மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் கலவர பூமியானதற்கு அரசு மேற்கொண்ட அடக்குமுறையே காரணம்: - நாம் தமிழர் கட்சி

கூடங்குளம் அணு உலைகள் தொடர்பாக தங்களுக்குள்ள அச்சங்களை மத்திய, மாநில அரசுகள் போக்கிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓராண்டுக்காலத்திற்கு மேலாக அமைதி வழியில் நடந்த போராட்டத்தை காவல் துறையினரைக் கொண்டு கலைக்க தமிழக அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையே அப்பகுதி கலவர பூமியாவதற்குக் காரணமாகும்.
கூடங்குளம் அணு உலைகளால் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும், எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் தங்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கோரியே ஓராண்டிற்கு மேலாக அப்பகுதி மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் அமைதி வழியில் போராடி வந்தனர்.
ஆனால் அவர்களின் நியாயமான அச்சத்தை போக்கிடும் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் காலம் கடத்தியோடு மட்டுமின்றி, அணு உலைகளை இயக்குவதற்கான முயற்சிகளில் இந்திய அணு சக்திக் கழகம் ஈடுபட்டது. அதனை எதிர்த்தே அம்மக்கள் அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் கூட, அவர்கள் அணு மின் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமர்ந்துதான் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பத்து நிமிடத்தில் கலைந்து செல்ல வேண்டும் என்று அறிவித்துவிட்டு, அடுத்த நிமிடமே அவர்களைக் கலைக்க காவல்துறையினர் முரட்டு வழிகளில் ஈடுபட்டதே கலவரம் ஏற்பட காரணமானது. போராடிய மக்கள் அணு மின் நிலையத்தை நோக்கிச் சென்றார்கள் என்று காவல் துறையினர் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். சாத்வீக வழியில் போராடிய அம்மக்களை ஆயுத பலத்தைக் கொண்டு விரட்ட முற்பட்டதன் எதிர்வினையே கலவரம் வெடிக்கக் காரணமாகும்.
கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு துணையாக நிற்பேன் என்று தமிழக முதலமைச்சர், சங்கரன்கோயில் இடைத்தேர்தல் பரப்புரையின் கூறினார். ஆனால் தேர்தல் முடிந்தவுடனேயே, கூடங்குளம் அணு உலைகள் இயங்கும் என்று அறிவித்தார். போராடும் அந்த மக்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சி என்ன? என்று கேட்கிறோம்.
அவர்களுடைய கோரிக்கைக்கு பதில் கூறாமல், அந்தப் போராட்டம் சாத்வீக வழியில் மறியல் போராட்டமாக உருவெடுத்தபோது, அதனை கலைப்பதற்காக அந்த மக்கள் மீது தடியடி நடத்துவதும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதும்தான் ஜனநாயகமா என்று கேட்கிறோம்.
காவல் துறையினர் நேற்று நடத்திய அடக்குமுறையின்போது, காயம்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருந்த சுனாமி வீடுகள் எல்லாம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்த சுந்தரி உள்ளிட்ட சகோதரிகளை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தைக் கூட வெளியிடவில்லை. அப்பகுதி மக்கள் பயன்படுத்திய வாகனங்கள் பலவற்றை காவல் துறையினர் கவர்ந்து சென்றுள்ளனர்.
பல வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இவையெல்லாம் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது அல்லவா? தூத்துக்குடியில் காவல் நிலையத்தை நோக்கி வந்தவர்களை தடுத்து நிறுத்த காவல் துறையினரால் முடியாதா? எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு மீனவரைக் கொல்ல வேண்டும்?
கூடங்குளத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் இதர பகுதிகளிலும் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அணு உலைகளை எதிர்க்கும் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசோ அல்லது அணு சக்தி ஆணையமோ உரிய பதில்களை தர மறுக்கின்றன.
இந்த நாட்டு மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அடக்குமுறையைக் கையாண்டு போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று அரசுகள் நினைப்பது பேராபத்தாக முடியும் என்பதை நாம் தமிழர் கட்சி விசனத்துடன் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக அரசின் தவறான அணுகுமுறையால் ஒரு உயிர் போய்விட்டது. இந்த அளவிலாவது காவல் துறை நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு, போராடிய மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு இந்திய அணு சக்தி ஆணையத்திற்கு தமிழக அரசு நெருக்குதல் தர வேண்டும். அதைச் செய்யாமல் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியைத் தொடர்ந்தால், அது விபரீதமான விளைவுகளையே உருவாக்கும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குபின் முரணானதுமான
 விவரங்களையே தந்துள்ளார். இலங்கையில் போர்  நடந்த போது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தீர்வு  காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள்தான் உணர முடியும்  என்று கூறியுள்ளார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு அதிலும் மத்தியில் ஆளுங்கட்சி எதுவோ  அதனுடன் எப்போதும் இணைந்து செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங்களில் எப்படி  நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு வங்கதேசத்துடன் நீண்ட நாட்களாக  தீர்க்கப்படாமலிருந்த பராக்கா அணைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார். ஆனால் மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர்  உடன்பாடு செய்ய முடியாது, எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை இதற்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க  தேசத்துடன் உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு. ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு என்ன  சொல்கிறதோ அப்படித்தான் இந்திய அரசு செயல்படவேண்டும் என வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ  கருணாநிதிக்கு இல்லாமல் போனது. மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ  அதுதான் எனது நிலைப்பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னவர் கருணாநிதி. ஈழப்போராளிகளுக்கிடையே சகோதர யுத்தத்தை தூண்டிவிட்டதற்கும் அந்தப்போரில் பின்னடைவு ஏற்பட்டதற்கும்  நெடுமாறன்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். வரலாற்று உண்மைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற  நம்பிக்கையில் கருணாநிதி இவ்வாறு கூறியிருக்கிறார். 1983ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மக்களின் ஆதரவைத்  திரட்டும் முயற்சியில் சகல போராளி இயக்கங்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. ஈழ விடுதலை அமைப்புகள்  அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மனமாற விரும்பினார். இதற்காக குறிப்பிட்ட நாளில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் தன்னைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது இந்த  அழைப்பை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி போராளி இயக்கத் தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட தினத்திற்கு முதல் நாள் தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையும் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன. போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்துவதற்கான முதல் நடவடிக்கையை இதன் மூலம் மேற்கொண்டவர் கருணாநிதிதான், தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிளவு வேலைகளை வரிசையாக சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். உதாரணத்திற்கு இங்கே ஒன்றை சுட்டிக்காட்டினேன். தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தவரும் கருணாநிதியே. இந்த உண்மையை மறைக்க பிறர் மீது பழிசுமத்த  முற்படும் அவரின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை. தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதை தீர்மானத்தில் ஜெயலலிதா கொண்டுவந்தது எனக்கு  நினைவு இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை  வெளியிட்டதோடு அதன் நகல்களை நாங்களும் எங்களுடைய தோழமை கட்சிகளும் கொளுத்தி கைது  செய்யப்பட்டோம். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்பவரைப் போல நாடறிந்த இந்த உண்மையை  மறைப்பதற்கு கருணாநிதி முயற்சி செய்கிறார். டெசோ மாநாட்டில் தனி ஈழம் தொடர்பாக தீர்மானம் போடக்கூடாது என மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவரைச் சந்தித்து வற்புறுத்தியதாகவும் அதனை தான் ஏற்றுக்கொண்டதாகவும் நெடுமாறன் கூறியிருப்பது பொய்யாகும்  எனக் குற்றம் சாட்டியிருக்கிறார். அது உண்மையில்லை என்றால் நடத்தப்பட்ட மாநாட்டின் பெயரிலோ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிலுமோ தமிழீழம் என்ற சொல்லே இடம்பெறாமல் போனதற்கு யார் பொறுப்பு? மத்திய அமைச்சர் பொறுப்பு இல்லை என்று சொன்னால் இவர் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும். எதைக் கண்டு அஞ்சி அவர் இவ்வாறு செய்தார் என்பதையாவது வெளியிடவேண்டும்.
 நேற்றைய தினம் இந்திய நாடாளுமன்றத்திற்கு முன் தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக  மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் திடீரென கைவிடப்பட்டதற்கு பின்னணி என்ன? முன்பு முல்லைப்  பெரியாறு அணைப் பிரச்சினையில் மதுரையில் நடத்தவிருந்த பெரும் ஆர்ப்பாட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதே அதைப் போல இப்போதும் கைவிடப்பட்டிருக்கிறது. திரைமறைவில் நிர்பந்தம் செய்தது யார் பகிரங்கமாக வெளியிடும் துணிவு கருணாநிதிக்கு உண்டா? ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக  முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது நடத்திய டெசோ மாநாடும் எள்முனை  அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது. முதிர்ந்த வயதில் அதற்குத்தக்க பக்குவம் இல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளால் மற்றவர்கள் மீது வசைபாடுவது அவரையே திருப்பித் தாக்கும் என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறாரோ அவ்வளவுக்கு அவருக்கு நல்லது.

திங்கள், 3 செப்டம்பர், 2012

தமிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது

 தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல்தான். மெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது.
2001 செப்டம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன.அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிர டியாகக் கைப்பற்றி அதே விமானங் களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங் களைத் தாக்குதல் கருவியாகப் பயன் படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள்.இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இரட்டைக் கோபுரத்தில் மோதி 3000 வரையானோரைக் காவு கொண்டது. இன்னொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையினரின் தலைமையகம்  பென்டகன் மீது மோதிக் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தியது.நான்காவது விமானம் வெள்ளை மாளிகையை நோக்கிப் பறந்தபோது ஒரு வனப் பிரதேசத்தில் வீழ்ந்து நொறுங் கியது. 
இந்த நான்கு விமானங்களும் சரியாக 102 நிமிடங்களில் 3000த்திற்கும் கூடுதலான உயிர்களைக் குடித்தன. அடுத்த மாதத்தோடு இந்தப் பேரழிவுச் சம்பவம் நடந்து பதினொரு ஆண்டுகள் முடிகின்றன.கி.மு.கி.பி. என்பதைப் போல் காலத்தை அளவிடும் எல்லைக் கோடாக 9-11 மனித வரலாற்றில்  பதிவாகியுள்ளது.உலக நாடுகள் அனைத்திலும் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் தாக்கம் உணரப்படுகிறது. பாதுகாப்பு ஒழுங்குகள் இறுக்கப் பட்டுள்ளன. தாக்குதலின் போது அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் டிபிள்யூ புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற  முழக்கத்தை எழுப்பினார். பயங்கரவாதத்தை நசுக்கும் பொறுப்பை உலக நாடுகள் அனைத்தும் வகிக்க வேண்டும் என்று  கூறும் தீர்மானத்தை அமெரிக்கா ஐநாவில் உலக நாடுகளின் ஒப்புதலுடன் நிறை வேற்றியது.
அத்தோடு ஈராக், ஆப்கானிஸ் தான். ஆகிய நாடுகளுக்கு எதிரான போரையும் அமெரிக்க அரசு நேட்டோ நாடுகளின்  உதவியோடு முன்னெடுத் தது. மேற்கூறிய இரு நாடுகளுக்கு எதிரான போர் இன்று வரை தொடர் கிறது. இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்பு பயங்கரவாத அமைப் பாகப் பெருமளவு உலக நாடுகளால் பிரகடனம் செய்யப்பட்டது. அதே நாடுகள் புலிகள் அமைப்பைத் தடை செய்தன.புலிகள் அமைப்பிற்கு உதவுதல், நிதி வழங்கல், சார்பாகப் பேசுதல் போன்றவை பார தூரமான தண்டனைக்குரிய குற்றங் களாக - பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு அமைவாக  இயற்றப்பட்ட சட்டங்கள்  எனக் கூறித் தண்டித்தன.இன விடுதலைப் போராட்டங் களுக்கும் பயங்கரவாதச் செயல் களுக்கும் இடையிலான வித்தியாசத்தை உலக நாடுகள் பார்க்க மறுத்துவிட்டன. நீண்ட தூரம் பறக்கக் கூடிய சக்தி வாய்ந்த சிலின் ரக செக் தயாரிப்பு தாக்குதல் விமானங்களைத் தமது விமானப் படையில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது உலக நாடுகளின் கண்கள் திரும்பின.விமானப்படை வைத்திருந்த உலகின் ஒரேயொரு விடுதலை அமைப்பாகப் புலிகள் இடம்பெற்றனர். புலிகளைப்  பயங்கரவாதிகளாகச் சித்திரித்த சிங்களப் பேரினவாத அர சிற்கு உதவ 40 வரையான உலக நாடுகள் முன்வந்தன. சலுகை விலையில் அந்த நாடுகள் இலங்கை அரசிற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்தன. ஆளணி உதவிகளைச் செய்தன. தமக்கிடையிலான பகையை மறந்து ஒன்றுகூடி அரசுக்கு உதவின.எதிரும் புதிருமாக நின்ற இந்தியா, பாகிஸ்தான். சீனா போன்ற நாடுகள் தமிழீழ மக்களுக்கு விமோசனம் கிடைக்கக் கூடாது என்பதில் ஒற்றைக் கருத்துக் கொண்டிருந்தன.சமச்சீரற்ற போரில் விடுதலைப் புலிகள் இறுதி வரை தாக்குப் பிடித்தனர். இப்படி ஒன்று சேர்ந்த நாடுகள்  ஒவ்வொன்றிற்கும் தனித் தனியான உள்நோக்கங்கள் இருந்தன.
21ம் நூற்றாண்டின் அதியுச்ச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற் பகுதியாக இந்து மாகடல் இடம் பெறுகிறது.உலகின் மொத்த எண்ணெய் தேவையின் 25 விழுக்காடு வளைகுடா நாடுகளில் இருந்து கிழக்கு நோக்கி இந்து மாகடல் ஊடாகச் செல்கின்றன. மிக முக்கியமான ஆலைத் தயாரிப்புக்கள் இந்து மாகடல் ஊடாக மேற்கு நாடுகளுக்குச் செல்கின்றன. இந்து மாகடலின் மையப் பகுதியில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. இந்து மாகடலில் ஆதிக்கம் செய்யத் திட்டமிடும் வல்லரசு கட்டாயமாக இலங்கைத் தீவில் கால்பதிப்பதோடு திருகோணமலைத் துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க  வேண்டும்.1980 களில் தொடங்கி இன்று வரை இலங்கைத் தீவில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் இந்து  மாகடலின் முக்கிய கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் அமெரிக்கா, சீனா, இந்தியா நாடுகள் இடையே ஆதிக்கப் போட்டி நடக்கிறது.நான்காம் ஈழப் போர் 2006 சூலை 26ம் நாள் தொடங்கியது. இலங்கையில் ஆழமாகக் காலூன்றிய சீனா, இராணுவ. பொருளாதார ரீதியில் உதவ முன்வந்தது. சிங்கள அரசுக்கு உதவுவது மூலம் சீனாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நப்பாசையில் இந்திய உதவிகள் குவிந்தன.இலங்கையில் இடம் பிடித்தால் இந்தியாவின் தென் மாநிலங்கள் மீது தேவைப்படும்போது தாக்குதல் நடத்தலாம்  என்ற திட்டத்துடன் பாகிஸ்தான் இலங்கை அரசின் அணியில் இணைந் தது. பாகிஸ்தான் விமானிகள் இலங்கை  விமானப்படையின் கிபீர், மிக் விமானங் களில் ஓட்டியாக அமர்ந்து தமிழீழ இலக்குகளைத் தாக்கினர்.
ஏற்கனவே பூமத்திய ரேகைக்குத் தெற்கே இந்து மாகடலின் மத்திய பகுதியில் டீகோகார்சியா தீவில் அமெரிக்கா பாரிய குண்டு வீச்சு விமானங்கள் அடங்கிய இராணுவ தளத்தை அமைத்துள்ளது.ஆப்கானிஸ்தான், ஈராக் போர்க் களங்களில் ஈடுபட்ட அமெரிக்காவால் நேரடியாக இலங்கைப் போரில் பங்கு பற்ற முடியவில்லை. 1987ல் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்டது போல் இறுதிப் புலி இருக்கும் வரை அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போர் நடக்கும் என்ற அச்சத்தில் சிங்கள அரசிற்கு உதவுவது மூலம் புலிகளை அழிக்க முடியும் என்று அது திட்டமிட்டது.விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா சீனா, இந்தியா, ருஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் முனைப்பாகச் செயற்பட்டன. எத்தனை அப்பாவிகளை அழித்தேனும் விடு தலைப் புலிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவை உதவிகளை வழங்கின.வன்னியில் மனிதப் படுகொலை நடந்த போது உலக நாடுகளும் ஐ.நா.வும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தன. சிறிலங்காவின் போர் குற்றங்களில் ஐநாவுக்கும் பங்கு உண்டு. பல்வேறு தரு ணங்களில் அது போர் குற்றங்களுக்கு இடமளிக்கும் விதத்தில் செயற் பட்டுள்ளது.2008 செப்டம்பரில் ஜநா தனது வெளிநாட்டுப் பணியாளர்களை வன்னியில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.இது மனிதப் பேரழிவுக்கு இடமளித்தது. தமிழீழத்தில் நடந்தது தாய் மண்ணிற்கான போராட்டம். உலக அரங்கிலே தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டம் நடக்கிறது. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ் கிறார்களோ அங்கெல்லாம் தமிழீழத் திற்கான இறுதிப் போர் தொடங்கி விட்டது.தமிழகத்திலும் அது அரங்கேறு கிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீழ்ச்சி என்று சொல்வதை தமிழ் உணர்வு உள்ள ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஈழத் தமிழர்களின் பேச்சிலும் சிந்தனையிலும் ஈழப் போராட்டம் உயிர் மூச்சாகத் துடித்துக் கொண்டிருக் கிறது.தமிழீழம்  என்ற உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. அதனால் தடங் கல்களை எதிர்கொள்ள முடியும். காலப் போக்கில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்கு ஏற்பட்டி ருப்பது பின்னடைவே தவிரத் தோல்வி அல்ல. அல்லவே அல்ல.
ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கின்றது. பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. கொந்தளிப்பான பல சூழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கின்றது என்று தேசியத் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கிறார். 
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டங்களை கொண்டது ஆபிரிக்க கண்டம்.தெற்கு ஆபிரிக்காவில் வெள்ளை நிற வெறி அரசிற்கு எதிரான கறுப்பின மக்களின் போர் பல தசாப்தங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. அல்ஜீரியாவில் பிரான்சின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக 1954ல் தொடங்கிய ஆயுதப் போர் 1962ல் வெற்றிகரமாக முடிவுற்றது.
தெற்கு சூடான் மக்கள் முதலா வதாக ஜனநாயக முறையில் விடுதலைப் போர் நடத்தினார்கள். பிறகு ஆயுதம் தூக்கினார்கள். 25 வருட காலம் விடுதலைப் போராட்டம் வலிமையாக பல இழப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. 
தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமாகிவிட்டது.தமிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது. தளராத மனதுடன் சர்வதேச அரங்கில் இராச தந்திர முயற்சிகளை நகர்த்தி நாம் விடுதலை பெற முடியும்.
 

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !



உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! 

குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தை
குழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை 


அன்னையைக் கூட சென்னைக்கு அழைக்காதவர்
அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர் காமராசர் 


நானிலம் போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர்
நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர் காமராசர் 


கல்விப் புரட்சி பசுமைப் புரட்சி தொழில் புரட்சி
புரட்சிகள் பல புரிந்த புரட்சியாளர் காமராசர் 


அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர்
பாலங்கள் பல கட்டி மக்களைக் காத்தவர் காமராசர் 


முதல்வர் பதவியில் பெருமைகள்சேர்த்து முத்திரைப் பதித்தவர்
முதல்வர்களில் முதல்வராய் திகழ்ந்தவர் காமராசர் 


கருப்பு காந்தி என்று மக்களால் அழைக்கப் பட்டவர்
வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர் 


கதராடை மட்டுமே அவர் சேர்த்து வைத்த சொத்து
கல்வி கற்பித்ததால் கற்றவர்கள் யாவரும் சொத்து 


குப்பனும் சுப்பனும் கல்வி கற்றது அவராலே
உயர் பதவிகள் பெற்றதும் காமராசராலே 


பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
பெரியாரே நேசித்த பச்சைத் தமிழர் காமராசர் 


உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !
உனக்கு நிகர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை !


கவிஞர் இரா .இரவி

புதன், 18 ஜூலை, 2012

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! புகைபடங்கள்

- முள்ளிவாய்க்கால் - ஊரின் பெயரல்ல.

- உலகத் தமிழர்களின் கொதிப்புணர்வின் குறியீடு முள்ளிவாய்க்கால்.

- நமது சகோதரத் தமிழர்களைப் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்து சிங்கள இனவெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தின் இரத்த சாட்சியம் - முள்ளிவாய்க்கால்.

- தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் பதிந்திட்ட சொல் - முள்ளிவாய்க்கால்.

பழமையும் பெருமையும், பெருமிதமும் மிக்க தமிழர் வரலாற்றில் படிந்துவிட்ட இந்தத் துயரக் கறையைத் தமது உயிர்களைச் சிந்திக் கழுவ முன்வந்தனர் முத்துக்குமார் உட்பட 18 ஈக மறவர்கள்.

முள்ளிவாய்க்கால் மக்களையும், அவர்களுக்காகத் தீயில் கருகி தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த தீந்தமிழ் மறவர்களையும் என்றென்றும் மறவாமல் நினைவுத்தூண்கள் எழுப்புவதற்கான அடிக்கற்கள் நாட்டும் விழா கடந்த 2-6-10 அன்று தஞ்சையில் நடைபெற்றது.


 இராசராசசோழன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.



கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். - பழ.நெடுமாறன் -


இலங்கைப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழீழம் உருவாவதை விரைவில் காண வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காகத்தான் டெசோ மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்து 40 நாள்கள் ஆவதற்குள் அவர் பேச்சில் பொங்கி வந்த கோபம் மறைந்துவிட்டது. டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று இப்போது கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஓர் அங்கமாக விளங்கும் திமுக செய்ய வேண்டியதைச் செய்து ஈழத் தமிழர்களின் துயரைத் துடைக்காமல் இப்போது முச்சந்தியில் மாநாடு நடத்தி துயரைத் துடைக்கப் போவதாகக் கூறுவது பித்தலாட்டம். கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார் என்று தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

தமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும் : அனலை நிதிஸ் ச. குமாரன்


தமிழகத்தின் அனைத்து அமைப்புக்களும் தமது அட்டவணைகளுக்கு ஏற்றவாறே காய்களை நகர்த்துகிறார்கள். தமிழின முன்னேற்றத்திற்காக இவ் அமைப்புக்கள் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. சில அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாத்துறையினர் உட்பட பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களில் இறங்குவார்கள்.

பின்னர் அனைத்தும் மறைக்கப்படும் நிகழ்வுகளே அதிகமாக இருக்கிறது. சுய காரணங்களுக்காக தமிழகத்தில் இயங்கும் அமைப்புக்கள் தமிழின அழிவுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் நிச்சயம் தமிழினத்தை யாரினாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இனியாவது தமிழகத் தமிழர்கள் உணர்வார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்து வரும் தோல்விகளிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களை சென்றடையக் கூடிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதனை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார் கலைஞர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வீராப்புப் பேசிய ஜெயலலிதா தற்போது ஆழ்ந்த மௌனம் காக்கிறார். முன் எப்போதும் இல்லாதவாறு ஈழத் தமிழர்கள் இப்போது பல்வேறுபட்ட அடக்குமுறைகளைச் சந்தித்து நிற்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஆயுதமுனையில் பலம்பெற்று இருந்த வேளையில் தமிழர்களைக் கண்டாலே பயந்து ஒதுங்கிய தமிழினப் பகைவர்கள் தற்போது தமிழர்களை வதைப்படுத்துகிறார்கள். தமிழர் காணிகளில் தங்கியிருந்தே தமிழினத்தை அழிக்கும் செயற்பாடுகளை செய்கிறது சிங்களம். சமீபத்தில் சிறிலங்கா சென்று திரும்பிய இந்தியக் குழுவினர் கூட ஈழத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறைக்குள்ளையே வாழ்கிறார்கள் என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
தொலைநோக்கு சிந்தனை அவசியம்:
தமிழினம் அழியும்போது அவர்களைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இந்திய அரசு. அதற்கான அவசியமும் இந்திய மத்திய அரசுக்கு இல்லை. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒரு காலத்தில் தமிழர்களே அதிகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக தமிழர்களின் இருப்பை எப்படியேனும் குறைக்க வேண்டுமென்கிற வகையில் பல்வேறுபட்ட காரியங்களை மறைமுகமாக இந்திய அரசுகள் செய்தன.
திராவிடருக்கு பதிலாக ஆரியரை குடியேற்றுவதே இந்தியாவுக்கு சிறந்ததென நன்கே உணர்ந்து செயற்பட்டது இந்திய அரசு. இத்தீவுகள் தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. தமிழர்கள் அதிகளவில் இத்தீவுகளில் வாழ்ந்தால் ஒரு காலத்தில் தமிழ் நாட்டுடன் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய கடற்படையினரின் செல்வாக்கு பாதிக்கும் என்கிற பயம் இந்திய அரசுக்கு இருக்கிறது. இதன் காரணத்தினாலேயே தனக்கு விசுவாசமான வங்காளிகளை அதிகளவில் குடியேற்றி உள்ளது இந்தியா.
மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கிழக்கு பாகிஸ்தானை 1970-களில் பிரித்து பங்களாதேஷ் என்கிற நாட்டை அமைத்துக் கொடுத்தது இந்திய அரசு. பங்களாதேஷ் எப்போதும் இந்தியாவுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்பது இந்தியாவின் கருத்து. வங்காளிகள் தமது இனத்தை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்களுடன் தோழமை கொள்வது இந்தியாவின் நலனுக்கே நல்லது என்கிற கருத்தையே இந்திய அரசு வைத்துள்ளது. ஒரு நேரம் சாப்பாடு இருந்தால் போதும், சினிமாப் படங்கள் தினமும் வெளிவந்தால் போதும், தூங்க ஒரு குடிசை இருந்தால் போதும், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ்ந்தால் மட்டும் போதும் என்கிற நிலைப்பாட்டையே வைத்துள்ளார்கள் பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள்.
இனம் அழியும்போது மௌனம் வேண்டாம்:
தமிழகத்தின் குரல் சற்று ஒலிக்கத் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசுடன் பேசுவதும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது இந்திய அரசு. தமிழக மக்கள் சற்று கொதித்தெழுந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை ஜெனிவாவில் எடுக்க வேண்டுமென்றவுடன், இந்திய அரசு தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை அன்று எடுத்தது. இந்நிலைப்பாட்டினால் சிறிலங்கா அரசின் பகையை சம்பாதிக்க வேண்டி வந்தது.
சிறிலங்காவை எப்படியேனும் அமைதிப்படுத்த வேண்டுமென்கிற காரணத்தினால் பல காரியங்களை அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு செய்து வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், முன்னாள் குடியரசுத் தலைவர் உட்பட பல முன்னணி இராஜதந்திரிகளை சிறிலங்காவுக்கு அனுப்பி மகிந்தாவை சமாதானப்படுத்த முயன்றது இந்தியா. இந்தியாவினால் தெரிவிக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசு சீனாவுடன் அதி நெருங்கிய உறவுகளைப் பேண ஆரம்பித்தது. இவைகளை சரிசெய்யவே சிறிலங்காவுக்கு ஆதரவான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் போன்றவர்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்துகிறது இந்திய அரசு.
இனமொன்று சிறிலங்காவில் அழியும் போது தொப்புள்கொடி உறவான தமிழகம் வெறும் வாய்மூடி மௌனியாக இருப்பது தாய் தமிழகத்துக்கும் நல்லதில்லை. உலகம் பூராகவும் பரந்துவிரிந்து வாழும் தமிழர்களுக்கும் நல்லதில்லை. குறைந்தது ஒரு மாநில அதிகார உரிமையையாவது வைத்துள்ள தமிழகம் இந்திய அரசை வற்புறுத்தி தன் இனம் சார்ந்த நலன்களுக்கு ஏற்றவாறான வேலைகளை செய்வதே சிறந்தது. அதைவிடுத்து மௌனம் காத்தால் நிச்சயம் தமிழரை காப்பாற்ற யாராலும் முடியாமல் போய்விடும்.
அதிகாரத்தில் இல்லாத போது ஏதாவது ஒன்றைக் கூறுவது பின்னர் அதிகாரத்துக்கு வந்தவுடன் மௌனம் காப்பது எந்தவிதத்திலும் நல்லது அல்ல. கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோது ஈழத் தமிழினம் அழிவதைக்கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். ஆட்சியில் இல்லாத போது தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்கிற பாணியில் இப்போது பேசிவருகிறார். அதைப்போலவே ஜெயலலிதாவும் ஆட்சியில் இல்லாதபோது ஈழத் தமிழருக்கு இன்னல் நேர்ந்தால் தரணியே தாங்காது என்கிற பாணியில் பேசினார். தற்போது ஆட்சியில் இருக்கும்போது சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இல்லை.
தமிழக சிறைகளில் ஏராளமான ஈழத் தமிழ் இளைஞர் யுவதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளர்கள். பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜெயலலிதா போன்றவர்களினால் எவ்வாறு தமிழீழத்தைப் பெற்றுத்தர உதவியாக இருப்பார்கள் என்கிற கேள்வியே மேலோங்கியுள்ளது.
தமிழகம் கிளந்தெழுந்து தமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவான நிலைப்பாடை எப்போது ஒட்டுமொத்தமாக எடுக்க முன்வருகிறார்களோ அதுவரை தமிழனுக்கு விடிவே இல்லை. தமிழகம் கிளந்தெழுந்து போராடினால் அடுத்த கணமே இந்திய அரசினால் தமிழீழத்தைப் பெற்றுத்தர முடியும். கள நிலைமைகள் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சிக்கு ஆதரவாக இருக்கும் போது அவர்கள் மௌனம் காப்பது தமிழினம் செய்த சாபக்கேடே.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com