மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

'கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!' : தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்



ஃபிரான்ஸ் நாட்டு அரச நாற்காலியில் அமர்ந்த மாவீரன் நெப்போலியன் தன் மனைவி ஜோசபைனுக்கு வரைந்த காதல் கடிதத்தில், 'அன்பே, உன்னைக் காதலித்து உள்ளம் உருகாமல் ஒரு நாளைக்கூட நான் கழித்தது இல்லை. உன்னை நினைவுகளால் தழுவி மகிழாமல் ஓர் இரவைக்கூட நான் வீணாக்கியது இல்லை’ என்று குறிப்பிட்டான். நம் அரசியல்வாதிகளும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒரு நாளையும் கழித்தது இல்லை; பணப் பெட்டியின் ஸ்பரிசம் இல்லாமல் ஓர் இரவையும் வீணாக்குவது இல்லை.
எந்த மனிதனும் காதலிக்காமல் கண் மூடுவது இல்லை. பெண்ணைக் காதலிக்காதவன் கடவுளைக் காதலிக்கிறான். இருவரையுமே காதலிக்காதவன் ஒரு கட்சியின் தலைமையைக் காதலிக்கிறான். கட்சித் தலைமை அவனுடைய காதலில் நெகிழ்ந்து, பரிசாகக் கொடுத்த பதவியின் மேல், பின்னர் அவனுடைய காதல் கனிகிறது. கால நடையில் பதவியின் மூலம் வந்து சேரும் பணத்தின் மீது அவன்கொண்ட காதல், பல்கிப் பெருகி அவனைப் பைத்தியமாக்கிவிடுகிறது. லைலாவின் மீதுகொண்ட காதலால் பைத்தியம் பிடித்துப் பாலை நிலத்தில் அலைந்து திரிந்த சயசுக்கு, மான அவமானம் குறித்த பிரக்ஞைஅற்றுப் போனதுபோல், பணத்தின் மீது படிந்துவிட்ட வெறித்தனமான காதலால், நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் மான அவமானம் குறித்த பிரக்ஞை முற்றாக மரத்துப்போய்விட்டது. ஊழல்தான் அரசியல்வாதிகளின் அன்பிற்குரிய காதலி. ஊழலில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, ஊழலில் வாழ்ந்து, ஊழலிலேயே ஐக்கியமாவதுதான் இன்றைய அரசியல்வாதியின் இலக்கணம்!
'ஊழல்தான் நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் பெரு நோய்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வாய் மலர்ந்து இருக்கிறார். அந்த நோயைத் தீர்க்க எந்த மருந்தும் அவரிடம் இல்லை என்பதுதான் நாடு செய்த பாவம். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். ஊழலை ஊழலால் ஒழிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் ஊழல் குறித்துச் சிந்திப்பதற்கே நேரம் இல்லாத ஞானச் சித்தர்களாகிவிட்டனர் நம் மக்கள். எய்ட்ஸ் நோயைவிட மிகவும் கொடியது ஊழல் நோய் என்று இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
'ஊழல்... ஜனநாயகத்தின் உயிரைப் பறிக்கும்; நேர்மையான ஆட்சி முறையை நிர்மூலமாக்கும்’ என்ற உண்மையை எப்போது நாம் உணரப் போகிறோம்? அடித்த கொள்ளையில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் போதும் என்று நினைக்கும் நிலைக்கு நாம் இழிந்துவிட்டோமே!
ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள் வறுமையில் வாடுவதற்கு முதற் காரணம், அங்கு உள்ள ஆட்சியாளர்களே. நைஜீரியாவில் மட்டும் மக்களின் வளம் சுரண்டப்பட்டு, 400 பில்லியன் டாலர் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிகமான கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்திருக்கும் 'பெருமை’ நம் நாட்டுக்குத்தான் வாய்த்திருக்கிறது. 'வறுமையே வெளியேறு’ என்று வாய் கிழிய முழங்குபவர்களும், 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண’ முயல்பவர்களும் சொந்த மண்ணில் சுரண்டிய பணத்தை அந்நிய மண்ணில் அடுக்கிவைத்துள்ளனர். உலகக் கறுப்புப் பணத்தில் இந்தியர்களின் பணம் 60 சதவிகிதமாம். 'பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே. போற்றுவோம் இதை எமக்கில்லை ஈடே’!
வெள்ளையர் நம் மண்ணை ஆண்டபோதே நம் அரசியல்வாதிகளில் சிலருக்கு ஊழல் தேவதையின் மீது காதல் கனிந்துவிட்டது. காங்கிரஸ் 1937-ல் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த மாகாணங்களில் ஊழல் உருப்பெற்றபோது மகாத்மா காந்தி, 'ஊழலின் முடை நாற்றம் பெருகுமானால், காங்கிரஸ் கட்சிக்கு நானே கல்லறை கட்டிவிடுவேன்’ என்றார். நாடு விடுதலை அடைந்த பின்பும், 1948 ஜனவரி 12-ம் நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆந்திராவில் இருந்து பழம் பெரும் தியாகி வெங்கடப்பய்யா தனக்கு எழுதிய கடிதத்தைப் பகிரங்கமாகப் படித்தார் அண்ணல் காந்தி.
'மிகவும் சிக்கலான அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அடுத்து மிகப் பெரிய பிரச்னை காங்கிரஸ்காரர்கள் தார்மீகரீதியாகத் தாழ்ந்துபோய் இருப்பது தான். அரசியல் அதிகாரத்தின் ருசி அவர் களின் தலைக்கேறிவிட்டது. எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி-க்கள் நடவடிக்கைகளும், மந்திரிகளின் பலவீனங்களும் மக்களிடையே கலக உணர்வை ஊட்டி வருகின்றன. வெள்ளைக்காரர்களின் அரசாங்கமே பரவாயில்லை என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்’ என்று வெங்கடப்பய்யா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். நேரு காலத்தில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த ஊழல், மன்மோகன் சிங் காலத்தில் ஊழித் தாண்டவம் புரிகிறது!
நேர்மைக்குப் பெயர் பெற்ற அதிகாரி கோர்வாலா என்பவரிடம் நிர்வாகத் திறன் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி நேருவின் அரசு வேண்டியது. கோர்வாலா சமர்ப்பித்த அறிக்கையில், 'நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும், ஊழல் அமைச்சர்களைப் பாதுகாக்க நேருவின் அரசு நியாயத்தின் வழி மீறிச் செல்வதாகவும் நெஞ்சுரத்துடன் குறிப்பிட்டார். ஊழலின் நிழல்படாத நேரு அன்று நட்புக்காகப் பழி சுமந்தார். ஊழலில் ஈடுபடாத மன்மோகன் சிங், சோனியா காந்தி தந்த பதவிக்காக இன்று தெரிந்தே பழி சுமக்கிறார்.
ஊழலும் உறவுகளுக்குக் காட்டிய சலுகைகளும்தான் ரோமப் பேரரசை வீழ்த்தியது; பிரெஞ்சுப் புரட்சிக்கு வழி வகுத்தது; ருஷ்யப் புரட்சிக்கு வித்தூன்றியது; சீனாவில் சியாங்காய் ஷேக்கின் ஆட்சிக்கு முடிவு கட்டியது என்ற வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளக்கூட நம் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை.
'சிற்றின்பலோலர்களும், ஆடம்பரப் பிரியர்களும் நம் அரசியல் உலகை ஆக்கிரமித்துக்கொண்டனர்’ என்று சுந்தர ராமசாமி எழுதியது எவ்வளவு பெரிய உண்மை!
'மண்ணின்பம், பெண்ணின்பம், பொன்னின்பம் மூன்றும் எல்லையற்று அனுபவிக்க வேண்டும். அதற்கு அளவற்ற பணம் அவசியம். அதை எந்த வழியில் திரட்டினாலும் தவறு இல்லை. ஆளப்படுவோரின் உள்ளங்களில் முறை தவறிய ஆசைகளை வளர்த்துவிட்டால், ஆள்பவரின் ஊழல் அசிங்கங்களுக்கு எதிராக எந்தக் கிளர்ச்சியும் வளர்ச்சி பெறாது. ஊழல் நாயகர்கள்கூட 'தகத்தகாய கதிரவன்’களாக சமூக வீதிகளில் கொஞ்சமும் கூச்சமற்றுப் பேருலா வரலாம்’ என்று புறப்பட்டுவிட்ட யுக புருஷர்களின் முற்றுகையில், அரசியல் உலகம் சிறைபட்டுவிட்டது. அதிகார வர்க்கம் திருட்டுத் தேனைச் சுவைத்தபடி பல்லக்குத் தூக்கப் பழகிவிட்டது. பெரும் தொழிலதிபர்கள் நீரா ராடியா போன்ற சாதுர்ய சாகசப் பெண்மணிகள் மூலம் அரசின் முடிவுகளைத் தங்க ளுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் கலையைக் கற்றுத் தேர்ந்துவிட்டனர். பாவம், பாரதப் புத்திரர்கள் மட்டும் கந்தல் ஆடையும், கிழிந்த பாயும், கஞ்சிக் கலயமும் மட்டும் சொத்தாகக் கொண்டு 'சுகித்துக்’கிடக்கின்றனர்.
'நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, காரண காரியங்களோடு சமாதானம் கூற முடியாத காரியங்களை நாம் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றார் காந்தி. அந்த ஆயிரம் ஆண்கள், பெண்களின் கண்களில் கறுப்புத் துணி கட்டும் துணிவை இந்த அக்கிரமக்காரர்களுக்கு யார் கொடுத்தது? உங்கள் கண்களை 'கறுப்புத் துணி’ மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
 
 
 
 
unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக