மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ஜி.டி.பி. என்றால்? - அடிப்படை...

.ஜி.டி.பி. என்றால்? - அடிப்படை...

''போன வருஷம் ஒரே ஒரு மாருதி கார்தான் வச்சிருந்தாரு. இப்ப ஸ்விஃப்ட், ஐ10, இண்டிகான்னு மூணு காரை வாங்கிட்டாரே...!''
''இரண்டு வருஷத்துக்கு முன்னாடிகூட வாடகை வீட்லதான் குடியிருந்தாரு. இப்ப பங்களா மாதிரி வீடு வாங்கிட்டாரே...!''
யாரைப் பற்றியாவது இப்படி பலரும் சொல்லி வியப்பதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? சம்பந்தப்பட்ட நபர் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் சொத்து பத்துகள் அதிகரித்திருப்பதை, வசதி வாய்ப்புகள் கூடியிருப்பதை அவர் களின் பொருளாதார முன்னேற்றத் துக்கான ஓர் அடையாளமாகச் சொல்கிறோம்.
இது போல ஒரு நாடு முன்னேறுகிறதா, இல்லையா என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு எளிய அளவீடுதான் ஜி.டி.பி. அதாவது, (Gross Domestic Product.) தமிழில் இதை 'ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி’ என்கிறோம். 
இந்த ஜி.டி.பி-யை எப்படி அளவிடுகிறார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக விளக்கிவிட முடியாது. காரணம், உற்பத்தி, விற்பனை என பல விஷயங்களை உள்ளடக்கியது இது. ஜி.டி.பி. என்பது ஓர் ஆண்டின் அனைத்து சேவை மற்றும் உற்பத்தியான பொருட்களின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படுகிறது. உற்பத்தி முறை (Output approach), செலவீன முறை, வருமான முறை என பல முறைகளின் அடிப்படையில் இந்த ஜி.டி.பி. கணக்கிடப்படுகிறது.
வருமான முறை என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கணக்கிடும் முறையாகும். செலவீன முறை என்பது தனிமனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவது. இந்தியாவில் செலவீன முறையைக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு வருகின்றனர்.
செலவீன முறையின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இப்படித்தான் கணக்கிடுகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + (ஏற்றுமதி - இறங்குமதி)
நுகர்வு என்பது தனிப்பட்ட மனிதனின் உணவு, பொழுதுபோக்கு, மருத்துவம் முதலான சொந்தச் செலவுகளைக் குறிக்கும்.
முதலீடு என்பது ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான செலவைக் குறிக்கும். தொழிற்சாலைக்கு இடம் வாங்குதல், மென்பொருள் களுக்கு காப்புரிமை பெறுதல், உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றைக் குறிக்கும்.
அரசு செலவினங்கள் என்பது ஒரு நாட்டின் அரசு, அதன் மக்களுக்கும் ராணுவத்திற்கும் மற்றும் இதர அம்சங்களுக்கும் செய்யும் செலவின் மதிப்பீட்டைக் குறிக்கிறது.
ஏற்றுமதி, இறக்குமதி பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாக ஒரு நாட்டின் ஜி.டி.பி-யானது சென்ற ஆண்டு அல்லது கடைசியாக வெளியான காலாண்டு முடிவோடு ஒப்பிட்டுச் சொல்லப்படும். எடுத்துக் காட்டாக, ஒரு நாட்டின் ஜி.டி.பி. 5% உயர்கிறது எனில், அந்த நாடு கடந்த ஆண்டைவிட பொருளாதார ரீதியில் 5% வளர்ந்திருப்பதாக அர்த்தம்.                                                 



unarchitamilan

வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஆண்களின் உலகம்!

ஆண்களின் உலகம்!- பாரதி தம்பி
ஓவியங்கள்: ஸ்யாம்
ண்மைக் காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப்போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை நண்பர்களுக்காகச் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்க இயலாமல் போனதற்காக தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிர வில் கண்ணீர்விட்ட தோழனுமாக... அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப் பேரைக் காண்கிறேன்!
எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டு இருக்கிறது. இது முழுப் பொய் இல்லை. ஆனால், முழு உண்மையும் இல்லை.
முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ-யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, 27பி-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையோ பேர்! படித்தவர்கள்தான் என்றாலும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. முதல் தலைமுறையில் கல்வி பெற்ற நடுத்தர வர்க்க இளைஞர்கள், நகரங்களில் தடுமாறித்தான் போகின்றனர். 21 வயதில் டிகிரி முடித்து வேலை தேடி வருபவர்கள், டெலி மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப், பி.பி.ஓ., என மெதுவாக மேலே ஏறி ஒரு நிலையை எட்டுவதற்குள் முன் நெற்றியில் முடி கொட்டிவிடுகிறது. இளமையின் எந்த சுகங்களையும் அனுபவித்திடாத முதல் தலைமுறை இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம்! 
''காலேஜ் முடிச்சதும் கஷ்டமோ, நஷ்டமோ... எல்லாப் பசங்களையும்போல ரெண்டு வருஷம் ஜாலியா சுத்திரணும்டா, அந்தந்த வயசுல அப்படி அப்படி இருந்திரணும். குடும்ப நிலைமைன்னு வேலைக்கு வந்தோம். எட்டு வருஷமாச்சு. நிமிர்ந்து பார்த்தா, நம்ம வயசு இருக்கும்னு நினைக்குற பசங்க சட்டுனு நம்மளை 'அண்ணா’ன்னு கூப்பிடுறானுங்க. தூக்கி வாரிப் போடுது. அவன் அந்தண்டை நகர்ந்த பிறகு, கண்ணாடி முன் கவலையா நிக்கச் சொல்லுது. என்னிக்காச்சும் ஒரு பொண்ணு, 'அங்கிள்’னு கூப்பிட்டுருமோன்னு பயமா இருக்கு!'' எனச் சிரிப்பவனின் பெயர் பிரவீன். தி.நகர் முருகன் இட்லிக் கடை வாசலிலோ, சரவணபவன் வாசலிலோ அவனை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். தடித் தடியாக டிக்ஷனரி விற்றுக்கொண்டு இருப்பான். மாதம் பிறந்தால் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. மூன்று இருக்கிறது பிரவீனுக்கு! இப்படிப்பட்ட பெரும்பாலானோருக்குப் பின்னால் ஒரு காதல் தோல்விக் கதை இருக்கும். அதற்குக் காரணம், குடும்பமாக இருக்கும்.
'குடும்பம் எதிர்த்ததால் காதல் தோல்வி’ என்பது அல்ல... குடும்பத்தின் நிலை அறிந்து, அவர்களே தான் விரும்பிய பெண்ணிடம் காதலைச் சொல்வதுகூட இல்லை. இந்தக் காரணத்தையும் ஆண்கள் வெளிப்படையாகச் சொல்வது இல்லை. காரணம், 'ஆண்’ என்ற கெத்து அவர்களைத் தடுக்கிறது. இணை, இணையாகச் சுற்றுபவர்களைக் காட்டிலும், இப்படி மனதுக்குள் கருகிப் போன காதல்களோடு, வேலை முடிந்த பின்னிரவில் முகம் அறியாப் பெண்களுடன் காதலும் காமமுமாகப் பேசித் திரியும் ஆண்கள்தான் எத்தனை, எத்தனை பேர்?!
ஆண்கள் குடும்பத்தைப்பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நண்பர்களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகபட்சம், இரண்டாவது பியரில் 'ஒரு மேட்டர் மச்சான்...’ என மனசைத் திறந்து சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண் களேதான். சினிமாவில் சித்திரிப்பதுபோல, பெண்கள் அல்ல!
 ஆனால், குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம் தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் தங்கள் நண்பர்களிடமே பகிர்கின்றனர்.
மேன்ஷன் போன்ற இடங்களில் ஆண்களின் உலகத்தை மேலும் நெருக்கமாக அறியலாம். ஏதேதோ திசையில் இருந்து ஓர் அறையில் அறிமுகம் இன்றி வந்து தங்கும் இளைஞர்களுக்கு இடையேயான நட்பின் அடர்த்தி, கூடக் குறைய இருக்கலாம். ஆனால், யார் ஒருவரும் மற்றவர்களைச் சாப் பிடாமல் தூங்கவிடுவது இல்லை. மாசக் கடைசியில்கூட, 'உனக்கு இதே வேலையாப் போச்சுடா!’ எனத் திட்டிக்கொண்டேயாவது ஒரு முட்டை பரோட்டா பார்சல் வாங்கி வந்துவிடுவார்கள்.
இப்போது நிறைய ஐ.டி. இளைஞர்கள் இரவையும் பகலையும் கடந்து வேலை பார்க் கின்றனர். அதிக சம்பளம், அதை அவர்கள் செலவழிக்கும் விதத்தால் வீட்டு வாடகை உயர்வு போன்ற பிரச்னைகள் எல்லாம் ஒரு பக்கம். ஆனால், அவர்களை வீடும் உறவும் உண்மையில் பணம் காய்க்கும் எந்திரமாக அல்லவா பார்க்கின்றன. ஐ.டி. இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறை, வீட்டுக்கும் உறவு களுக்கும் கலாசாரரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், அவர்கள் ஈட்டும் அதிகப் பணமே அதற்கான அங்கீகாரமாக மாறுகிறது.
ஆனால், ஐ.டி. வேலை எல்லோருக்கும் கிடைப்பது இல்லையே?! தமிழ்நாடு முழுவதும் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாகப் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரியில் படித்துவிட்டு வந்தார்கள்? 'இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச் சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தின வாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்கள். 'உன் வீட்டுக்காரர் எங்கே வேலை பாக்குறார்?’ எனக் கேட்டால், அவர்களின் மனைவிகள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர் கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாகத் தலை அசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.
கிருஷ்ணகுமார் என்ற நண்பருக்கு 35 தாண்டிய வயது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தில் இருந்து தினமும் சென்னை வடபழனிக்கு வேலைக்கு வருகிறார். வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள், அங்கே இருந்து கிண்டி வரை மின்சார ரயில், கிண்டி டு வடபழனி நகரப் பேருந்து... மாலை வீடு திரும்புகையில் இதே சுற்று பஸ்-டிரெயின்-சைக்கிள் என்பதாக முடியும். காலை 6 மணிக் குக் கிளம்பினால், இரவு வீடு திரும்ப 10 மணி ஆகும். உழைக்கும் எந்திரமாக மாறிவிட்டார். இரண்டு ரூபாய் அதிகம் என்பதனால், இஞ்சி டீ கூடக் குடிக்க மாட்டார்! டிராஃபிக் அதிக மாகி இருந்த நாள் ஒன்றில், என் வண்டியில் கிண்டி வரை வந்தார்.
தனக்கு ஒரே ஒரு தங்கை எனவும், அவளைத் திருமணம் செய்துகொடுத்த இடத்தில் கடுமை யான பிரச்னை எனவும் சொன்னார். நான் அதிகம் கேட்கவில்லை.
''ரொம்பப் பிரச்னை ஆயிடுச்சு சார். வேற வழி இல்லாம டைவர்ஸ் வாங்கினோம். ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு இப்போ தான் இன்னொரு பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சேன்!'' என்றவரிடம் பெரிய ஆசுவாசம் தெரிந்தது.
இந்த வயதில்தான் அவர் குடும்பப் பொறுப்புகளில் இருந்து விடுதலை ஆகியிருக் கிறார். ''நீங்க எதுவாச்சும் ஆகணும்னு ஆசைப்பட்டீங்களா?'' என்றேன். சிரித்தார். ''ஆசைக்கு என்ன சார், இப்போகூட ஆசைப்பட்டுக்க வேண்டியதுதான். ஆசைதானே?!''
உண்மையில் வரதட்சணை, வீண் ஆடம்பரம், நகைகளை வாங்கிச் சேர்ப்பது போன்றவை ஆண்களை நசுக்கிப் பிழிகிறது. அதற்கேற்ற வகையில் சம்பாதிக்க முடியாமல் போனால், வாழவே தகுதி இல்லையோ என அவர்களைக் குற்றவுணர்வு அடையவைக்கும் அளவில்தான் இருக்கிறது சூழல். நமது மோசமான குடும்ப அமைப்பு, உறவுகளாலும், அதைவிட அதிகமாக பணத்தாலும் பின்னப்பட்டு இருக்கிறது. அந்த பாரத்தை ஆண்கள் விருப்பப்பட்டு அல்ல, வருத்தப்பட்டே சுமக்கின்றனர்.
நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், ஊர் மெச்சும் வாழ்வு... இவை எல்லாம் தர முடியாத ஆண், தரக்குறைவானவன் என பொதுப் புத்தி நினைக்கிறது. கிடைக்கும் வேலையைச் சரியாகச் செய்து, வரும் வருமானத்தில் திருப்தியுடன் வாழ்வதை யாரும் விரும்புவதும் இல்லை, பரிந்துரைப்பதும் இல்லை!
ஊரில் நிலத்தை, நகைகளை அடகுவைத்து ஏஜென்ட்டிடம் பணம் கட்டி சிங்கப்பூரிலும், வளைகுடா நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வேலை பார்ப்பவர்கள் லட்சங்களைத் தாண்டுவார்கள். முதல் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து, வெளிநாடு செல்வதற்கு வாங்கிய கடனை அடைப்பார்கள். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து கோடாலித் தைலமும், சென்ட் பாட்டிலும் பரிசளித்துவிட்டு, மறுபடியும் ஃப்ளைட் பிடித்தால், அடுத்த இரண்டு வருட வருமானம் வீடு கட்டவே போதாது. அப்புறம் தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணம் என முடித்து நிமிரும்போது, அப்போதுதான் உள்ளூரில் நல்ல விலைக்கு நிலம் விலைக்கு வரும். கடன் வாங்கி அதை வாங்கிவிட்டு, கடல் கடந்தால், அதற்கு இரண்டு வருடங்கள். இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து திருமணம் முடித்து, தாம்பத்தியம் நடத்தி வெளிநாடு போனால், சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கையில் முகத் தோல் தடித்து, கன்னக்கதுப்புகளில் முதிர்ச்சி படிந்து இருக்கும்!
இவை எவற்றையும் பாரமாகவும் துக்கமாகவும் எந்த ஆணும் நினைப்பது இல்லை. ஆனால், இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆணை விமர்சிக்கவும், ஒதுக்கித்தள்ளவுமான கருவியாக எல்லோரும் கைக்கொள்வது, அவனது ஒழுக்கத்தை. குறிப்பாக, 'சாராயம் குடிக்கின்றனர், சிகரெட் பிடிக்கின்றனர்’ என்பது. உண்மையில், இவை உடல்நலம் கெடுக்கும் தவறான பழக்கங்களே.
ஆனால், சமூகத்தில் ஓர் ஆணின் நல்மதிப்பை அளவிட இவற்றை மட்டுமே அளவுகோல்களாகக் கருத முடியாது. காஞ்சிபுரத்தில் இறைவன் சந்நிதியில் பெண்களுடன் சல்லாபம் நடத்திய தேவநாதனுக்கு சாராயம், சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. ஊரே சிரிக்கும் நித்யானந்தாவுக்கு டீ குடிக்கும் பழக்கம்கூட இல்லையாம். இந்த ஆண்களின் சமூக மதிப்பை எப்படி வரையறுப்பது?
ஆண்களை Victim-களாகச் சித்திரித்து அவர்களின் ஆதிக்கத்தன்மையை நியாயப்படுத்துவது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். மேற்சொன்ன ஆண் துயரங்கள் போன்றவை இன்னும் அதிக விழுக்காட்டில் பெண்களுக்கும் உண்டு. ஆணின் உலகை இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் புரிந்துகொள்வோம் என்பதே இந்தக் குரலின் அடிநாதம்!
* ஆனந்த விகடன் 23-02-2011
 


unarchitamilan

என் ஊர்! - தஞ்சாவூர்



ன்றைவிட்டு நீங்கும்போதுதான் அதன் அருமை தெரிய வரும் என்பார்கள். உண்மையில், ஊரும் அதன் நினைவுகளும் அத்தகையதே!
ஒரு காலம் வரை சோறுடைத்த சோழ வள நாடு என்ற பெருமை தாங்கிய தஞ்சாவூர்தான் எனக்குப் பூர்வீகம். நான் பார்த்து வளர்ந்த தஞ்சாவூர், வளமையைத் துறந்து வறுமை பூண்டு இருந்தது. தி.ஜானகிராமனின் எழுத்துக் களில் வாசித்த இயற்கையும், வனப்பும் இல்லாமல் போயிருந்தன. தஞ்சை நகரத்தில்தான் என் கால்கள் தோயத்தோய நடந்து திரிந்தன.
கீழ ராஜ வீதியில், எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் ரப்பர் ஸ்டாம்பு செய்து தரும் கடை வைத்திருந்தார். அந்தக் கடையில் தொழிலுக்குப் பதிலாக இலக்கியம் நடந்துகொண்டு இருந்தது. தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் பலரும் அந்தக் கடைக்கு ஒருமுறையாவது வந்து இருப்பார்கள். ப்ரகாஷை எல்லோரும் ஆசான் என்றே அழைப்பார்கள். நான் அவரை அவ்விதம் அழைக்காமல் 'அய்யா’ என்றே விளிப்பேன். அவருடைய பரிச்சயத்துக்குப் பிறகுதான், நல்ல இலக்கியங்களைத் தேடி வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.  வாரந் தோறும் வெள்ளிக் கிழமை மாலையில் பெரிய கோயிலுக்கு அருகில் இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்குக் கீழே வட்டமாக அமர்ந்து இலக்கியப் பேரவை நண்பர்கள், தங்கள் படைப்புகளை விவாதிக்கத் தொடங்குவார்கள். அது ஓர் இனிய அனுபவம். வாரத்தில் ஒரு இலக்கியப் பிரபலத்தையாவது அங்கே சந்திக்க முடியும்.
கீழ வாசலுக்குப் போகும் வழியில் நிறைய நாட்டுப்புறக் கலைஞர்களின் வீடுகள் இருக்கும். அந்தந்த வீட்டு முகப்பில் ஒரு பெரிய விளம்பரப் பலகை இருக்கும். அதில் அவர்களுடைய பெயரும் அவர்கள் வைத்திருக்கும் குழுவின் பெயரும் பொறிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பலகையிலும் தவறாமல் வானொலி புகழ், சினிமா புகழ் என்றோ அல்லது கலைமாமணி என்றோ எழுதி இருப்பார்கள். கரகாட்டம் தொடங்கி நாட்டுப்புறக் கலைகள் அத்தனைக்கும் தஞ்சாவூர் சிறப்பு வாய்ந்தது. பெரிய கோயிலின் புறத்தே அமைந்துள்ள சிவகங்கை பூங்கா வாயிலில் வீணை செய்துகொண்டு இருப்பார்கள். ஒரு நாளைக்கு எத்தனை வீணை செய்வார்கள் என்று யூகிக்க முடியாதவாறு ஒரு ஆசாரி எப்போதும் மரத்தை இழைத்துக்கொண்டே இருப்பார்.
தஞ்சாவூருக்குக் குறுக்கே ஓடும் வெண்ணாற்றங் கரையில் சமயத்தில் நீரும் வருவது உண்டு. அங்கே போய்க் குளிப்பதும் நீச்சல் அடிப்பதும் தனி சுகம். ஒரு ஊருக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் குடிகொண்டிருந்தபோதும் எவ்விதப் பரபரப்பும் இல்லாததே தஞ்சாவூருக்கான அடையாளம் எனத் தோன்றுகிறது. தமிழகத்தின் தொல் இயல்களும் தஞ்சையைத் தலைமையாகக் கொண்டவையே. நூலகங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சரஸ்வதி மஹாலும், மராட்டியர் அரண்மனையும், அதைக் காண வரும் சுற்றுலாப் பயணி களும் என தஞ்சாவூரில் பார்த்து வியக்க எத்தனையோ உண்டு.
தஞ்சாவூரின் மற்றுமொரு சிறப்பு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் களைகட்டும். பிரார்த்தனை முடித்துத் திரும்புகிறவர்கள் மறக்காமல் அரிசி முறுக்கை வாங்கத் தவற மாட்டார்கள். அந்தக் கோயிலுக்கு என்று தனியான சக்தியும், வேண்டுதல் பலிக்கும் கருணையும் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகிவிட்டன. விவசாயமே பிரதானம் என்பதால், தஞ்சாவூரின் வாழ்க்கை நடவுக் காலத்தில் புலம்பலும், அறுப்புக் காலத்தில் தடபுடலுமாக இருக்கும். தஞ்சாவூரில் பேசும் தமிழ் குறிப்பிடத்தக்கது. வேறு ஊர்களில் வழக்குச் சொற்கள் திரிந்து உச்சரிப்பு வேறுவிதமாக இருக்கும். ஆனால், இங்கு எழுத்துத் தமிழை எவ்வாறு உச்சரிப்போமோ, அவ்விதமே பேசுவதுதான் வழக்கம். நான் சொல்வது தஞ்சை நகரத்தில் வசிப்பவர்களின் உச்சரிப்பே அன்றி, தஞ்சை மாவட்டம் முழுவதற்குமானது அல்ல.
ஓர் ஊரின் வரைபடம் அங்கே வசிக்கும் மக்களால் மட்டுமல்ல, அவர்களின் தொழில் மற்றும் விருப்பம் சார்ந்தே அமைகிறது. அவ்வகையில் தஞ்சாவூரின் எழுத்து, இசை, பேச்சு, தொழில், சடங்கு என எல்லாவற்றிலும் புராதன அடையாளம் மிச்சம் இருக்கும். அவற்றை சாதிவாரியாக, மதவாரியாக உணரலாம். மூப்பனாரும், வாண்டையாருமாக நீளும் பட்டியலில்... வெண்மணி விவசாயிகளும் வீழ்ந்துவிட்ட திராவிடப் பெருந்தகை களும் சேருவார்களா எனத் தெரியவில்லை. தஞ்சாவூரில் பிறந்ததால், எனக்கு இரண்டு சகாயம். ஒன்று, நான் உலகத்தை எளிதாகப் பார்க்க முடிந்தது. இரண்டு, உலகம் என்னை எளிதாகப் பார்க்க விரும்புவது இல்லை!''
                                                                                                            

 


unarchitamilan

                                                                   


புதன், 23 பிப்ரவரி, 2011

உலுக்கும் பார்வதி அம்மாள் கேள்வி


''எங்கள் 'மா தந்தை’ வேலுப்பிள்ளை இறந்து ஓராண்டுதான் ஆகிறது. இதோ, 'மா தாயார்’ பார்வதியும் போய்விட்டா​ரே!'' என உலகம் முழுதும் துயரத்தைப் பகிர்ந்து​கொள்​கிறார்கள் தமிழ் இன உணர்​வாளர்கள்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், கடந்த 20-ம் தேதி இயற்கை அடைந்துவிட்டார். 80 வயதான அவர், கடைசி காலத்தில் பட்டபாடு
கொஞ்ச​நஞ்சம் அல்ல. மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி, மலேசியாவுக்கு அனுப்பப்​பட்டார். கனடாவில் வசிக்கும் மகள் வினோதினி, உடன் இருந்து தாயைக் கவனித்துக்​கொண்டார். பிறகு, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையாக விசா பெற்று, சிகிச்சைக்காக தமிழ்​நாட்டுக்​குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், அவரை விமானத்தைவிட்டு இறங்கவிடாமல், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு, பல மணி நேரம் விமானத்​திலேயே வைத்திருந்தார்கள். மறுநாள் விடியும் வேளை, அவரை அப்படியே திருப்பி​விட்டனர். மலேசியாவில் தொடர்ந்து தங்க முடியாமல், வேறு வழியின்றி இலங்கைக்கே திரும்பி அழைத்துச் செல்லப்பட்டார்.
மறைந்த மூத்த வழக்கறிஞர் கருப்பன் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக... இறங்கி வந்தன மத்திய, மாநில அரசுகள். ஆனாலும், ''பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சைக்கு வரலாம். மகள் வீட்டில் தங்கலாம். உறவினர்களைத் தவிர எந்த அரசியல் அமைப்பினரும் அவரைச் சந்திக்கக் கூடாது!'' என நிபந்தனை போட்டது.
'ஒரு கைதியைப்போல அம்மாவுக்கு மருத்துவச் சிகிச்சையா?’ என மான உணர்வு பொங்க மறுத்துவிட்டனர் பிரபாகரனின் உடன்பிறந்தவர்கள். அதனால், பிரபாகரனின் சொந்த ஊர்க்காரரான யாழ்ப்பாண முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம், பார்வதி அம்மாளின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஒன்றரை ஆண்டுகளாக சொந்த ஊரான வல்வெட்டித்​துறை மாவட்ட மருத்துவமனையில், டாக்டர் மயிலேறும் பெருமாள் ஒரு குழந்தையைக் கவனிப்பதுபோல பார்வதி அம்மாளைக் கவனித்தார்.
அவ்வப்போது டென்மார்க்கில் இருந்து மூத்த மகன் மனோகரனும், இரண்டு நாளுக்கு ஒரு முறை கனடாவில் இருந்து மகள் வினோதினியும் அம்மாவிடம் தொலை​பேசியில் பேசுவார்கள். எத்தனை முறை தொலைபேசியில் பேசினாலும், பிள்ளைகளை நேரில் பார்க்க முடியாமல் துடித்தார் அந்தத் தாய். இந்தக் கவலையால் அவரின் மனதும் உடம்பும் இயங்க மறுத்தன.
படுக்கையிலேயே காலம் தள்ளும் கஷ்டத்தில், படுக்கைப் புண்ணும் வந்து சேர, தலையில் கட்டுப் போடப்​பட்டது. புண் ஆறியும், சில வாரங்களாக அவருக்கு குழாய் மூலமே திரவ உணவு செலுத்தப்பட்டது. கடந்த வாரத்தின் கடைசியில் அவரது உடல், இறுதி ஓய்வுக்கு முந்தைய அமைதிக்கு வந்தது. கடந்த 18, 19 தேதிகளில் உறக்க நிலையிலேயே இருந்தார். 20-ம் தேதி காலை 6.20 மணிக்கு வழக்க​மான பரிசோதனைக்குச் சென்றபோது, அவர் இறந்திருந்ததை டாக்டர் மயிலேறும் பெருமாள் அறிந்தார். 'அம்மா’வைப் பராமரிக்கும் அந்த மருத்துவருக்கே ரத்த அழுத்தம் 200-க்கும் மேல் எகிற... அவரே அவசர சிகிச்சை எடுக்க​​வேண்டிய நிலையிலும், நாம் தொடர்பு​கொண்டவுடன், விவரங்​களைச் சொன்னார்.
''ஞாயிறு காலை தாதிமார், 'அம்மாவுக்குப் பேச்சுமூச்சேஇல்லை’ என என்னிடம் ஓடி வந்தார். பரிசோ​தித்த​​போது பார்வதிஅம்மாள் உயிர்பிரிந்திருந்தது. இது இயற்​கை மரணம்தான். இருந்தும், இதை ஓர் ஆண்டோ, இரண்டு ஆண்டு​களோ தள்ளிப்​போட்டிருக்​கலாம். சொந்த ஊரில் சொந்தங்​கள் சூழ இருந்த​போதும், புத்திரசோகத்​தால்தான் அவர் இறந்துவிட்டார்!'' என்றார் டாக்டர்.
முன்னாள் எம்.பி-யான சிவாஜி​லிங்கம், ''இறப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அம்மாவைப் பார்த்துவிட்டு வந்தேன். என் பெயரைச் சொல்லி 'வந்திருக்கிறேன்’ என்றதும் அழுதார். வேறு வேலைகளால் மறுநாள் அங்கு செல்ல வெகுநேரம் ஆகிவிட்டது. மருத்துவமனைக்குச் சென்றும் அம்மா தூங்கிவிட்டதால் திரும்பிவிட்டேன். காலையில் அவர் இறப்புச் செய்தியைக் கேட்டதும் என்னால் தாங்க முடியவில்லை...'' என்றார் சோகத்துடன்.
பார்வதி அம்மாளின் மரணச் செய்தி தெரிந்ததும் சிங்களப் போலீஸாரும், ராணுவத்தினரும் ஏராளமாக அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களின் வருகை, அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தியது. ஞாயிறு மாலை தீருவில் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பார்வதி அம்மாளின் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் சிங்களப் படை​யின் அட்டகாசம்... மருத்துவமனையின் முன்பு சீரு​டையில் இருந்தவர்கள், தீருவில் மைதானத்தில் சாதா உடையில் சுற்றித் திரிந்தார்கள். அடக்க முடியாத மனவெழுச்சியில் சிக்கிய மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதபடி அதிக கெடு​பிடிகள்... கடைசியில் திங்கள்கிழமை வரை ஒருவர் ஒருவராகத்தான் அஞ்சலி செலுத்தினர். பிரபாகரனைப் பெற்றெடுத்த காரணத்தால், சொந்த மக்களின் அஞ்சலியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதபடி இன வெறிக் கொடுமைக்கு ஆளானது பார்வதி அம்மாளின் சடலமும்!
பார்வதி அம்மாள் கேட்ட ஒரு கேள்வி மட்டும் இன்னும் தொக்கி நிற்கிறது. ''கலைஞர் அய்யா, ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?'' - பார்வதி அம்மாளின் இந்தக் கேள்வி மட்டும் உரிய விடை தேடி உலுக்கிக்கொண்டே அலைகிறது... உயிரோடு!
- இரா.தமிழ்க்கனல் 
                                                         unarchitamilan

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீர வணக்கம்






unarchitamilan

‘சைலன்ஸ்’ என்ற வார்த்தையைக்கூட இங்கு சத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது -நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்.

‘சைலன்ஸ்’ என்ற வார்த்தையைக்கூட
இங்கு சத்தமாகத்தான்
சொல்ல வேண்டியிருக்கிறது
-நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான்.
thanks tamilcinema.com
Seeman
கோஷத்திற்கும் முழக்கத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம். ஈழ விடுதலைக்கான குரல் மட்டுமல்ல, தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு
உங்கள் மாணவர் பருவம் குறித்து?
சிவகங்கை மாவட்டம் அரணியூர்ங்கறது என்னோட ஊரு. என்னுடைய பால்ய பருவமும் அங்குதான். நான் தொடக்கக் கல்வியை அரணியூர்லேயே 5ம் வகுப்பு வரை படித்தேன். 6லிருந்து பத்தாம் வகுப்புவரை புதூர் என்ற ஊரிலே ஹாஜி இப்ராஹிம் பள்ளியில் படித்தேன். பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புகளை இளையாங்குடி மேல்நிலை பள்ளியில் படிச்சேன். அங்கேயே இளையாங்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிச்சேன். அந்தக் காலக்கட்டங்கள்ல எனக்கு விளையாட்டுல ரொம்ப ஆர்வம். அங்க அதுக்கு திடல் இருந்தது. கபடி ரொம்ப ஆர்வமா விளையாடுவேன். சிலம்பம், கராத்தேவுலயும் ஆர்வம் அதிகம். அவற்றையும் கத்துக்கிட்டேன். கிராமங்கள்ல நடக்கற கரகாட்டம், நாடகம் இதெல்லாம் தொடர்ந்து பார்த்ததும் அந்த கிராமிய கலைகளை வாசிக்க, சுவாசிக்க, நேசிக்க ஒரு கலை ஆர்வம் பற்றிக்கொண்டது.
என்னோட நண்பர்கள் பேராசிரியர்கள் ஊக்கப்படுத்தியதால் திரைத்துறைக் கலைஞனா புகழ்பெறனும்னு ஆசை வந்தது. தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற மாபெரும் தலைவர்களின் தத்துவ சிந்தனையெல்லாம் என்னை ஈர்த்தன. அதே நேரம் அந்தப் பக்கம் நடந்த சாதிய ஒடுக்குமுறைகளையெல்லாம் பார்த்து, மதம் எப்படி மானுட சமூகத்தையெல்லாம் பிளந்து போடுவதென்பதை பார்த்து, ஒரு மாற்றத்தை விரும்புகிற பிள்ளையாக நேசத்தை விரும்புகிற பற்றாளனாக மாறத் தொடங்கினேன்.
அடிப்படையில் நான் தமிழனாக இருக்கும்போது தாய்ப்பாசம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக இருக்குமோ அப்படியே மொழி, இனப் பற்றும் எனக்கும் வந்தது. சென்னைக்கு வந்து அய்யா நெடுமாறன், தலைவர் வீரமணி, அண்ணன் அறிவுமதி, அண்ணன் சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு போன்ற இன உணர்வு கொண்டவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பல்வேறு இளைஞர்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலுக்கும் சென்று அங்கே உள்ள நூல்களையெல்லாம் வாசிக்க, என்னோட பார்வை விரிய ஆரம்பிச்சது.
அந்தக் காலக்கட்டத்தில் தன் தேச விடுதலைக்காக அண்ணன் பிரபாகரன் அவர்கள் அந்த மண்ணில் வீரம் செறிந்த அறப்போரினை நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஒரே தமிழ் ரத்தத்தில் பிறந்த பிள்ளைகள் என்பதால் அவரை நேசிக்கத் தொடங்கி, தமிழ் தேசிய விடுதலைக்கான போரை ஆதரிக்கத் தொடங்கினேன். இதில் என்னை முழுக்க முழுக்க ஐக்கியப்படுத்திக்கொண்டு செயல்பட்டேன். கலைத்து¬யின் வருமானத்தைவிட என் இனமானம் பெரிது என்ற நோக்கிலே நான் போராடத் தொடங்கினேன். இதில் நான் சந்தித்த இடையூறுகள், வழக்குகள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம செத்தாலும் நம்ம இனம் வாழ்ந்தாபோதும் என்று பயணித்தேன். அந்த பயணத்தின் தொடர்ச்சிதான் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஈழத்திற்காக குரல் கொடுத்த வைகோ, திருமா போன்றவர்களே கூட்டணி அரசியலில் சிக்குண்ட பிறகு நாம் தமிழர் இயக்கம் மட்டும் என்ன செய்து விட முடியும்?
எங்க அண்ணனுங்க செய்த பிழையை நான் செய்ய மாட்டேன். என்னால இந்த அரசியலில் ஈடுபட முடியல. பல தலைவர்களின் விரலைச் சூப்பிக் கொண்டு திரிந்த ஒரு பாசமான நாய்க்குட்டியாகத்தான் நான் இருந்தேன். என்னுடைய வருத்தம் என்னவென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வலிமையைக் காட்ட மாநாடு கூட்டறாங்க. தங்கள் கட்சித் தொண்டர்களின் மொத்த வலிமையைக் காட்டறாங்க. ஆனா அங்கே போரை நிறுத்த இங்கே எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சித் தொண்டர்களின் மொத்த வலிமையைக் கூட்டி ஒரு போராட்டம் நடத்தல. இந்த வருத்தம் இன்னைக்கு மட்டுமில்ல, எனக்கு என்னைக்கும் ஆறாது.
இதைத்தான் ஈழத்தில் அண்ணன் பிரபாகரன் என்னிடம் ‘‘குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரைக் கூடவா திரட்டி உங்களால் போராட்டம் நடத்த முடியாது?’’ என்று கேட்டார்.
அவர் மனதில் எந்த அளவுக்கு ஆதங்கம் இருந்திருந்தால் ஒரு சிறியவன் என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை நான் திரட்டியிருக்கிறேன். எங்களால் இங்குள்ள எந்த கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்ற முடியாது. நாங்க சாதி, மதம் கடந்த தமிழ்த் தேசியத்தின் பிள்ளைகள். இதை செய்வதற்கு வானத்திலிருந்து ஒரு தலைவர் வருவார்னு நாம காத்திருக்க முடியாது. திரைத் துறையிலிருந்து ஒரு தலைவர் வந்து குதிப்பார்னும் காத்திருக்க முடியாது.
வலிமையில்லாத ஏழை பாமரன் வீட்டுப் பிள்ளையா நாங்க வந்திருந்தா கூட இன உணர்வு என்ற ஒரு பெரிய வலிமை எங்ககிட்ட இருக்கு. நான் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தேசியத்திற்காக குரல்கொடுத்திருக்கிறேன். என் பால் ஈர்க்கப்பட்ட தம்பிமார்கள் இன்று என் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.
இறுதிக்கட்ட போர்க்காலத்தில் ஏதாவது செய்தாக வேண்டும் என்று என்னிடம் ஏராளமான தம்பிமார்கள் அழுதிருக்கிறார்கள். அப்படி ஏதாவது செய்ய வேண்டுமானால் நமக்கு வலிமை வேண்டும். அந்த வலிமை நமக்கு இருக்கிறதா என்றால் இருக்கிறது. தம்பி முத்துக்குமார் உயிரோடு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இன்னுயிரை ஈந்த பிறகு இந்த உலகில் அவரை அறியாதவர்களே இல்லை. அவர் இறுதி ஊர்வலத்தில் திரண்ட 2 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஏன் எந்த இயக்கத்திற்கும் போகவில்லை? நான் கலைத்துறையில் சிறியவன். என்னைவிட வலிமையானவர்கள் பின்னால் கூட ஏன் அவர்கள் அணிதிரளவில்லை?
‘‘நாம் தமிழர்’’ கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் கூடுகிறார்கள் என்றால் மாற்றத்தை விரும்பும் இந்த இளைஞர்களுக்கு என் முன்னோர்கள் ஏன் எந்த மாற்று வழியையும் உண்டாக்கவில்லை? நான் இந்த இயக்கம் தொடங்கவில்லை என்றால் எப்படி பல தலைவர்களையும் நம்பி நாதியற்று திரிந்தேனோ அதேபோல இவர்களும் திரிந்திருப்பார்கள்.
எனது பார்வையில் ஈழ விடுதலை என்பது நம் மக்களுக்கு மட்டுமான விடுதலை அல்ல. ஒட்டுமொத்த உலக தமிழர்களுக்கான விடுதலை.
ஒரு நாட்டை அடைந்து விட்டால் பொருளாதார விடுதலை. பெண்ணிய முன்னேற்றம் அனைத்தும் நமக்கு எளிதாக கிடைத்துவிடும். முதலில் ஈழத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருந்தது. ஈழத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை இருந்தது. தமிழனுக்கான சட்டம், தமிழனுக்கான பாடத்திட்டம் எல்லாமே இருந்தது, இதை எவரும் மறுக்க முடியாது. எந்த நொடியிலும் அழித்தொழிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தபோதும் எம்மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள். அதேபோல திருடன், பிச்சைக்காரன் இல்லாத நாடாகவும் இது இருந்தது. இதை உலகில் யாரும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட தேச விடுதலை என்பதை ஈழ மக்களின் விடுதலை என்று தள்ளியது Naam Thamilarதவறு. தேசிய இனத்திற்கான விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான விடுதலை. இதுதான் எங்களின் அரசியல் பார்வை. ஒரு தலைவன் தேசிய விடுதலைக்காக களமாடுகிறான். அதாவது இந்தியாவில் தமிழகனுக்கென்று ஒரு அரசு 62 ஆண்டுகளாக இருக்கிறது. எங்க அண்ணன் நடத்திய போராட்டத்தை இங்குள்ள எங்க அப்பனும், ஆத்தாளும் ஆதரிக்கவில்லை என்பதுதான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம். நமது இனத்திற்காக நாடு அடையும் போராட்டத்தை எமது அரசு அங்கீகரிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. இது ரெண்டையும் தாண்டி எதிர்ப்புத் தெரிவிச்சது. இந்திய தேசியம் எங்க போராட்டத்தை போற்றணும், பாராட்டணும். ஆனா இந்தியா எங்களுக்கு துரோகம் செய்தது. சீனா எங்களுக்கு பாரபட்சமா நடந்து கொண்டது. பாகிஸ்தான் துரோகம் செய்தது. ரஷ்யா ஏராளமான ஆயுதங்களை கொண்டு வந்து குவித்தது. எங்க அப்பனே சோறூட்டாதபோது ஊரான் வந்து சோறூட்டுவான் என்று நினைக்கிறது முட்டாள்தனம்.
போரால் மட்டும் தேசிய விடுதலையை வெல்ல முடியுமா? போராட்டமும், அசியல் புரட்சியும் சேர்ந்துதான் வெல்ல முடியும். ஆனால் போர் நடந்த அளவுக்கு அங்கே அரசியல் புரட்சியும், போராட்டமும் நடந்ததா என்றால் இல்லை. இந்த மண்ணுல மறைந்த புரட்சித் தலைவர் அவர்கள் மட்டும்தான் ஈழ விடுதலையை ஆதரிச்சது, துணை நின்றது எல்லாம். பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆண்டபோது, ஈழவிடுதலையை ஆதரிக்கவில்லை. ஜெயலலிதா எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க முன்வராத கருணாநிதி, கருணாநிதி எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க முன்வராத ஜெயலலிதா... ஒரே முடிவில் மட்டும் இரண்டு பேரும் ஒண்ணா இருந்தாங்க. அது பிரபாகரனை வீழ்த்துவதுதான். காரணம் இவர்கள் ஈழ விடுதலையை ஆதரிச்சா அந்த ஈழ விடுதலையை முன்னெடுக்கற பிரபாகரனை இவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி வரும். அதை இவர்கள் விரும்பவில்லை. இதனாலதான் இந்த விடுதலை வீழ்ந்துபோச்சு. அதற்குக் காரணம் இந்த அரசு. எங்களுக்கான அரசா இல்லை. இது தமிழர்களுக்கான அரசாக மாறும் வரை எதுவுமே சாத்தியமில்லை. திராவிட அரசியல் கட்சிகள் என்று தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சொல்றோம். பிறகு தேசிய கட்சிகள். இதற்கு மாற்றாக என் மண்ணுக்கும், மக்களுக்கும் மொழிக்குமான மாற்று அரசியலை கட்டமைப்பது காலத்தின் கட்டாயம். இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்பதல்ல. சாத்தியத்திலிருந்து பிறப்பதில்லை எதுவும். இப்ப இது தேவை, அதை நாங்க செய்யறோம். எல்லாத்தையும் நம்பி கைவிடப்பட்ட பிள்ளைகளா நாங்க இருக்கிறதினால நிர்க்கதியா நிக்கற பிள்ளைகளை ஒன்று சேர்ப்பத்குத்தான் இந்த நாம் தமிழர் இயக்கம்.
அதேவேளை சர்வதேச இனமாக உலக அரங்கில் மாறி நிற்கின்ற எம்மினத்திற்கு சர்வதேச சமூகத்தின் வலிமை இருந்தால் எம்மினத்தை யாரும் வீழ்த்தியிருக்க முடியாது. இதுதான் நிதர்சனமான யதார்த்த உண்மை. இப்ப சர்வதேச அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு தமிழர்கள் பெரும்பான்மை உள்ள தாயக தமிழகத்தில் அடித்தளம் இருந்தால் தான் சரியாக இருக்கும். மற்றதெல்லாம் எங்களவர் பிழைக்கச் சென்ற பூமி. அது நமது தேசமல்ல. அயலான் தேசம். இது தாய் நிலம். இந்த இடத்துல எங்க அரசியல் அடித்தளம் அமைக்க முடியுங்கிறதுல நாங்க உறுதியா இருக்கிறோம். இந்த நிலையில் உலகின் எந்த மூலையில் தமிழன் தாக்கப்பட்டாலும் அதைப் பார்த்துத் துடிக்கிற, காக்க, நினைக்கிற அரணாக இருக்கிற ஒரு அரசியல் கட்டமைப்பை இங்கதான் எழுப்பனும்னு நாங்க உறுதியா இருக்கிறோம்.
முதலில் தமிழனுக்கான அரசியல் வலிமையையும், தளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். உலகெங்கும் இருக்கிற தமிழர்களை முதலில் தமிழர்களாக்க வேண்டும். அப்ப தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லையா என்றால் இல்லை. இந்தோனேஷிய தமிழர், இந்திய தமிழர், ஈழத் தமிழர் என்று பலவகையான தமிழர்களாக உள்ளனர். இதைத் தாண்டி கட்சித் தமிழன், மதத் தமிழன், சாதித் தமிழன்னு பல பல பேர் இருக்கிறார்கள். இவர்களை ஒன்று திரட்டி அனைவரும் ஒரே தமிழர் என்று காட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது.
தேர்தலுக்காக எங்கள் கொள்கைகளை சமரசம் செய்பவர்கள் நாங்கள் இல்லை. அப்படி தேர்தலில் நின்று வென்றாக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதற்காக தேர்தலையே புறக்கணிக்க மாட்டோம். தேர்தலில் நிற்போம். ஆனால் 2011 வருடம் தேர்தலில் நிற்க மாட்டோம். எங்கள் இலக்கு 2016 தான். வென்றுவிட முடியும் என்கிற வலிமை எங்களுக்கு வந்துவிடும் வரை தேர்தலைப் பற்றி சிந்திக்கப்போவதில்லை. நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற காசி ஆனந்தன் அய்யாவின் கவிதைப்போல சிறகை விரி பிறகு சிரி. நல்ல பாய்ச்சலுக்காக பசியோடு இருக்கும் புலியைப்போல நாங்கள் காத்திருப்போம். அந்த பாய்ச்சல் வரை பதறாமல் இருப்போம். சிதறாமல் இருப்போம். நாம் மக்களோடு மக்களாக கலப்போம். இது ஒரு நீண்ட கால செயல்திட்டம். 4 சீட்டு வாங்கிக்கொண்டு தேர்தலில் நிற்கும் வேலையே இங்கு இல்லை. அப்படிப் பார்த்துப் பார்த்துதான் விரக்தியுற்று இந்த வேலையைத் தொடங்கினோம்.
ஈழத்திற்குக் குரல்கொடுக்கும் நீங்கள், ஏன் அந்தக் கொடுமையை ஒரு மாபெரும் திரைக் காவியமாக படைக்கக்கூடாது?
ஈழப் பிரச்சனையை கற்பனையாக எடுக்க முடியாது. அது ஒரு வரலாற்று நிஜம். நான் அண்ணன் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னை படம் எடுக்கச் சொல்லவில்லை. அதிலுள்ள அரசியல் சிக்கல்கள் அவருக்குத் தெரியும். பென்ஹர், ஷிண்லர்ஸ்லிஸ்ட், பிரேவ் ஹார்ட் மாதிரிதான் வரலாற்றுப் படங்களை உண்மையாக நாங்க எடுக்கணும்.
ஒரு போராளி எப்படி உருவானான் என்பதையே ஒரு படமாக எடுக்கலாம். அந்த நாட்டை சிதைத்துவிடக்கூடிய ஒரு அரசியல் சூழ்நிலை இருக்கும்போது எப்படி அதனை படம் எடுப்பது? காற்றுக்கென்ன வேலி சிதைக்கப்பட்டுத்தானே வெளிவந்தது. ‘ஆணிவேர்’, ‘எள்ளாளன்’ போன்ற திரைப்படங்களை இந்தியாவில் வெளியிட முடிந்ததா? இந்த சூழ்நிலையில் நான் புலிகளின் ஆதரவாளன். என்னால் எப்படி இந்த படத்தை எடுக்க முடியும்? அதே நேரம் அரசியல் சூழ்நிலை மாறும்போது அப்படி ஒரு படத்தை எடுப்பேன். அதுவரை நான் இயக்கும் படங்களில் என்னால் முடிந்தவரை அதற்கான குரல்களை பதிவு செய்வேன்.
பிரபாகரனை வன்முறையாளன் என்கிறார்கள். அப்படியென்றால் எம்மினத்தையே அழித்த இராஜபக்சே யார்? ஒரு தேசத்தில் இருக்கும் இரு இனங்களில் ஒரு இனத்திலிருந்து மட்டும் ஒருவரைக்கூட சேர்க்காமல், அதை தேசிய இராணுவம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவன் நாட்டில் வேண்டுமானால் நாம் சிறுபான்மையினர். ஆனால் 50,000 வருடங்கள் வரலாறு கொண்ட எம்மினம் உலகத்தில் பெரும்பான்மை. எம்மினத்தவர் ஒருவர்கூட இல்லாத இராணுவம் எம்மினத்தவரை எப்படி பாதுகாக்கும் என்னும் கேள்விக்கு உலக அரங்கில் எந்த பதிலுமில்லை.
இந்த இராணுவத்தினால் பாதிக்கப்படுகிற மக்களை பாதுகாக்க விடுதலைப்புலிகள் இயக்கம் கடமைப்படுகிறது. இந்த இயக்கத்தை பயங்கரவாதம் என்பதை எந்த வகையில் ஒத்துக்கொள்வது?
அடிக்க ஓங்குகிற கைகளுக்கும் அதை தடுக்கும் கைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதய நோய்க்கான அறுவைச்சிகிச்சை என்பது வன்முறை அல்ல... சிகிச்சை.
‘சைலன்ஸ்’ என்ற வார்த்தையைக்கூட இங்கு சத்தமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வன்முறைக்கு எதிரான தாக்குதல் அந்த வன்முறையைவிட பலமாக இருந்தால்தான் இங்கே வெல்ல முடியும். இப்படியான உரையாடல்களையும், நான் தம்பி படத்தில் வைத்திருந்தேன். இப்படித்தான் குறியீடாக எதையும் சொல்ல முடியுமே தவிர, முழுநீளத் திரைப்படமாக எடுக்கும் அரசியல் சூழல் இங்கு இல்லை.
1980 களில் தொடங்கி, 2000 வரை திராவிடம் மற்றும் தமிழ்தேசிய களத்தில் நின்றவர்கள் காயடிக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. ஒரு தலைமுறையே காணாமல் போய்விட்டது. இன்றைய ஐ.டி. யுகத்திலும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உங்களுக்காக நிற்கிறார்களே... அவர்களின் எதிர்காலம்?
உண்மைதான். இந்த இளைஞர்களுக்கு முதலில் நாங்கள் பயிற்சிதான் அளிக்கப்போகிறோம். நாங்கள் கருத்துப் புரட்சிக்கான ஒரு படையை உருவாக்கப் போகிறோமே தவிர ஆயுதப் புரட்சிக்காக அல்ல. இலஞ்சம் தேசியமயமாக்கப்பட்ட ª£ரு நாட்டிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாதியைப் பற்றி கவலைப்படுகிற தமிழன் இந்த இலஞ்சத்தைப் பற்றி முதலில் கவலைப்படவேண்டும். என் மண்சார்ந்த இலக்கியம், விளையாட்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கும் மேல் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ‘‘உடல் என்பது ஒரு நுட்பமான தொழிற்சாலை, அதைப் பேணிக் காப்பவனே உண்மையான பகுத்தறிவுவாதி’’ என்று பெரியார் சொன்னதை கடைப்பிடிக்க இளைஞர்களுக்காக உடற்பயிற்சி நிலையங்கள் அமைப்போம். எங்கள் இயக்கத்திலுள்ள அறிஞர்களைக் கொண்டு, எம்மினம் எப்படி வாழ்ந்தது, எப்படி வீழ்ந்தது என்று பயிற்சி பட்டறை மூலம் வகுப்பெடுப்போம். இப்படி அவர்களை முழுமையாக தயார் செய்த பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு புரட்சியாளனை உருவாக்குவோம். முதலில் வீட்டை வென்றெடு, பிறகு நாட்டை வென்று எடுக்கலாம். முதலில் என் தாய் என்னை உண்மையானவன், நேர்மையானவன் என்று நம்பணும். என் சகோதர, சகோதரிகள் நம்பனும். ஓட்டுக்காக காசு கொடுக்க வருபவனை நானும் என் குடும்பத்தாரும் சேர்ந்து தடுக்கணும். இப்படித்தான் உண்மையான ஜனநாயகம் தழைக்க முடியும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார், பாரதி, பாரதிதாசன், பெருஞ்சித்தனார், தேவநேயப் பாவாணர் போன்ற தலைவர்களின் சிந்தனைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து அவர்களை வார்த்தெடுத்த பிறகுதான், தேர்தல் களத்தைச் சந்திப்போம். இப்போது வாரித்தூற்றும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பதர்கள் போக கடைசியில்தான் விதைகள் மிச்சமிருக்கும். அப்போது எங்களுடன் 10,000 பேர் இருந்தால் போதும், இந்த சமூகத்தை மாற்றி அமைக்க.
பார்வதி அம்மாளுக்கு நேர்ந்த அவமானம் குறித்து...
அவர்களுக்கு விசா தராமல் மறுத்திருந்திருந்தால் அது செய்தியே அல்ல. இங்கு அம்மா வருவது எனக்குத் தெரியாது. அன்று நான் திருப்பூரில் பரப்புரையில் இருந்தபோது என்.டி.டி.வியில் பணியாற்றும் ஒரு தம்பி, ‘அம்மா இங்கு வரப்போகிறாராமே’ என்று கேட்டார். அன்று நள்ளிரவே அம்மா இங்கு வந்துவிட்டார். ஒரு தொலைக்காட்சி நிருபருக்கு தெரிகிற செய்தி, இந்த நாட்டின் முதலமைச்சருக்கு தெரியவில்லை.
6 மாசம் விசா கொடுத்த தேசம் திருப்பி அனுப்பியது என்ன சட்டம்? இப்போது அம்மாவிடம் கடிதம் வாங்கி இருக்கிறார்கள். கடிதம் கொடுத்தால் உங்கள் சட்டம் அனுமதிக்குமா? நம் ஜென்ம பகை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பொண்டாட்டிக்கு ஒரு சட்டம், என் அம்மாவிற்கு ஒரு சட்டமா?
சிங்களவன் சுடுவான் நாங்கள் கேட்க மாட்டோம். ஈழத்துல சிங்களவன் கொல்லுவான், நாங்க ஒண்ணும் செய்ய மாட்டோம். பிரபாகரன் அம்மாவை உங்க அம்மான்னு நினைச்சுட்டீங்களா? நீங்க என்ன கத்தினாலும் ஒண்ணும் செய்ய மாட்டோம். தமிழர்கள் இந்திய அடிமைகள் என்பதை உணர்த்தும் செயல்தான் இது.
நிற்க வைத்து ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் காறி உமிந்ததைப்போன்ற செயல்தான் இது.
கடிதம் காட்டினால் கருணைக்காட்டும் என் தேசம் என்ன சொல்கிறது... கெஞ்சு, மண்டியிடு, உங்களை கொல்வதென்றாலும் நாங்கள்தான், அதுபோல உங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றாலும் நாங்கள்தான் வேண்டும் என்கிறது.
அந்தத்தாய் இங்கு வந்தால் தமிழ்நாடே திரண்டு வந்து அவரைப் பார்க்கும்... வீணாண சலசலப்பு ஏற்படும். அதற்கு பயந்துதான் அவருக்கு அனுமதி இல்லை என்றிருக்கிறார்கள். சுயநினைவே இல்லாத அவர்களை மீண்டும் இங்கு அழைத்துவந்து யாரும் அவரைப் பார்க்க அனுமதி அளிக்காமல், அவரை மருத்துவமனையில் வைத்து பிரபாகரன் தாயை காப்பாற்றியது நாங்கள்தான், நாங்களா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தோம் என்கிற அரசியல் செய்யவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சீமானின் அடுத்த படைப்பு?
கலைப்புலி தாணு தயாரிக்க என் தம்பி விஜய் நடிக்க நான் இயக்கும் படம் ‘பகலவன்’, இது இரண்டு மடங்கு தம்பியாக இருக்கும்.
ஈழம் எரிந்து ஓராண்டு முடியப்போகிறதே, பிரபாகரன் எங்கிருக்கிறார்?
இவ்வளவு பெரிய போராட்டத்தை அவர் விட்டுவிட்டுப் போகமாட்டார் என்பது என் ஆழ்மனத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதை என் உள்ளுணர்வு சொல்கிறது. அதுதான் இப்படி என்னை இயங்க வைக்கிறது.
                                                                   unarchitamilan  

பழ.நெடுமாறன் பிரத்யேக பேட்டி ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது... இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை!

பழ.நெடுமாறன் பிரத்யேக பேட்டி
ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது...
இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை!
                                                                                 முந்தையசந்திப்பு-2008
மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.
nedumaranமதுரையில் இந்திராகாந்தி மீது தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவரை காப்பாற்றியது நீங்கள்தான். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொண்டன. 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று கலைஞர் அழைத்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
இந்திராகாந்தி தாக்கப்பட்ட நிகழ்ச்சி 1978-ல் நடந்தது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் நானும், ஆர்.வி.சாமிநாதனும் டெல்லி சென்று இந்திராகாந்தியை சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து பேசினோம். என்னுடைய நிலைப்பாடு என்பது, தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். டெல்லியில் முடிவு செய்து எங்கள் மீது அந்த முடிவை திணிக்க முடியாது. அதனால் கட்சி பலவீனப்படும். எங்கள் முடிவு தவறாக இருந்தால் கட்சி மேலிடம் தலையிட்டு அதற்கான காரணங்களை கேட்டு மாற்றும்படி சொல்லலாம். முடிவையே டெல்லி எடுக்குமானால் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது. இதற்கு இந்திராகாந்தி ஒப்புக் கொண்டார். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோடு கலந்து பேசிதான் முடிவெடுப்போம் என்றார். நாங்களும் மகிழ்ச்சியோடு திரும்பினோம்.
வந்து சில மாதங்களுக்குள்ளாகவே டெல்லியிலிருந்து செய்தி வருகிறது. கலைஞர் nedumaranகருணாநிதியும், முரசொலி மாறனும், இந்திராகாந்தியை சந்தித்து பேசி கூட்டணி பற்றி முடிவு செய்துவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு நாங்கள் திரும்பவும் டெல்லி சென்று இந்திராவை சந்தித்தோம். எங்களிடம் ஒன்று சொல்லிவிட்டு அதற்கு மாறாக செய்துவிட்டீர்களே, இதனால் கட்சி பலவீனப்படுமே? நாம் தனியாக நின்றிருந்தாலே குறைந்த பட்சம் 15 இடங்களை கைப்பற்றி இருக்கலாமே? கூட்டணி சேர்ந்து அதே 15 தொகுதியை வாங்கி என்ன பயன்? இப்படி எவ்வளவோ வாதாடி பார்த்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு செய்தால், செய்ததுதான். அதை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு நான் என்னுடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அன்றைய தினமே ராஜினாமா செய்தேன். இதுதான் நடந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்று என்னுடைய முடிவை எதிர்த்து என்னுடைய நண்பர் மூப்பனாரும், ப.சிதம்பரமும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கிற முடிவுகளை எதிர்ப்பவர்கள் உண்மை காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.
ஆனால் அதே மூப்பனார் 16 வருடம் கழித்து நான் என்ன காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினேனோ அதே காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினார். நரசிம்மராவ் எங்களை கேட்காமல் அ.தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொண்டதாக காரணம் சொன்னார். அவர் இந்த சிந்தனைக்கு வருவதற்கு 16 வருடங்கள் ஆனது.
இந்திராகாந்தியை காப்பாற்றியவர் என்ற முறையிலும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையிலும் சோனியாவை சந்தித்து இலங்கை பிரச்சனை குறித்து நீங்கள் பேசியிருக்கலாமே?
அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன். உண்மையில் ஈழப் nedumaranபிரச்சனையில் இந்திராகாந்தி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார். அதற்கு நேர்மாறாக இப்போது என்னென்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் காரர்களே புரிந்து கொண்டார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. 1977-ல் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அவரும் அவருடைய துணைவியாரும் சென்னைக்கு வந்தார்கள். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். இங்கு எல்லா தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது அவரை நானே நேரில் சென்று சந்தித்து, 'நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தமிழர்கள் என்ற முறையில் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' என்று தெரிவித்தேன். 'நீங்கள் டெல்லியிலே சென்று இதற்கான லாபியை நடத்துங்கள். அப்போதுதான் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்றேன். அவர், 'டெல்லியில் யாரையும் தெரியாது' என்று சொன்னதற்கு, 'நானே டெல்லியில் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்' என்றேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டபின் டெல்லி சென்றோம்.
அப்போது மொரார்ஜிதேசாய் பிரதமராக இருந்தார். நான், ஜனார்த்தனம், அமிர்தலிங்கம், அவரது துணைவியார் நான்கு பேரும் இந்திராவை சந்தித்தோம். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் அமிதலிங்கத்திடம், 'முதலில் இந்த பிரச்சனையை நீங்கள் சர்வதேச அளவில் விளக்க வேண்டும்' என்றார். 'வெளிநாடுகளில் யாரையும் தெரியாதே' என்று கூறிய அமிர்தலிங்கத்துக்கு ஒரு பள்ளி ஆசிரியை போல பாடம் எடுத்த இந்திராகாந்தி, வெளிநாடுகளில் யார், யாரை சந்திக்க வேண்டும், எதைப்பற்றி எப்படியெல்லாம் பேச வேண்டும், என்பதையெல்லாம் சுமார் ஒரு மணிநேரம் விளக்கமாக எடுத்துக் கூறினார். பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஏ.ஆர்.அந்துலேவை அழைத்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட செய்து அதில் அமிர்தலிங்கத்தை பேச வைத்தார். சுமார் ஒரு மணிநேரம் ஈழப்பிரச்சனை குறித்து ஆங்கிலத்தில் அருமையாக விளக்கினார் அமிர்தலிங்கம். முடிந்ததும் கட்சி தலைவர்கள் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது, காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் எஸ்.பி.சவான். அவர் ஒரு கேள்வி கேட்டார். 'நீங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து அங்கு போனவர்கள்தானே? அங்கு போய் தனிநாடு கேட்டால் என்ன நியாயம்?' என்று அவர் கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அவர் மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர். இலங்கை பக்கத்து நாடு. அங்கு ஈழத்தமிழர்கள் பூர்விக குடிகள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
அமிர்தலிங்கம் சவானின் கேள்விக்கு விளக்கமாக பதில் சொன்னார். இந்த neduamaranகூட்டத்தை பற்றி நான் இந்திராகாந்தியிடம் விளக்கமாக சொன்னேன். யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பது பற்றி சொல்லிவிட்டு சவான் கேட்ட கேள்வியையும் சொன்னேன். 'மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் இந்த உண்மையை கூட தெரிந்து வைத்திருக்கவில்லையே, மிகவும் வருத்தமாக இருக்கிறது' என்று நான் சொன்னபோது இந்திராகாந்தி விழுந்து விழுந்து சிரித்தார். 'என்ன செய்வது? இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டுதான் நாமும் அரசியல் பண்ண வேண்டியிருக்கிறது' என்று சொன்னார். அன்று தொடங்கி நான் பார்க்கிறேன். இந்திராகாந்தி இந்த பிரச்சனையில் தெளிவாக இருந்தார்.
1983-ம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பிலே கலவரம் ஏற்பட்டு அங்கு மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அன்று வெளிநாட்டு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவையும், ராஜாங்க அமைச்சர் ஜி.பார்த்தசாரதியையும் அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சின்ன நாடு. அங்கு நடந்த பிரச்சனைக்கு அவர் அனுப்பி வைத்த இருவரும் அன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சர்கள். இதன்மூலம் அவர் ஜெயவர்த்தனாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கு உணர்த்திய விஷயம் என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா முக்கியமான பிரச்சனையாக கருதுகிறது என்பதுதான்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு பிரதமர் இந்திராகாந்தி ஆற்றிய உரையில், 'இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது' என்றார். அதன்பின் இந்திராகாந்தியின் ஆலோசைனை பேரில், பார்த்தசாரதி பல முறை இலங்கை அரசோடு பேசினார். இலங்கை தமிழர்களுக்கும் அரசுக்கும் இடையில் வட்டமேஜை மாநாடு நடந்தது. அனெக்ஸ் சி என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஜெயவர்த்தனா அதை ஒப்புக் கொள்ள தயங்கினார். பிறகு இந்திராகாந்தியின் நிர்பந்தத்தின் பேரில் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.
உடனே இந்திராகாந்தி, அனைத்து தமிழ் போராளி குழுக்களையும் அழைத்து nedumaranஅவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்க செய்தார். இந்திய ராணுவம்தான் அந்த பயிற்சியை அளித்தது. அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை வருதற்குள்ளாகவே இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக வந்தார். அவருக்கு இந்த பிரச்சனை பற்றி மட்டும் அல்ல, அரசியலை பற்றியும் எதுவும் தெரியாது. இந்த பிரச்சனை பற்றி எல்லாம் தெரிந்த பார்த்தசாரதி ராஜினாமா செய்துவிட்டு போகும்படி செய்யப்பட்டார். வெளியுறவு அதிகாரியாக இருந்த ஏ.பி வெங்கடேஸ்வரன் பற்றி வெளிப்படையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜீவ்காந்தி விமர்சனம் செய்ய, அவரும் பதவி விலகி போய்விட்டார். ஆக இந்த பிரச்சனையை தெளிவாக புரிந்து வைத்திருந்த ஆலோசகர்கள் அவருக்கு அருகில் இல்லை.
அதற்கு பிறகு வெளியுறவு செயலாளர் பதவியேற்ற பண்டாரி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பேச்சு வார்த்தைக்கு. இந்த வேறுபாட்டை நீங்கள் நன்கு அறிய வேண்டும். இந்திராகாந்தி காலத்தில் இரண்டு சீனியர் டிப்ளோமேட் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ராஜீவ் காலத்தில் ஒரு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி செய்ததன் மூலம் இந்த பிரச்சனைக்கு உள்ள முக்கியத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ குறைத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை அதிகாரிகளை வைத்துதான் பேசுகிறார்கள். இன்னமும் சிவசங்கரமேனமும், எம்.கே.நாராயணனும்தான் அனுப்பப்படுகிறார்கள். இந்திய அரசில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை. ஆக, இந்தியா இந்த பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக கருதவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இப்போது ஏற்பட்டுள்ள அவ்வளவு குழப்பங்களுக்கும் இதுவும் ஒரு காரணம்.
ஈழத்தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக மருந்து பொருட்கள் அனுப்புவது குறித்து உண்ணாவிரதம் இருந்தீர்கள். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கலைஞர் கேட்டுக் கொண்டும் அதற்கு ஒப்புக்கொள்ளாத நீங்கள், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதும் ஒப்புக் கொண்டது ஏன்?
இந்த பிரச்சனை சென்ற ஆண்டு ஜனவரியில் இருந்து நடந்து வருகிறது. ஏழு மாத காலமாக நாங்கள் சேகரித்த உணnedumaranவுப் பொருட்களையும், மருந்து பொருட்களையும் ஈழத்தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி கேட்டு வருகிறோம். அதற்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. நாங்கள் அரும்பாடு பட்டு சேகரித்த பொருட்களை வைக்க கூட இடமில்லாமல் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் அவற்றை நாங்களே எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தோம். நாங்கள் அங்கு சென்றபோது எங்களுக்கு படகுகள் கொடுக்கக்கூடாது என்று மீனவர்கள் தடுக்கப்பட்டார்கள். யாரும் எங்களுக்கு படகு கொடுக்க முன்வராத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்யவும் உத்தரவிடாமல், எங்களை அவமானப்படுத்தியது இந்த அரசு. நான் உடனே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் சென்னை கோயம்பேட்டில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டேன். அப்போது உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற காவல்துறை என்னை கைது செய்ய முயன்றது. 'இது எங்களுக்கு சொந்தமான இடம். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால்தான் என்னை கைது செய்ய முடியும்' என்று நான் வாதிட்டேன். அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்ட பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வைகோ, திருமாவளவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் என்னை கைது செய்யாமல் திரும்பி போனது காவல்துறை. இல்லையென்றால் அந்த உண்ணாவிரதம் தடுக்கப்பட்டிருக்கும். அதன்பின் எனக்கு கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை கைவிடும்படியும், நேரில் இதுகுறித்து பேசலாம் என்றும் கூறியிருந்தார். அதன்பின் ராமதாஸ், வைகோ போன்றவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உண்ணாவிரதத்தை கைவிட்டேன். ஆனால், இன்றுவரை என்னை அழைத்து பேசுவதாக வாக்குறுதியளித்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்னும் அழைக்கவில்லை. நானும் அவரை சந்திக்க முறைப்படி நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதோடு இந்த பிரச்சனையை நாங்கள் விடப்போவதில்லை. எப்படியும் நாங்கள் சேகரித்த பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பியே தீருவோம்.
அனுமதியில்லாமல் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களால் இலங்கைக்கு சென்றிருக்க முடியும். அந்த துணிச்சல் உங்களிடம் இருக்கும்போது அரசிடம் அனுமதி கேட்காமலே அவற்றை இலங்கைக்கு கொண்டு சென்றிருக்கலாமே?
நிச்சயமாக முடிந்திருக்கும். இதற்கு முன்பு பலமுறை இலங்கைக்கு அனுமதியில்லாமல் சென்றிருக்கிறேன். நான் வந்தபிறகு பத்திரிகைகளுக்கு அளிக்கிற பேட்டிகளை வைத்துதான் நான் இலங்கை சென்ற தகவலே போலீசுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இது எனக்கு பெரிய விஷயமல்ல. ஆனால், ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களும், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் படுகிற வேதனைகளையும் மக்களுக்கு புரியவைக்கவும், ஈழப்பிரச்சனை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும்தான் இந்த போராட்டம்.
கலைஞர் தலைமையிலான தி.மு.க, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.முக இரண்டுமே ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஆதரவாக இல்லை என்று சொல்கிறீர்கள். தி.மு.க-அ.தி.மு.க வை விட்டால் வேறு கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையில், ஈழப்பிரச்சனையில் எதிர்காலத்தில் தமிழக அரசின் ஆதரவை எப்படி பெறுவீர்கள்?
அதற்கு ஒரு மாற்று வேண்டும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். தொடர்ந்து பேசி வருகிறோம்.
உங்கள் இயக்கமும் தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றினால் இன்னும் அழுத்தமாக உரிமைக்குரல் எழுப்பலாமே?
தமிழர் தேசிய இயக்கம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தி.மு.க, nedumaranஅ.தி.மு.க வுடன் சேர்ந்து நிற்க விரும்பவில்லை. நாங்கள் வலிமையடையும் வரை பொறுமையாக இருப்போம். அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவது பற்றி யோசிப்போம். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இரண்டு இயக்கங்களும்தான். சட்டமன்றத்தில் மக்கள் பிரந்ச்சனையை பற்றியா இவர்கள் பேசுகிறார்கள். இந்த அம்மா வீட்டில் யாரோ நுழைந்து விட்டானாம். அதை பற்றி பேசி இருவரும் அடித்துக் கொள்ளத்தான் நேரம் ஒதுக்குகிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். எல்லா கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் சட்டமன்றத்துக்கு போனால் கூட எங்கள் கருத்துக்களை முன் எடுத்து செல்ல அந்த மன்றத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோமே தவிர, பதவி சுகத்துக்காக அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.
வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இவர்களை தொடர்ந்து தற்போது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?
நல்லதுதானே? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்போம்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த வன்னி அரசு என்பவர் மீது விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாரே?
மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பால்ரஸ் கடத்தினார்கள், 500 சி.சி என்ஜினை கடத்தினார்கள் என்று சிலர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இன்றைக்கு கவனித்தீர்களா? அநுராதபுரத்தில் இலங்கை விமான படையினர் மீது வான் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் புலிகள். அவர்களா 500 சிசி என்ஜினையும், பால்ரஸ் குண்டுகளையும் கடத்திவர சொல்லியிருப்பார்கள்? உண்மையில் நடப்பது வேறு. புலிகளுக்கு எதிரான தடை சட்டம் விரைவில் காலாவதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் இதுபோன்ற சில பொய் வழக்குகளை போட்டு, அந்த சட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வைப்பதற்காக புனையப்படுகிற சம்பவங்கள்தான் இவைகள்.
சிங்களப்படம் எடுப்பேன் என்று நடிகை ராதிகா சொல்லியிருக்கிறாரே?
சினிமாக்காரர்களை பற்றி நான் என்ன கருத்து சொல்வது? வேண்டாம், விடுங்கள்...
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு பாதுகாப்பு இருக்காது என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. தற்போது எழுப்பப்படும் பிரச்சனைகளில் இலங்கை அரசின் மறைமுக பங்கு இருக்கும் என்று கருதுகிறீர்களா?
ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பேசப்பட்ட திட்டம் இது. பின்பு நேரு தலைமையில் மந்திரி சபை nedumaranகூடி ஒப்புக் கொண்ட முடிவு இது. அப்போது சிறிமாவோ பண்டாரநாயகா அங்கே பிரதமராக இருந்தார்கள். அவர்கள் உடனே நேருவுக்கு கடிதம் எழுதினார்கள். 'இந்த கால்வாய் திட்டம் வந்தால் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவமே போய்விடும். எங்கள் பொருளாதாரமே அழிந்து போய்விடும். ஒரு சின்ன நாட்டினுடைய பொருளாதாரத்தை நீங்கள் அழிக்கலாமா?' என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த திட்டத்தை தொடராமலே விட்டுவிட்டார் நேரு. பிறகு நான் அப்போது சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று பேசினேன். அதன்பிறகும் இலங்கையின் நெருக்கடி காரணமாக சேது கால்வாய் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டார்கள்.
இந்த திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம். சேது கால்வாய் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ரோடு திட்டம், அகல ரயில்பாதை திட்டம், இவை தென்மாவட்டங்களில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட திட்டங்கள். இதில் சேது கால்வாய் திட்டத்தை தவிர, மற்றவை நிறைவேற்றப்பட்டு விட்டன. சேது கால்வாய் திட்டமும் நிறைவேறினால்தான் தென் மாவட்டங்களில் நாம் நினைக்கிற வளர்ச்சியை அடைய முடியும். இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். சில பத்திரிகைகள் கூட இந்த திட்டத்திற்கு எதிராக எழுதுகின்றன. இலங்கை அரசின் பின்னணி இல்லாமல் இந்த செயல்கள் இல்லை. இப்போது மதரீதியாக இந்த திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். இராமர் பாலம் என்பதெல்லாம் அந்த வகையில் கிளப்பப்படுகிற விஷயங்கள்தான்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சுனாமி வந்ததனால் புலிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு அதனால் சில பின்னடைவுகள் ஏற்பட்டுவிட்டதா? சுனாமி வராமல் இருந்திருந்தால் இலங்கை ராணுவத்தை இன்னும் பலமாக தாக்கியிருப்பார்களா?
இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் மட்டுமல்ல... இந்திய ராணுவம் அங்கு போயிருக்காவிட்டால் கூட எப்போதோ ஈழப்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். இந்திய ராணுவத்தையும், இலங்கை ராணுவத்தையும் ஒரே நேரத்தில் அவர்கள் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. எல்லாவற்றையும் மக்கள் துணையோடு தடுத்து இன்னமும் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொடா சட்டம் திரும்ப பெறப்பட்டு விட்டது. சிறையில் நீங்கள் சந்தித்த அனுபவங்களை எழுதும் எண்ணம் இருக்கிறதா?
பொடாவின் போது சிறையில் இருந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். பல உண்மைகளை அது உலகுக்கு சொல்லும்.
இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரச்சனை மட்டுமல்ல இது. இந்தியாவின் nedumaranபாதுகாப்பையும் பொறுத்த பிரச்சனை இது. இந்திரா காந்திக்கு புரிந்தது. தற்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை. பாகிஸ்தான், சீன அரசுகளோடு இந்தியாவுக்கு சண்டை வந்தபோது நேரு காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தார்கள். பெரிய கனரக தொழிற்சாலைகள், குறிப்பாக ராணுவ ஆயுத தொழிற்சாலைகளை வட இந்தியாவில் அமைக்கக்கூடாது. பாதுகாப்பாக இருக்காது. ஒருபக்கம் பாகிஸ்தான் தாக்கலாம். அல்லது சீனா தாக்கலாம். அதை தென்னிந்தியாவில் அமைப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி விமான உற்பத்தி தொழிற்சாலையை பெங்களுரிலும், ஆவடி டாங்கி தொழிற்சாலையை சென்னையிலும், ஹெவி பாய்லர்ஸ் தொழிற்சாலையை திருச்சியிலும், அமைத்தார்கள்.
இப்படி பாதுகாப்பு கருதி அனைத்தும் இங்கே அமைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் சீனாக்காரனும், பாகிஸ்தான்காரனும் ஊடுருவி நிற்கிறானே? தென்னிந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்ததற்கு யார் காரணம்? சென்னையிலோ, பெங்களுரிலோ, கல்கத்தாவிலோ சில நாடுகளின் துணை தூதரகங்களை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் தூதரகத்தை மட்டும் சென்னையில் வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பிடிவாதமாக மறுத்தது. ஏனென்றால் தென்பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவல் வந்துவிடக்கூடாது என்பதால்தான்.
இந்திராகாந்தி இருக்கும்போது திரிகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை தளம் அமைக்கும் முயற்சி நடந்தது. 'இந்துமாக்கடல் பகுதியில் எந்த வல்லரசாவது ராணுவ தளம் அமைக்க முற்பட்டால், அது இந்தியாவுக்கு எதிரான செயல். இதை அனுமதிக்க முடியாது' என்று இந்திராகாந்தி எச்சரித்தார்கள். ஜெயவர்த்தனா அடங்கிவிட்டார். அது மாதிரியல்லவா இப்போது இந்தியா எச்சரிக்க வேண்டும்? 'நீ பாகிஸ்தானில் ஆயுதம் வாங்கிவிடுவாயா?' என்று எச்சரித்தால் இலங்கை அடங்கிவிடுமே. இலங்கை ஏன் இவ்வளவு ஆயுதங்களை வாங்குகிறது. பல கோணத்தில் ஏன் இந்தியா பார்க்கவில்லை. இதன் விளைவு மிக மோசமாக இந்தியாவை தாக்கும். பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கவியரசு கண்ணதாசனோடு நெருங்கி பழகியவர் நீங்கள். அவரைப்பற்றிய நினைவுகளில் ஏதாவதொன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்?.
கண்ணதாசன் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. என்னை தன் சொந்த nedumaranசகோதரன் போல் வைத்திருந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திரா காங்கிரசிற்கு அவர் போனபிறகு, நான் காமராஜரோடு இருந்த போதிலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. பல நேரங்களில் அரசியலில் எனக்கு பெருந்துணையாக இருந்தார். இறுதிகாலத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாது. அவருக்கு உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்கிற நேரம். நான் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு திரும்ப தாமதாமாகிவிட்டது. தொலைபேசியில் அவரிடம் வழியனுப்ப வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன்.
'பரவாயில்லை. வரும்போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டும்?' என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். நீங்கள் நல்லபடியாக போய் வாருங்கள்' என்றேன். 'சொல்லுங்க ஏதாவது?' என்றார் பிடிவாதமாக. 'சொல்லட்டுமா?' என்றேன். 'சொல்லுங்க!' என்றார். 'நீங்க வரும்போது ஏதாவது அமெரிக்க பொண்ஜாதியோடு வந்திடாதீங்க' என்றேன். தொலைபேசியில் அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே... இன்னும் கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
சந்திப்பு- ஆர்.எஸ்.அந்தணன்            
படங்கள்- பிரகதீஷ்வரன். 
                                                        

unarchitamilan

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : பழ. நெடுமாறன்


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் (81) மறைவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ. நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழீழத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரது கணவரும் வாழ முயலவில்லை.
தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனை துன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள ராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை.
சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.

இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனிதநேயம் கொஞ்சமும் இல்லாமல் முறியடித்தன.

தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம் அவருடைய மனநிலையை மேலும் பாதித்துவிட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர் காலமாகியிருக்கிறார்.

அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) மாலை 4 மணிக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்’’ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 




 unarchitamilan










தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீர வணக்கம்


                      














தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் 
அவர்களுக்கு வீர வணக்கம்


unarchitamilan











தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறைபதம் எய்தினார்.

 கடந்த பல ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் சிறையில் சிக்கித் தவித்து நோய்வாய்பாட்டு இருந்த தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இன்று( ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.30 மணியளவில் இறையடி எய்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன விடுதலைப் போராளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் விடிவெள்ளியாக, விடுதலையின் குறியீடான எங்கள் தேசியத் தலைவரை இந்த மன்ணுக்குத் தந்த என் தாயார் இன்று நம்மிடையே இல்லை. தமிழ் தேசத்தின் தியாகச் சுடராக அவர் இன்று உலகெமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிககும் அனைவரின் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும். நாங்க‌ள் வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ க‌ரிகால‌னை நேரில் காட்டிய‌வர் அன்னை.அன்னைக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
விரைவில் இந்த இழி நிலை மாறும். அன்னைக்கு  புரட்சிகர வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறேன். . தனது இறுதிக்காலத்தில் தனது உடல் நலனுக்குச் சிகிச்சை பெறும் பொருட்டு தாய்த் தமிழ்நாடு வந்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதநேயமற்றுத் திருப்பி அனுப்பினார்கள்.
எந்த ஆட்சி அதிகாரம் அவருக்கு அனுமதி மறுத்ததோ அந்த ஆட்சி அதிகாரமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் இன்று நம் நாட்டின் சாலைகளெங்கும், தெருக்கள் எங்கும், சந்து பொந்துகள் எங்கும் அன்னையின் தியாகத் திருவுருவத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற வேண்டும்
      


unarchitamilan
.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

இன்று எகிப்து... நாளை இந்தியா?

இன்று எகிப்து... நாளை இந்தியா?வீன உலகின் மக்கள் புரட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?
சந்தேகமே இல்லாமல், எகிப்தைக் கை காட்டலாம்! 30 வருட சர்வாதிகார ஆட்சியை, வெகுமக்கள் போராட்டத்தால் தூக்கி வீசியிருக்கிறது கிளியோபாட்ரா தேசம்.  
கெய்ரோ மாநகரின் தஹ்ரீர் சதுக்கத்தில்18 நாட்களாக லட்சக்கணக்கில் திரண்ட மக்கள், 30 ஆண்டுகளாக நாட்டை சர்வாதிகாரம் செய்துகொண்டு இருந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை (82) நாட்டைவிட்டு ஓடவைத்தனர்.
எகிப்தின் அடிப்படைப் பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும் ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும் ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச் செழிப்பான நாடு எகிப்து. ஒரு வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான். ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார நெருக்கடி, குழு மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன. அப்போதுதான் நடந்தது மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான் தொடங்குகிறது.
23 ஆண்டுகளாக துனிஷியாவை சர்வாதிகாரம் செய்து வந்தவர் அதிபர் பென் அலி. 74 வயதாகும் இவர், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்தோ, மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ சிறிதும் கவலைப்படவில்லை. அரபு நாடுகளில் அதிகம் படித்தவர்கள் உள்ள நாடு துனிஷியாதான். ஆனால், அங்கேயும் வறுமை. இதை எதிர்த்துப் போராடினால், சிறையும் மரணமுமே பரிசு. அந்த நிலை யில்தான், முஹமது வுவாசி என்ற வேலை அற்ற பட்டதாரி இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். முஹமது செல்வாக்கானவரோ, புகழ்பெற்றவரோ இல்லை. ஆனால், மக்களின் கோபத்தை, அவரது மரணம் ஒருங்கிணைத்தது. ஒட்டுமொத்தத் துனிஷிய மக்களும் கோபாவேசத்துடன் போராட, கடைசியில் அதிபர் பென் அலி, நாட்டை விட்டு ஓடிப்போனார்.  
துனிஷிய மக்கள் புரட்சி எப்படி ஒரு தற்கொலையால் துவக்கிவைக்கப்பட்டதோ, அதேபோல எகிப்துப் புரட்சியும், காலித் சையித் என்ற இளைஞனின் தற்கொலையில் இருந்துதான் துவங்கியது. எகிப்து போலீஸின் அத்துமீறல் வீடியோவை இணையத்தில் வெளியிட்டார் என்ற 'குற்றத்துக்காக’ போலீஸ் அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தது. அதுவரை சிறுசிறு குழுக்களாக நடந்த மக்கள் போராட்டங்களை காலித் சையித்தின் மரணம் ஒன்று சேர்த்தது.
உண்மையில் துனிஷியா, எகிப்து... இரண்டு நாடுகளின் மக்கள் போராட்டத்தை ஒருங் கிணைத்ததும், வெற்றிபெற வைத்ததும் தொழில் நுட்பம்தான். twitter, facebook ஆகிய சமூக வலைதளங்களும், வீடியோ வலைதளமான youtube-ம் இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தன. எகிப்துப் போராட்டத்தில் கலந்துகொள்ள facebook மூலம் விடுக்கப்பட்ட அழைப்பால் வந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த வலைதளங்களை எகிப்து அரசு தடை செய்தபோதிலும், வெளிநாடு வாழ் எகிப்தியர்களால் தகவல்கள் பரபரவெனக் கொண்டுசெல்லப்பட்டன. துனிஷியாவிலும் இப்படித்தான் தடை செய்தார்கள். ஆனால், இணைய இணைப்பு உள்ள கேமரா மொபைல் மூலம், போராட்டக் களத்தில் நின்றபடி உடனுக்குடன் எல்லாவற்றையும் இணையத்தில் பரப்புவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இணையத்தைத் தாண்டி, உண்மையை வெளி உலகுக்குச் சொன்ன அல் ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை மூடி, அதன் நிருபர்கள் ஆறு பேரைக் கைது செய்தது எகிப்து அரசு. எல்லா அடக்குமுறைகளையும் இறுதியில் மக்கள் புரட்சி வென்றுவிட்டது.
துனிஷியா, எகிப்து... எனப் பரவும் மக்கள் புரட்சியின் அடுத்த கட்டமாக, இப்போது ஏமன் நாட்டு சர்வாதிகாரி சலேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. உள்ளூர்ப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜோர்டானிலும் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளில் ஓர் அலையைப்போலப் பரவி வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு அதிகம் அஞ்சுவது அமெரிக்காதான். ஏனெனில், பல காலமாக எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளில் நகாசு அரசியல் செய்து வருகிறது அமெரிக்கா. இப்போது தன் செல்வாக்கு எல்லையைத் தாண்டி மக்களின் போராட்டம் நடப்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறது.
இப்போது துனிஷியாவில் பென் அலி, எகிப்தில் முபாரக் போல... சில காலம் முன்பு இரானில் மன்னர் ஷா, பிலிப்பைன்ஸில் மார்கோஸ், பனாமாவில் நொரீகா, இராக்கில் சதாம்... என அமெரிக்க விசுவாசிகள் பலர் இருந்தனர். மக்கள் புரட்சி வெடித்தபோது, அனைவரையும் அமெரிக்கா கடைசி நேரத்தில் கழுத்தறுத்துக் கைவிட்டதுதான் வரலாறு. தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதி தீவிர விசுவாசியாக இந்தியா இருக்கிறது. எனில், இந்தியாவின் முபாரக், இந்தியாவின் பென் அலி யார்?
* ஆனந்த விகடன் * 23-02-2011
                                                            
unarchitamilan

'கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!' : தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்



ஃபிரான்ஸ் நாட்டு அரச நாற்காலியில் அமர்ந்த மாவீரன் நெப்போலியன் தன் மனைவி ஜோசபைனுக்கு வரைந்த காதல் கடிதத்தில், 'அன்பே, உன்னைக் காதலித்து உள்ளம் உருகாமல் ஒரு நாளைக்கூட நான் கழித்தது இல்லை. உன்னை நினைவுகளால் தழுவி மகிழாமல் ஓர் இரவைக்கூட நான் வீணாக்கியது இல்லை’ என்று குறிப்பிட்டான். நம் அரசியல்வாதிகளும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒரு நாளையும் கழித்தது இல்லை; பணப் பெட்டியின் ஸ்பரிசம் இல்லாமல் ஓர் இரவையும் வீணாக்குவது இல்லை.
எந்த மனிதனும் காதலிக்காமல் கண் மூடுவது இல்லை. பெண்ணைக் காதலிக்காதவன் கடவுளைக் காதலிக்கிறான். இருவரையுமே காதலிக்காதவன் ஒரு கட்சியின் தலைமையைக் காதலிக்கிறான். கட்சித் தலைமை அவனுடைய காதலில் நெகிழ்ந்து, பரிசாகக் கொடுத்த பதவியின் மேல், பின்னர் அவனுடைய காதல் கனிகிறது. கால நடையில் பதவியின் மூலம் வந்து சேரும் பணத்தின் மீது அவன்கொண்ட காதல், பல்கிப் பெருகி அவனைப் பைத்தியமாக்கிவிடுகிறது. லைலாவின் மீதுகொண்ட காதலால் பைத்தியம் பிடித்துப் பாலை நிலத்தில் அலைந்து திரிந்த சயசுக்கு, மான அவமானம் குறித்த பிரக்ஞைஅற்றுப் போனதுபோல், பணத்தின் மீது படிந்துவிட்ட வெறித்தனமான காதலால், நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் மான அவமானம் குறித்த பிரக்ஞை முற்றாக மரத்துப்போய்விட்டது. ஊழல்தான் அரசியல்வாதிகளின் அன்பிற்குரிய காதலி. ஊழலில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, ஊழலில் வாழ்ந்து, ஊழலிலேயே ஐக்கியமாவதுதான் இன்றைய அரசியல்வாதியின் இலக்கணம்!
'ஊழல்தான் நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் பெரு நோய்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வாய் மலர்ந்து இருக்கிறார். அந்த நோயைத் தீர்க்க எந்த மருந்தும் அவரிடம் இல்லை என்பதுதான் நாடு செய்த பாவம். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். ஊழலை ஊழலால் ஒழிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் ஊழல் குறித்துச் சிந்திப்பதற்கே நேரம் இல்லாத ஞானச் சித்தர்களாகிவிட்டனர் நம் மக்கள். எய்ட்ஸ் நோயைவிட மிகவும் கொடியது ஊழல் நோய் என்று இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
'ஊழல்... ஜனநாயகத்தின் உயிரைப் பறிக்கும்; நேர்மையான ஆட்சி முறையை நிர்மூலமாக்கும்’ என்ற உண்மையை எப்போது நாம் உணரப் போகிறோம்? அடித்த கொள்ளையில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் போதும் என்று நினைக்கும் நிலைக்கு நாம் இழிந்துவிட்டோமே!
ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள் வறுமையில் வாடுவதற்கு முதற் காரணம், அங்கு உள்ள ஆட்சியாளர்களே. நைஜீரியாவில் மட்டும் மக்களின் வளம் சுரண்டப்பட்டு, 400 பில்லியன் டாலர் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிகமான கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்திருக்கும் 'பெருமை’ நம் நாட்டுக்குத்தான் வாய்த்திருக்கிறது. 'வறுமையே வெளியேறு’ என்று வாய் கிழிய முழங்குபவர்களும், 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண’ முயல்பவர்களும் சொந்த மண்ணில் சுரண்டிய பணத்தை அந்நிய மண்ணில் அடுக்கிவைத்துள்ளனர். உலகக் கறுப்புப் பணத்தில் இந்தியர்களின் பணம் 60 சதவிகிதமாம். 'பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே. போற்றுவோம் இதை எமக்கில்லை ஈடே’!
வெள்ளையர் நம் மண்ணை ஆண்டபோதே நம் அரசியல்வாதிகளில் சிலருக்கு ஊழல் தேவதையின் மீது காதல் கனிந்துவிட்டது. காங்கிரஸ் 1937-ல் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த மாகாணங்களில் ஊழல் உருப்பெற்றபோது மகாத்மா காந்தி, 'ஊழலின் முடை நாற்றம் பெருகுமானால், காங்கிரஸ் கட்சிக்கு நானே கல்லறை கட்டிவிடுவேன்’ என்றார். நாடு விடுதலை அடைந்த பின்பும், 1948 ஜனவரி 12-ம் நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆந்திராவில் இருந்து பழம் பெரும் தியாகி வெங்கடப்பய்யா தனக்கு எழுதிய கடிதத்தைப் பகிரங்கமாகப் படித்தார் அண்ணல் காந்தி.
'மிகவும் சிக்கலான அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அடுத்து மிகப் பெரிய பிரச்னை காங்கிரஸ்காரர்கள் தார்மீகரீதியாகத் தாழ்ந்துபோய் இருப்பது தான். அரசியல் அதிகாரத்தின் ருசி அவர் களின் தலைக்கேறிவிட்டது. எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி-க்கள் நடவடிக்கைகளும், மந்திரிகளின் பலவீனங்களும் மக்களிடையே கலக உணர்வை ஊட்டி வருகின்றன. வெள்ளைக்காரர்களின் அரசாங்கமே பரவாயில்லை என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்’ என்று வெங்கடப்பய்யா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். நேரு காலத்தில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த ஊழல், மன்மோகன் சிங் காலத்தில் ஊழித் தாண்டவம் புரிகிறது!
நேர்மைக்குப் பெயர் பெற்ற அதிகாரி கோர்வாலா என்பவரிடம் நிர்வாகத் திறன் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி நேருவின் அரசு வேண்டியது. கோர்வாலா சமர்ப்பித்த அறிக்கையில், 'நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும், ஊழல் அமைச்சர்களைப் பாதுகாக்க நேருவின் அரசு நியாயத்தின் வழி மீறிச் செல்வதாகவும் நெஞ்சுரத்துடன் குறிப்பிட்டார். ஊழலின் நிழல்படாத நேரு அன்று நட்புக்காகப் பழி சுமந்தார். ஊழலில் ஈடுபடாத மன்மோகன் சிங், சோனியா காந்தி தந்த பதவிக்காக இன்று தெரிந்தே பழி சுமக்கிறார்.
ஊழலும் உறவுகளுக்குக் காட்டிய சலுகைகளும்தான் ரோமப் பேரரசை வீழ்த்தியது; பிரெஞ்சுப் புரட்சிக்கு வழி வகுத்தது; ருஷ்யப் புரட்சிக்கு வித்தூன்றியது; சீனாவில் சியாங்காய் ஷேக்கின் ஆட்சிக்கு முடிவு கட்டியது என்ற வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளக்கூட நம் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை.
'சிற்றின்பலோலர்களும், ஆடம்பரப் பிரியர்களும் நம் அரசியல் உலகை ஆக்கிரமித்துக்கொண்டனர்’ என்று சுந்தர ராமசாமி எழுதியது எவ்வளவு பெரிய உண்மை!
'மண்ணின்பம், பெண்ணின்பம், பொன்னின்பம் மூன்றும் எல்லையற்று அனுபவிக்க வேண்டும். அதற்கு அளவற்ற பணம் அவசியம். அதை எந்த வழியில் திரட்டினாலும் தவறு இல்லை. ஆளப்படுவோரின் உள்ளங்களில் முறை தவறிய ஆசைகளை வளர்த்துவிட்டால், ஆள்பவரின் ஊழல் அசிங்கங்களுக்கு எதிராக எந்தக் கிளர்ச்சியும் வளர்ச்சி பெறாது. ஊழல் நாயகர்கள்கூட 'தகத்தகாய கதிரவன்’களாக சமூக வீதிகளில் கொஞ்சமும் கூச்சமற்றுப் பேருலா வரலாம்’ என்று புறப்பட்டுவிட்ட யுக புருஷர்களின் முற்றுகையில், அரசியல் உலகம் சிறைபட்டுவிட்டது. அதிகார வர்க்கம் திருட்டுத் தேனைச் சுவைத்தபடி பல்லக்குத் தூக்கப் பழகிவிட்டது. பெரும் தொழிலதிபர்கள் நீரா ராடியா போன்ற சாதுர்ய சாகசப் பெண்மணிகள் மூலம் அரசின் முடிவுகளைத் தங்க ளுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் கலையைக் கற்றுத் தேர்ந்துவிட்டனர். பாவம், பாரதப் புத்திரர்கள் மட்டும் கந்தல் ஆடையும், கிழிந்த பாயும், கஞ்சிக் கலயமும் மட்டும் சொத்தாகக் கொண்டு 'சுகித்துக்’கிடக்கின்றனர்.
'நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, காரண காரியங்களோடு சமாதானம் கூற முடியாத காரியங்களை நாம் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றார் காந்தி. அந்த ஆயிரம் ஆண்கள், பெண்களின் கண்களில் கறுப்புத் துணி கட்டும் துணிவை இந்த அக்கிரமக்காரர்களுக்கு யார் கொடுத்தது? உங்கள் கண்களை 'கறுப்புத் துணி’ மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
 
 
 
 
unarchitamilan

வியாழன், 17 பிப்ரவரி, 2011

வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்


வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்



லகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு இதுவரை ஏழாயிரம் கோடி ருபாய் கடன் தள்ளுபடி செய்தும் , விவசாயிகளுக்கு பல மானியங்களும் வழங்கி , வட்டியில்லா கடன் வழங்கி பல நன்மைகளை செய்துள்ளது . அதோடு மட்டுமல்லாமல் விவசாயக் கொள்கை விவசாய உற்பத்தியின் இலக்குகள் மற்றும் முறைகளிலேயே கவனம் செலுத்துகிறது. இத்துடன் விவசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தின் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:

* பாதுகாத்தல்

* பொருளாதார நிலைப்புத்தன்மை

* சுற்றுச்சூழல் தாக்கம்

* உணவுத் தரம் : உணவு அளிப்பு சீராகவும் தரம் தெரிந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வது.

* உணவு தன்னிறைவு : ஜனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.

* உணவு பாதுகாப்பு : உணவு அளிப்பு மாசுபாடு இன்றி இருப்பதை உறுதிப்படுத்துவது.

* உணவு பாதுகாத்தல் : உணவு அளிப்பு மக்கள்தொகை தேவைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது.

* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு

* சுற்றுச்சூழல் தாக்கம்

* பொருளாதார உறுதிப்பாடு.

* வறுமை குறைப்பு

 வேளாண் துறை சார்பாக பல பயிற்சிகள் நடத்துகிறது . எங்கள் ஒன்றியத்தில் இப்பயிற்சிக்கு சுமார் ஆயிரம் விவசாயிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்தும் வெறும் ஐம்பது பேர் மட்டுமே கலந்து கொண்டது வருந்தத்தக்க ஒன்று .. நேரத்தை வீணாக்கி போராட்டம் , மறியல் , மாநாடு போன்ற செயல்களில் ஈடுபடும் இவர்கள் ஏன் இது போன்ற பயிற்சிகளை புறக்கணித்தும் அரசாங்கத்தினை குறை கூறிக்கொண்டும் உள்ளனர் ...??

விவசாயி விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அவன் வாழ்வில் முன்னேற்றம் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்கும் ..இது போன்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு இயற்கை விவசாயம்,புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிக ரீதியாக லாபம் அடைவது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் ..

கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிகளவு வேளாண்மை முதலீடுகள், குறைந்து வரும் லாபம், வானிலை மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக ஏற்படும் வேளாண் இழப்பீடுகளினாலும், பாகப்பிரிவினை காரணமாகவும் விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.

இவ்வாறு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் விவசாயத்தில் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முடியாத காராணத்தால் குறைந்த அளவு மகசூல் வரும் சூழல் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், விவசாயிகளிடம் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் பெறும் வகையில் புதிய விவசாய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.


வரப்பு இல்லா விவசாயம்:

விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம், புதிய விவசாய தொழில்நுட்ப அறிமுகம், அதிகளவு சந்தை வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டுதான் வரப்பு இல்லா விவசாயம் என்ற புதிய விவசாய முறை இந்தியாவின் சில வேளாண் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

இந்த புதிய விவசாய செயல்திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் சமூக அமைப்புகள் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் கூடிப் பேசி, தங்களின் சிறிய நிலங்களை வரப்புகளை அகற்றி ஒன்றுபடுத்த வேண்டும். இவ்வாறு கிராம அளவில் ஒன்றாக 10 முதல் 15 விவசாயிகள் ஒன்றாக சேரும் போது ஒரளவு அதிக பரப்பளவு நிலத்தை ஒன்றாக சாகுபடியின் கீழ் கொண்டு வர முடியும்.

பின்னர் மண் மற்றும் நீர் பரிசோதனை வாயிலாக அறிவியல் பூர்வமாக நிலத்தின் தன்மைக்கேற்ப சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நிலத்தின் தன்மைக் கேற்ப ஒரு பகுதியில் காய்கள், தோட்டக்கலை பயிர்கள், சிறு தானியங்கள், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைக்கேற்ப தேவைப்படும் வேளாண் விளை பொருள்களை நிலப்பரப்பிற்கு ஏற்ப திட்டமிட்டு சாகுபடி செய்யலாம். வரப்பு இல்லா விவசாயத்துக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகள் தங்களின் குடும்ப தேவைக்கேற்ப வேளாண் விளை பொருள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்புதிய செயல் திட்டத்தில் உருவாக்கப்படும் பொதுவான விவசாய கட்டமைப்புகளை பொதுவான விவசாய நிலப்பரப்புகளில் குறிப்பாக வாய்க்கால் பகுதிகளில், புறம்போக்கு இடங்களில் அமைத்துக் கொள்வதன் வாயிலாக பல நிகழ் மற்றும் எதிர்கால தேவை மற்றும் பொது பயன்பாடு பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்வுகள் பெறலாம். இவ்வாறு வரப்பு இல்லாத விவசாயத்தின் கீழ் செயல்படும் விவசாயிகள் ஒரு விவசாய சங்கமாக தங்களை பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களில் விவசாயிகள் கூட்டாக இணைந்து நிதி சேவைகளை பெறலாம். இச்செயல் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்கள் தனியாகவே பதிவு செய்யப்பட்டு பட்டா உள்ள நிலையில் தனி நபராகவும், விவசாய நலத்திட்டங்களில் பங்கு பெற முடியும்.

பிற பயன்கள்: 


Fill the form:
Fields marked (*) are mandatory
சிறு மற்றும் குறு விவசாயிகள் திட்டமிட்டு விவசாயப் பணிகளை இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுத்தும் போதும் அதிகளவு வேளாண் முதலீடுகளை செய்ய முடியும். உதாரணமாக சிறு விவசாயி தனிப்படை முறையில் ஆழ்கிணறுகள் தனியாக அமைப்பதை விட கூட்டாக அமைக்கும் போது செலவுகள் குறையும், பல புதிய விவசாய தொழில்நுட்பங்களாக சொட்டு நீர் பாசனம் ​(Drip​ irrig​ation), தெளிப்பு நீர் பாசனம் ​(sprinkler​ Irrig​ation)​ ஆகியவற்றில் அதிகளவு வேளாண் முதலீடுகள் செய்து தங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை வெகுவாக பெருக்க முடியும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தின் அளவுக்கு ஏற்பவும், தங்களின் மனித உழைப்புக்கு ஏற்பவும் வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்ளலாம். வெளி ஊர்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் பல விவசாய நிலங்கள் உற்பத்தி இல்லாமல் தரிசாக கிடப்பது தவிர்க்கப்படும். அவர்களுக்கு விவசாயிகள் நிர்ணயம் செய்த குத்தகைப் பணத்தை பருவம் தோறும் வழங்கலாம். பெரிய வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முன்பே விலை நிர்ணயம் செய்த விலையின் அடிப்படையில் வேளாண் விளை பொருள்களை உற்பத்தி செய்து விற்று அதிகளவு லாபம் பெறலாம.

எனவே தமிழகத்தின் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும் இதுபோன்ற புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்திகள் வாயிலாக அதிகளவு லாபம் பெறலாம்.

வரப்பு இல்லா விவசாயத்தை கிராமங்களில் அறிமுகம் செய்து, விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும்

குறிப்பு :-

"இலவச வேளாண் வணிகப் பயிற்சி"

மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இலவச ஆலோசனை

விவசாயிகள் தங்களின் கேள்விகளுக்கு இலவசமாக பதில் பெற ""கிஸான் கால் சென்டர்'' மையத்தை கட்டணமில்லாத எண்ணை 1800 - 180 - 1551 தொடர்பு கொள்ளவும்.

இலவச வானிலை தகவல்

தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் அறிய ' 1800 - 180 -1717 ' அழைக்கவும்.
 
 


UNARCHITAMILAN