மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மறைத்துப் பேசுகிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி!


பாய்கிறார் பழ.நெடுமாறன்
'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மரண தண்​டனைக் கைதிகள் மூவருக்குநீதி வழங்க வேண்டும்’ என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள் என வரிசையாக உரிமை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கெனவே, ராஜீவ் கொலை வழக்கில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க... அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று 19 பேரை உயிருடன் மீட்டது,  '26 தமிழர் உயிர் காப்புக் குழு.’ அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்​பட்ட பழ.நெடுமாறனிடம் சில கேள்விகளை முன்​வைத்தோம்!
''இந்த விவகாரத்தில் நடந்தது, நடப்பது என்ன?''
''இந்த வழக்கை தடா நீதிமன்றத்தில் விசாரித்த முறையே அடிப்படையில் தவ​றானது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலை வழக்குகளில்கூட, ரகசியமாக அல்ல, பகிரங்கமாகத்தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையோ மூடுமந்திரத்தைப்போல பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. விசாரணையில் பத்திரிகையாளர், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. 26 தமிழர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களும் மிரட்டப்பட்டனர்.
தடா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த நீதிபதி சித்திக் திடீரென மாற்றப்பட்டு, நவநீதம் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டு​களில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓர் ஆண்டு காலத்திலேயே படித்தறிந்து, 26 பேருக்கு அவர் தூக்குத் தண்டனையை விதித்தார். இது மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது.  உச்ச நீதிமன்​றத்தின் மூன்று நீதிபதிகள் இதை விசாரித்து, 19 பேரை விடுதலை செய்தனர். மூன்று நபர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.  சிறந்த வழக்​கறிஞர் என்.நடராஜன் மூலம் உச்ச நீதிமன்றத்தில்மேல் முறை​யீடு செய்தோம். அப்படிச் செய்​திருக்​காவிட்டால், 26 தமிழர்​களின் உயிர்களும் பறிக்கப்பட்டு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
'ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது செல்லாது’ என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதே தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது முரண்பாடானது அல்லவா? உச்ச நீதிமன்றத்தால் நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே, 'தமிழர் உயிர்காப்புக் குழு’வின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பெற்றோம். 'தமிழக அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் முடிவெடுக்க முடியுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ, கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நான்கு பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பெற்றுத் தந்தோம். ஆனால், அதை வைத்து அவர் எதுவுமே செய்யவில்லை.
'ராஜீவ் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளன’ என்று ஜெயின் கமிஷன் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளை  உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்னும் தன் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்பது முக்கியமானது. இப்போது, (நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது) மூன்று பேரின் மரண தண்டனை ஒருவேளை நிறைவேற்றப்படுமானால், அதன் பிறகு இந்தக் கண்காணிப்புக் குழு தரும் அறிக்கையில், வேறு சிலர்தான் உண்மைக் குற்றவாளிகள் என சுட்டிக்​காட்டப்படுவார்கள். அப்போது, இழந்துபோன உயிர்களை மீட்க முடியுமா? அப்படி ஒரு நிலையை மனிதாபிமானம் உள்ள யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா? எனவே, பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை மூன்று தமிழர்களின் மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்.''
''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். சி.பி.ஐ. ரகோத்தமனோ, கண்காணிப்புக் குழு அமைக்கப்​பட்டதற்கு வேறு காரணம் என்கிறாரே?''
''எதற்காக அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது? 'இந்தக் கொலையில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டு; அவர்களைப்பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதற்காகத்தானே இந்தக் கண்காணிப்புக் குழுவை அமைத்தார்கள். அதை மறைத்தும் மழுப்பியும் பேசுகிறார் இந்த அதிகாரி!''
''மூவரின் உயிரைக் காக்க, சட்டரீதியான முயற்சிகள் என்ன? உங்கள் அடுத்தகட்டத் திட்டம்எது?'’
''மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட முயற்சிகள்பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க... மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!''
- இரா.தமிழ்க்கனல்                                                                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக