால்தான். வெளியில் பரவும் செய்திகளும், விஜயகாந்த் காட்டிய தயக்கமும் அ.தி.மு.க. தரப்பை யோசிக்கவைத்தது. ஜனவரி 30, பிப்ரவரி 7, பிப்ரவரி 15 என்று தேதிகளைத் தள்ளியே போட்டுவந்தார் ஜெயலலிதா. இறுதியாக, பிப்ரவரி 24-ம் தேதி தன்னுடைய பிறந்த நாள் அன்று சாதகமாக ஏதேனும் நடந்தால் நல்லது என்று ஜெயலலிதா துடித்தார். அதேபோல், அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்குள் தே.மு.தி.க. நிர்வாகிகள் கடந்த வாரம் உள்ளே நுழைந்தனர்.
'தேர்தலில் எத்தகைய டிரெண்ட் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்குதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது!’ என்று கருணாநிதி நினைக்கிறார். விஜயகாந்த் சேரும்போது அ.தி.மு.க-வுக்கு கிடைக்கப்போகும் வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவிகிதம் கூடும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு, கட்சிகளின் வாக்குகளைத் தீர்மானித்தால், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் இப்போதைய பலம் 41.78% இதில், தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சி கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்றைய அ.தி.மு.க கூட்டணியின் பலம் 51.26% அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய ஐந்து கட்சிகள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதிகாரம், மக்கள் நலத் திட்டங்கள், பண பலம் ஆகிய மூன்று விஷயங்களுக்காக தி.மு.க. கூட்டணி 5
இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம், வென்ற கட்சிக்கும் தோற்ற கட்சிக்கும் வித்தியாசம் 3 சதவிகிதம் மட்டுமே இருந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்கு 10 சதவிகிதம் வித்தியாசம் என்பதாகத் தெரிகிறது கணக்கு. தி.மு.க. தலைமை அதிகமாகக் கவலைப்படுவதற்கு இதுதான் காரணம். ''தி.மு.க. கூட்டணியைவிட்டு காங்கிரஸ் தனியாகப் போனால்கூடப் பரவாயில்லை. விஜயகாந்த்தும் அ.தி.மு.க-வும் சேர்ந்துவிடக் கூடாது!'' என்று ஆளும் தலைமை துடித்தது இதனால்தான். விஜயகாந்த் இருந்தால் போதும் என்று ஜெயலலிதா நினைப்பதும் இதனாலேயே!
thanks
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக