மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குல்தீப் நய்யாரின் பேட்டி! வைகோ தான் என் சாய்ஸ்.

மகாத்மா காந்தி, முகமது அலிஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்… பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல்  கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்… இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் ‘ஸ்கூப்’கள் இவை.
 ”91 வயதில் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறீர்கள். இன்றும் ‘விஷயம் அறிந்த’ பத்திரிகையாளராகவே இருப்பதன் ரகசியம் என்ன?”
”என்னுடைய ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. தொடர்புகளையும் நட்பையும் பெரிதும் மதித்துக் கொண்டாடுகிறேன். பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் மூன்று மணி நேரமும் மட்டுமே தூங்குகிறேன். நாளன்றுக்குச் சாதாரணமாக 27 செய்தித்தாள்கள் படிக்கிறேன். வார இதழ்களும் இன்ன பிற புத்தகங்களும் கணக்கில் வராதவை. முதுமை சுமை குறைக்க வாரத்தில் மூன்று நாட்கள் ஆயில் மசாஜ். மீதி நாட்கள் யோகா. முடிந்தவரை என் துன்பங்களையும் சோகங்களையும் சிந்திக்க மறுக்கிறேன். இதன் பெயர் ரகசியமா? தெரியவில்லை.”
”70 ஆண்டு ஊடகத் துறைப் பணியில் உங்களை மிக அதிகமாகப் பாதித்த அசைன்மென்ட் எது?”
”மகாத்மா காந்தியின் படுகொலை. ‘காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்ற டிரங்கால் தகவல் கேட்டு ‘பிர்லா’ ஹவுஸ் நோக்கி ஓடினேன். பிர்லா ஹவுஸில் கூடியிருந்த ம‌க்களின் அழுகை ஓலங் களையும் கண்ணீரையும் ஆங்காங்கே ஈரம்கூடக் காயாமல் சிதறிக்கிடந்த பாபுஜியின் ரத்தத்தையும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.”
”உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”
”ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளர் டால்ஸ்டாய். அவருடைய ‘வார் அண்ட் பீஸ்’ எனக்கு மிகப் பிடித்த நாவல்.”
”இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களோடும் பழகியவர் என்ற முறையில் சொல்லுங்கள்… இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் சிறந்தவர் யார்… மோசமானவர் யார்?”
”சிறந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. மோசமான பிரதமர் அவருடைய மகள் இந்திரா காந்தி. தன் வளர்ச்சிக்கு உதவிய லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களைக்கூட அவர் ஒழுங்காக நடத்தவில்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தி செய்த அட்டூழியங்களை எவராலும் மறக்க முடியாது!”
”காமராஜருடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் இருந்தது அல்லவா?”
”ஆமாம். காமராஜர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். பிரதமர் பதவி பல முறை அவரைத் தேடி வந்தபோதும் மறுத்தவர் அவர். எத்தனை பெரிய தியாகம்? லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு, காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் பேசி இந்திரா காந்தியைப் பிரதமர்ஆக்கியவர் காமராஜர். ஆனால், இந்திரா பிறப்பித்த ‘எமர்ஜென்ஸி’ காமராஜரை வெகுவாகப் பாதித்தது. நான் எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்துவிட்டு காமராஜரைச் சந்திக்க சென்னைக்கு வந்தேன். அப்போது இந்திரா காந்தியைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்த தவறான முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டு என் எதிரிலேயே நான்கு முறை தலையில் அடித்துக்கொண்டார். அந்தக் குற்ற உணர்வுதான் அவர் உயிரைச் சீக்கிரமே பறித்துக்கொண்டது.”
” ‘இந்தியா ஜனநாயகரீதியாகத் தோல்வி அடைந்துவிட்டது!’, ‘ஜனநாயகம் என்பது மெஜாரிட்டியின் சர்வாதிகாரம்’ – சமீப கால‌மாக மிக அதிகமாக அடிபடும் வாதங்கள் இவை. பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர் என்ற முறையில், இந்த வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
(நீண்ட மௌனத்துக்குப் பிறகு…) ”இந்தியாவில் சமீபமாக அரங்கேறும் அத்துமீறல்கள், ஊழல், வன்முறை, மக்கள் விரோத அரசியல் ஆகியவையே அந்த வாதங்களின் பிறப்பிடம். இவற்றை எல்லாம் பொய் என மறுக்க முடியாது. இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சைப் போராட்டம், கவனத்தில்கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில் அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின மக்களின் விசும்பல்… இவை எல்லாமே இந்திய ஜனநாயகத்தின் காலரைப் பிடிப்பவைதான். பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலகட்டம், தற்போதைய இந்தியா ஆகிய மூன்று காலகட்டத்திலும் வாழ்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்… எனக்கு இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தலைமுறை தலையெடுக்கும் காலத்தில் இந்த நிலை மாறலாம்!”
”இந்திய ஜனநாயகத்துக்குச் சவாலான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?”
”பசி. இன்றைய இந்தியாவில் அரங்கேறும் அத்தனை பயங்கரங்களுக்கும் பின்னணியில் பட்டினியோடு தூங்கப்போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினைவாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித்தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டுவிடும். இன்னொரு முக்கியக் காரணம், இந்து தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந்தியையே பழிவாங்கியது. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான்களால் உருவாக் கப்பட்டவைதானே. சமீப காலமாகத் திரைக்குப் பின்னால் தென்படும் இந்து தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்!”
”ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?’
”மோசமாக… மிக மோசமாக… மிகமிக மோசமாக இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது, பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில் ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று நினைக்கிறார் களோ… அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும் மின்னணுச் சாதனங்களின் வருகை… ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம். பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்தி களையும் வெளியிடுகிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில் இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.”
”இப்போதைய இந்திய முதல்வர்களில் உங்கள் பார்வையில் சிறந்தவர் யார்?”
”பீகார் முதல்வர் நித்திஷ் குமார். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பீகாரைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மெள்ள மெள்ள முன்னேற்றி வருகிறார். சாதிய அரசியல், மோசமான நிர்வாகம், ஊழல், மதப் பிரச்னை போன்ற சமூக விரோதச் சாயல்கள் அவரிடம் இல்லை. அதனால் ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டும் நித்திஷ் வளர்ந்துவருகிறார்.”
”ராகுல் காந்தி – நரேந்திர மோடி… இந்தியப் பிரதமர் போட்டி இவர்களிடையேதான் இருக்குமா?”
”இருவருமே மோசம். சோனியா காந்தியின் மகன் என்பதாலேயே, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். மற்றபடி அவருக்கு பிரதமர் ஆவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. இந்து – முஸ்லிம் கலவரத்தால் என் பிறந்த ஊரான சியால்கோட்டை (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது)விட்டு வெளியேறியபோது ‘இனி இந்தியாவில் மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது’ என வேண்டிக்கொண்டே இந்தியாவுக்குள் நுழைந்தேன். ஆனால், நரேந்திர மோடி குஜராத்தில் அரங்கேற்றிய கொடூரத்தைப் பார்த்துவிட்டு என் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. தூக்கம் வராமல் மூன்று மாதங்கள் தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினேன். அவரா இந்தியத் திருநாட்டின் பிரதமர்? நெவர்!”
”நேரு குடும்பம் சரியான திசையில்தான் பயணிக்கிறதா?”
”ஆம். மிகச் சரியாகவே அழிவின் பாதையில் பயணிக்கிறது. அதை சோனியா நன்றாக வழிநடத்திச் செல்கிறார்.”
”தமிழக அரசியலைக் கவனிக்கிறீர்களா? கருணாநிதி, ஜெயலலிதா யார் உங்கள் சாய்ஸ்?”
”இருவருமே இல்லை. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவர் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். மூன்றாம் சக்தி இல்லாததால் மக்களும் வேறு வழியின்றி மாற்றி மாற்றி வாக்களிக்கிறார்கள். இப்போதைக்கு என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்க லாம்.”
”கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத் தைக் கவனிக்கிறீர்களா?”  
”கூடங்குளம் மக்களின் போராட்டம் மெய்சிலிர்க்கவைக்கிறது. இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு ஆச்சர்யமாக இருக்கிறது. உலகின் பல நாடுகள் எதிர்க்கும் அணு உலையை அடம்பிடித்து இந்தியா அமைப்பது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். அணு உலைகுறித்த அச்சத்தினால் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அச்சத்தைக் களைய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அரச பயங்கரவாதத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன. தனிப்பட்ட முறையில் அணு உலை மீது எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. சூரிய சக்தியையும் காற்றாலையையும் முறையாகப் பயன்படுத்தினாலே, போதிய மின்சாரம் கிடைக்கும்.”
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?”
” ‘இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என ‘சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும். போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, ‘இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப் புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்

வியாழன், 27 செப்டம்பர், 2012

பிரபாகரனின் இடத்தை யாராலும் நிரப்பப்படமுடியாது: - 'றோ'வின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஹரிகரன்


தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இடம் யாராலும் நிரப்பப்பட முடியாதது என்று இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான 'றோ'வின் முன்னாள் பணிப்பாளர் கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் என்ற தனிமனித ஆளுமை ஈழப்போராட்டத்தில் பெரும் சரித்திரமும், வீரத்தின் அடையாளமும் ஆகும் என்ற கருத்தியல் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கி வருகையிலேயே, கேணல் ஆர்.ஹரிகரன்னின் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேணல் ஆர்.ஹரிகரன் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக இராணுவப் புலனாய்வு சிறப்பு அதிகாரியாக பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளில் பணியாற்றிய அதேவேளையில், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகள் போன்றவற்றை முறியடிப்பதிலும் பங்காற்றியுள்ளார்.
1965ல் குச் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், 1971ல் தற்போதைய பங்களாதேசான கிழக்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கை, வடக்கு கிழக்கு மாநிலங்கள், பங்களாதேஸ் மற்றும் சிறிலங்கா ஆகியவற்றில் கிளர்ச்சிமுறியடிப்பு நடவடிக்கைகளிலும் கேணல் ஆர்.ஹரிகரன் பங்கெடுத்துள்ளார்.

இந்தியா செய்தது வரலாற்றுப் பிழை! - குல்தீப் நய்யார்

ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு ராஜபக்ச அரசு அழித்தொழித்த போது தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, இலங்கை எங்கள் நட்பு நாடு என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை என்று இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் குல்தீப் நய்யார் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்? என சேனல் 4 என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும்.
போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, இலங்கை எங்கள் நட்பு நாடு என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!

திங்கள், 24 செப்டம்பர், 2012

வசைத் தமிழ் வல்லவர் - பழ. நெடுமாறன்

சகோதரச் சண்டையால்தான் ஈழத்தில் தோல்வியும் அழிவும் ஏற்பட்டது என்ற பொய்யை திரும்பத் திரும்ப கருணாநிதி கூறிவருவதைக் கண்டித்து நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை 
அவரை படாதபாடு படுத்திவிட்டது.  உண்மை சுட்டதுதான் அதற்குக் காரணமாகும்.  தனது முரசொலி இதழிலும் பொதுக் கூட்டங் களிலும் கடந்த சில நாட்களாக எனக் குப் பதில் சொல்வதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.
"தி.மு.க.வையும் அதன் தலைவ ராகிய அவரையும் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை பழிப்பதும் இழித்துப் பேசுவதும் தவிர வேறு எதையும் கற்றதுமில்லை கடைப்பிடித்ததுமில்லை. புலிகளுக்கிடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும் அதனால் தளபதிகளும் மாவீரர்களும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு ஏற்பட்ட தற்கும் நெடுமாறன் கும்பல் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள்.'' என புலம்பியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவர் பிரபாகரன் அவர்களும் யாரு டைய தூண்டுதலின்படியும் செயல்படுபவர்கள் அல்லர். உலகத்தின் மிகச் சிறந்த விடுதலை இயக்கத்தை இவ்வாறு கூறுவது அதைக் கொச்சைப்படுத்துவதாகும். கருணாநிதியால் பேணி வளர்க் கப்பட்ட டெலோ போன்ற இயக்கங்கள் தான் "ரா'' உளவுத்துறையின் தூண்டுதலுக்கு இரையாகி அழிந்தன.
எனது கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் அவரைப் பற்றி தரக்குறை வான வார்த்தைகள் இடம் பெறவில்லை. அவரைப் பழித்தோ இழித்தோ எதுவும் கூறவில்லை. அவ்வாறு எழுதுவதும் பேசுவதும் எனக்குப் பழக்கம் இல்லாத ஒன்றாகும். அது கருணாநிதிக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும்.
சகோதரச் சண்டையை யார் தொடக்கிவைத்தது? திம்பு மாநாட்டில் போராளிகள் ஒற்றுமையாக இருந்து முன்வைத்த கோரிக்கையின் விளைவாக ஆத்திரமடைந்த  "ரா'' உளவுத்துறை இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலைகளை மேற்கொண்டது என்பதை யும் அதன் விளைவாகப் போராளி களுக்கிடையே மோதல் எப்படித் தூண்டிவிடப்பட்டது என்பதையும் ஆதாரப்பூர்வமாக கூறியிருந்தேன். இந்திய அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் "ரா'' உளவுத்துறை குறித்து எழுப்பிய குற்றச் சாட்டினையும் "ரா'' உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் வெளியிட்ட உண்மை களையும் எடுத்துக்காட்டியிருந்தேன். தமிழக சட்டமன்றத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி "ரா'' உளவுத்துறைதான் போராளிக் குழுக் களைப்  பிளவுப்படுத்தியது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதையும் சுட்டியிருந்தேன். மேற்கண்ட ஆதாரப் பூர்வமான தகவல்கள் எதற்கும் அவர் எவ்விதப் பதிலையும் கூறவில்லை. என்மீது வசைமாரி பொழிவதில் ஈடுபட்டிருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யான தும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே தந்துள்ளார். இலங்கையில் போர் மும்முரமாக நடந்தபோது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசை நடத்தும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கி யத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய மற்றொரு குற்றச் சாட்டாகும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் "மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இது போன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார ரம்புகளைப் 
பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் தான் உணர முடியும்'' என்று கூறியுள்ளார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு அதிலும் மத்தியில் ஆளுங் கட்சி எதுவோ அதனுடன் எப்போதும் இணைந்து செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங் களில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்ச ராக இருந்த ஜோதிபாசு வங்கதேசத்து டன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பராக்கா அணைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார். ஆனால் மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர் உடன்பாடு செய்ய முடியாது. எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை. இதற்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க தேசத்துடன் உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு. ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அப் படித்தான் இந்திய அரசு செயல்பட வேண்டும் என வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ கருணாநிதிக்கு இல்லாமல் போனது. மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் எனது நிலைப் பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னவர் கருணாநிதி.
போர் நிறுத்தம் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பிரதமரையும், பிரணாப் முகர்ஜியையும் தான் வலியுறுத்தியிருப்ப தாக கருணாநிதி கூறினார். ஆனால் 18-2-2009 அன்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை அளித்தார். "அந்த அறிக்கையில் போர் நிறுத்தம் செய்யும் படி இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த முடியாது. ஆனால் இலங்கை அரசு அறிவித்திருக்கிற பாதுகாப்பு வளையங் களுக்கு மக்கள் செல்வார்களானால் அவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு கிடைக்கும்'' என்று கூறினார்.
ஆனால் சிங்கள அரசின் வாக்குறுதியை நம்பி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு அவர்கள் படு கொலை செய்யப்பட்டனர். மருத்துவ மனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டு அழிக்கப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு நாட்டைவிட்டு வெளியேற்றி யுள்ளது. மேற்கண்டவை குறித்தெல்லாம் பிரணாப் முகர்ஜியின் அறிக்கையில் சிறு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. பிரணாப் முகர்ஜியின் அறிக்கையின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அறிவிக்கும் துணிவை இராசபக்சே பெற்றார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு போர் நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக கருணாநிதி பொய்யான தகவல்களைத் திரும்பத் திரும்பக் கூறினார். 
இலங்கையில் போரை நிறுத்தப் போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இது வரை எந்தத் தலைவரும் கூறாத ஒரு பதிலை கருணாநிதி கூறியிருக்கிறார். "என் மீது புகார் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை. நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள். சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை'' எனக் கொந்தளிக்கிறார். கோபத்தில் அவர் நிதானம் இழந்திருப் பது நன்கு தெரிகிறது. "ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' என்ற பழ மொழிதான் நினைவிற்கு வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்காக தங்களது இன்னுயிர்களை அர்ப்பணித்து தீயில் கருகி மாண்ட முத்துக்குமார் உட்பட 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் உன் னதமான உயிர்த்தியாகம் செய்தபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதில் முனைந்தார். குடும்பப் பிரச்சினையின் காரணமாகவும் வேறு சொந்தப் பிரச்சினையின் காரணமாகவும் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார் கள் என இவரின் கீழ் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிட்டார்கள். முதலமைச்சராக இருந்த இவர் அவற்றை ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே எனக் கேட்கிறார். மனிதநேயம் உள்ள யாரும் இத்தகைய கேள்விகளை ஒருபோதும் எழுப்ப மாட்டார்கள்.
1-7-09 அன்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகள் ஒட்டுமொத்த தமிழர் களையும் அதிர்ச்சியடைய வைத்தன.
"ஈழத் தமிழர்களின் வாழ்வா தாரத்தை பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமே அதைச் செய்ய முடியும். எனவே நம்முடைய பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களரு டைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக்கூடாது'' என தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கக் கூடியவர் கூறினார். அதுமட்டுமல்ல, "தமிழீழ'' தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சமஉரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்'' என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
உலகத்தின் பலநாடுகள் இராச பக்சே அரசின் மனித உரிமை மீறல் களை மிகக்கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் இராசபக்சேக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத்தமிழர் போராட் டம் குறித்து ஒரு தவறான கண்ணோட் டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றிபெறப் போவதில்லை.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க் கால் பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது 13-8-2009இல் இவர் என்ன கூறினார். "இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்டுவிட்ட பிறகும்கூட அந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்'' எனக் கூறினார். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதினாரா? அல்லது மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் முள்வேலி முகாம்களுக்குள் முடக் கப்பட்டு போதுமான உணவு மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக்கொண்டிருந்தார்களே அதை சுமூக நிலை என்று கருதினாரா? தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்று வதை சுமூக நிலை என்று கருதினாரா? எது சுமூக நிலை? இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒருவார்த்தை இதுவரைல்லாதவர்; 

இப்போது அங்கு சுமூக நிலை என்று கூறுவதன் மூலம் இராச பக்சே நடத்திவரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை நின்றார். ஆனால் இப்போது டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர் நிலை மிக இரங்கத்தக்க நிலையில் இருப்பதாகப் பேசி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
"காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது பழமொழி. இலங்கையில் போர் நடைபெற்றபோது நான் எதுவும் செய்யவில்லையா? இதோ பட்டியல்'' என்று கூறி அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலி, சட்டமன்றத்தில் தீர்மானம், தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம், பேரணி, முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் என ஒரு நீண்ட பட்டியலையே அளித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியதை மாநிலத்தில் ஆளுங் கட்சியாகவும், மத்தியில் ஆளுகின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சி யாகவும் இருக்கிற ஒரு கட்சி செய்வது சாதனையா என்ன? எதிர்க்கட்சிகளுக்கு வீதியிலே இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுங்கட்சியி னரும் அதே வேலையைச் செய்வது கேலிக் கூத்தாகும். மத்திய அமைச்சர வையில் இவர் மகன் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். 

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமைச்சரவையில் இவர்கள் போராடியிருந்திருக்க வேண்டும்.  அங்கு அதை செய்யாமல் முச்சந்தியில் நின்று முழங்குவது பிரச்சினையைத் தட்டிக் கழிப்பதாகும். மக்களை ஏமாற்றுவதாகும். அது மட்டுமல்ல, "மாநில அரசின் பொறுப்பில் இருந்து தி.மு.க. ஏன் விலக வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். 

நாங்கள் அப்போது பதவி விலகியிருந்தால் இலங்கை அரசு போரை நிறுத்தி யிருக்குமா?'' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவரது நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறேன். பதவி மீதுள்ள அவரது அடங்காத ஆசை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் ஒரு இனம்  திட்டமிட்டு அழிக்கப்படும்போதுகூட பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாதமிடும் ஒருவரை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது. பதவி விலகினாலும் எதுவும் நடக்காது எனக்கூறி உலகை ஏமாற்ற முற்படும் அவருக்கு ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறேன். ஒன்றுபட்ட பம்பாய் மாகாணத்தை மொழிவழியாக மராட்டியம், குசராத் என பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. பம்பாய் நகரத் தின் மீது இரு தரப்பும் உரிமை கொண்டாடியதால் இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவான தலைநகரமாக பம்பாய் இருக்கட்டும் என பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்த அறிவிப்பைக் கண்டு மராட்டிய மக்கள் கொதித்தெழுந்தார்கள். பெரும் போராட் டம் மூண்டது. அப்போது இராணுவத்தை ஏவி அந்தப் போராட்டத்தை ஒடுக்கு வதற்கு முயற்சி நடைபெற்றது. இராணுவ துப்பாக்கிச் சூட்டில் 300க்கு மேற்பட்ட மராட்டியர்கள் இறந்து போனார்கள். இந்த பதட்டமான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சராக இருந்த சிந்தாமணி தேஷ்முக் பிறப்பால் மராட்டியர். எனவே அவரது மனச்சாட்சி அவரை உறுத்தி யது. அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த அவரை நேரு நிதியமைச்ச ராக்கினார். நேருவின் மதிப்பையும் அன்பையும் ஒருங்கே பெற்றவராக இருந்தபோதிலும்கூட தனது மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு வேதனையடைந்தார். "மராட்டிய மக்களுக்கு பம்பாய் நகரம் சொந்த மானது. அதற்காகப் போராடும் எனது மக்களைக் கொன்று குவிப்பதைக் கண்டிக்கும் வகையில் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகுகிறேன்'' எனக் கடிதம் எழுதக்கூடிய துணிவு அவருக்கு இருந்தது. நேரு தமது வாழ்நாளில் என்றும் அடையாத அதிர்ச்சியை அடைந்தார். தேஷ்முக்கின் பதவி விலகல் அவரைச் சிந்திக்க வைத்தது. 

இதன் விளைவாக பம்பாய் மராட்டியர்களுக்கே சொந்தம் என நேருவை அறிவிக்க வைத்தது. தேஷ்முக் என்ற தனியொரு மனிதன் தனது பதவியைத் தியாகம் செய்ய முன்வந்ததன் மூலம் மராட்டிய மக்களுக்கு பம்பாய் நகரம் கிடைத்தது. இது வரலாறு. 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தேஷ்முக்கின் தியாக வரலாறு  தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் பதவிமீது அவர் கொண்ட வெறி அவர் கண்களைக் கட்டிப்போட்டுவிட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க. வின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பித்தான் மன்மோகன் சிங் அரசு  பதவியில் நீடித்தது. தி.மு.க.வின் அமைச் சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர் நிறுத்தத்திற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டால் அந்த அரசுக்கு அளிக்கிற ஆதரவைத் திரும்பப் பெறு வோம் எனக்கூறி இருந்தாலே போதும்;  இந்திய அரசுக்கு வேறு வழி இருந் திருக்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்ய கருணாநிதி துணியவில்லை.
டெசோ மாநாட்டிற்கு காவல் துறை தடை விதித்ததை யும் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றதையும் பெரும் சாதனையாகவும், அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எடுத்துக்காட்டாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது தவறு என நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அந்த சனநாயக விரோத நடவடிக்கையை நான் ஆதரிக் கவில்லை. ஆனால் அதைக்கூறும் தகுதி கருணாநிதிக்கு இல்லை. ஏன் என்றால் நாங்கள் நடத்த இருந்த 8க்கும் மேற் பட்ட தமிழீழ ஆதரவு மாநாடுகளுக்குத் தடைவிதித்தவர் கருணாநிதியே. உயர் நீதிமன்றத்தில் நீதியை நிலைநிறுத்தி அதற்குப் பிறகுதான் அந்த மாநாடுகளை நடத்தினோம்.
1985இல் நான் இலங்கைக்கு ரகசிய சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் இவருக்கு எழுதிய கடிதத்தில்  போராடும் விடுதலைப் போராளி களுக்கும் மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தை தவிர வேறு உற்ற துணைவன் இல்லை. அதை மேலும் வளர்க்க வேண்டியது நம்முடைய கடமையாகும் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இவர் என்ன செய்தார். எனக்கும் வீரமணி அவர்களுக்கும் தெரியாமல் டெசோ இயக்கம் இனி செயல்படாது என அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். அப்போது ஏன் அவ்வாறு செய்தார்? இப்போது ஏன் மீண்டும் டெசோவைத் தூக்கிப் பிடிக்கிறார்? என்பதற்குரிய விளக்கத்தை இதுவரை  கூறவில்லை.
அது மட்டுமல்ல உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடியபோது அவர்கள் மீது அதிரடி காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்க வைத்தவர் கருணாநிதி. தமிழகமெங்கும் மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் போராடியபோது அனைத்துக் கல்லூரி களையும் மூடியவர் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகப் பேசுப வர்கள், எழுதுபவர்கள், செயல்படுப வர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்துக் கைது செய்தார். பல தோழர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போடப்படும் கூட்டங் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது என மண்டப உரிமையாளர்களை காவல்துறை மிரட்டியது. சுவரொட்டிகள், துண்ட றிக்கைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாது என அச்சகங்கள் பயமுறுத் தப்பட்டன. மொத்தத்தில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நிலவியது.
23-4-2009இல் ஒரு நாள் முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் செய்த தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 4-2-2009 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வேலை நிறுத்தமும் முழுஅடைப்பும் நடத்த நாங்கள் முற்பட்டபோது தலைமைச் செயலாளரை விட்டு அது சட்ட விரோதம் என அறிவிக்கச் செய்தார். அது மட்டுமல்ல இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவ தாக எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வைத்தார். அவரின் இந்த கெடுபிடியெல்லாம் மீறித்தான் நாங்கள் அந்தப் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி னோம். எதைச் சட்டவிரோதம் எனக் கூறினாரோ அதே பந்த் போராட்டத்தை இவரும் நடத்த நேர்ந்தது.
ஈழத்தில் போர் உச்சக்கட்டமாக நடந்துகொண்டிருந்த போது 27-4-09 அன்று ஒரு நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார். அண்ணா நினைவிடத் தில் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டுமென்பதற்காகவே இந்தப் போராட்டம் என்று கூறினார். ஆனால், அன்று பகல் 11 மணியள விலேயே மத்திய நிதியமைச்சராக அப்போது இருந்த ப. சிதம்பரம் இலங்கை யில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக தமக்கு செய்தி அனுப்பியிருப்பதாகக் கூறி உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.
ஆனால் 30-8-12 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 27-4-09 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை யில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டன. கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கி டும் ஆயுதங்கள் போன்றவற்றை இலங்கை பாதுகாப்புப் படை பயன் படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறி வித்த பிறகும் அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்குத்தான் இப்போது களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.
பிரணாப்பை நம்பிதான் நான் உண்ணாவிரதத்தை நிறுத்தினேன் என இப்போது புலம்புகிற அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் போட்டி யிட்டபோது வரிந்துகட்டிக்கொண்டு முதல் ஆளாக அவரை ஆதரித்து களத்தில் இறங்கியது ஏன்? இந்த கேள்விக்காவது அவர் பதில் கூறவேண்டும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதத்தை முடித்து வைப்ப தற்கு மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய செய்திதான் காரணம் என்று அப்போது கூறினார். ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பிரணாப் முகர்ஜியை நம்பித்தான் உண்ணாவிரதத்தை நிறுத்தினேன் என்று புலம்புகிறார். எது உண்மை? இவருக்கு வாக்குறுதி அளித்தது சிதம்பரமா? பிரணாப் முகர்ஜியா? என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. அவற் றுக்கு இதுவரை எந்தப் பதிலையும் அவர் கூறவில்லை.
2009ஆம் ஆண்டு போர் நெருக் கடியான காலக் கட்டத்தில் போர் நிறுத்தம் குறித்துப் பொய்யான வாக்கு றுதிகளையும்  செய்திகளையும் கூறி தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றி னார் என்பது பின்னர் அம்பலமாகி விட்டது. இப்போதும் அதைப்போல முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடையே கூறி வருகிறார். அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பவர்கள்மீது பாய்கிறார். வசைமாரி பொழிகிறார். பொது வாழ்க்கைக்குப் பொன்விழா கொண் டாடிய மூத்த தலைவர் ஒருவர் தன்னிலை பிறழ்ந்து ஆத்திர வயப்பட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவது அவரின் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அவருடைய தொண்டர்கள் அவருக்கு முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தை சூட்டியிருக் கிறார்கள். ஆனால் உண்மையில் வசைத் தமிழ் வல்லவர் என்ற பட்டம் அவருக்கு மிகமிக பொருத்தமானதாகும்.

அன்பிற்கினிய தமிழக முதல்வர் அவர்களுக்கு... ஒரு திறந்த மடல்


அன்பிற்கினிய தமிழக முதல்வர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.
உங்களுக்கு மீண்டும் ஒரு திறந்த மடல் தீட்டவேண்டிய கட்டாயம் கனிந்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், உங்கள் வெற்றி வாய்ப்புக்கான வியூகம் வகுப்பதில், நீங்கள் ஆழ்ந்திருக்கக்கூடும். தேசிய அரசியலில் நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வர வேண்டும் என்று விரும்புவதில் தவறு இல்லை. மம்தாவுக்கும்

மாயாவதிக்கும் தலைநகர் தில்லியில் கிடைக்கும் முக்கியத்துவம் உங்களைவிட அவர்கள் அறிவார்ந்தவர்கள், ஆற்றல்மிக்கவர்கள் என்பதற்காக இல்லை. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் கைகளில் இருக்கிறார்கள் என்பதால்தான் அவர்கள் மீட்டும் ராகத்துக்கேற்ப மன்மோகன் அரசு நாட்டியமாடுகிறது.

தமிழக மீனவர் பிரச்னை குறித்து வாரம் ஒரு கடிதம் நீங்கள் வரைந்தாலும், ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வை அடைவதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ராஜபக்ஷே அரசைப் போர்க் குற்றவாளியாக உலக நாடுகள் நீதிமன்றத்தில் நிறுத்தவும் இந்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று ஏகமனதாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், 'தானே’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கேட்டுக் கோரிக்கை எழுப்பினாலும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தாலும், சோனியா காந்தியின் சொற்படி நடக்கும் மத்திய அரசு உங்கள் பக்கம் பார்வையைத் திருப்பத் தயாராக இல்லை.

ஜார்ஜ் பெர்ணான்டஸும், ஜஸ்வந்த் சிங்கும் கூப்பிட்ட குரலுக்குப் போயஸ் தோட்டத்தைத் தேடி வந்ததும்... பிரணாப் முகர்ஜியும் சிதம்பரமும் கருணாநிதி விரும்பிய போதெல்லாம் கோபாலபுரம் நோக்கி ஓடி வந்ததும் உங்கள் இருவர் மீதும்கொண்ட உயர்ந்த மதிப்பீடுகளால் அன்று. அவர்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள உங்கள் ஆதரவு தேவை. அவ்வளவுதான். உங்கள் மதிப்பு கூடுவதும் குறைவதும் உங்களிடம் இருக்கும் எம்.பி-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இங்கு எண்ணிக்கையே ஜனநாயக தர்மம் என்பதை நீங்கள் அறியாதவர் இல்லை. இன்று நாடாளுமன்றத்தில் 9 பேரை வைத்திருக்கும் நீங்கள், வரவிருக்கும் தேர்தலில் 30 இடங்களையாவது கைப்பற்றினால்தான் மத்திய அரசில் உங்கள் மதிப்பு உயரும். அதற்கான வாய்ப்பை உங்கள் ஆட்சி நிர்வாகத்தின் மூலமும், அரசியல் நடவடிக்கைகள் மூலமும் உருவாக்கி வைத்திருக்கிறீர்களா என்று கொஞ்சம் ஆத்ம சோதனையில் ஆழமாக ஈடுபடுங்கள்.

மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த இடம் பெரிது. அடித்தட்டு மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அளப்பரியது. அந்த எம்.ஜி.ஆரே, 1984 சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சம் 132 இடங்களைத்தான் பெற முடிந்தது. ஆனால், உங்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. 1991 தேர்தலில் 163 இடங்களில் வெற்றிக் கனியைப் பறித்துப் புதிய வரலாறு படைத்தது. உங்கள் கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றிக் கருணாநிதியைக் கலங்கடித்தது. அதற்குக் காரணம், ராஜீவ்காந்தியின் ரத்தம் இந்த மண்ணில் சிந்தியதுதான் என்பதை உங்களால் மறுக்க முடியாது. சென்ற சரித்திரம் மீண்டும் திரும்பியது. உங்கள் கூட்டணி 2011 தேர்தலில் 203 இடங்களைப் பெற்றது. இரட்டை இலை 150 தொகுதிகளில் வெற்றித் தோரணம் கட்டியது. ஆண்ட தி.மு.க. அடியோடு தடம் புரண்டு, மாண்டு மண்ணில் சாய்ந்து விட்டதோ என்று அனைவரும் வியந்தனர். இந்த மாற்றத்துக்கும் நீங்கள் காரணம் இல்லை. தி.மு.கழகம் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டது என்பதுதான் உண்மை.

கருணாநிதியின் குடும்ப அரசியலையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய குட்டித் தம்பிரான்கள் அடித்த கூட்டுக் கொள்ளையையும் சகிக்க முடியாத மக்களின் கோபம்தான் உங்கள் கூட்டணிக்கு ஆதரவான காற்றாக அலை வீசியது. சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களை நீங்கள் பெற்ற அதிசயம் அரங்கேறியதற்கு மக்களின் மாளாத சினம்தான் முழு முதற்காரணம். கருணாநிதி மீதிருந்த எதிர்ப்பும், அவரது கழகத்தின் மேல் படிந்த வெறுப்பும்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தின. ஆனால், கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்துவிட்ட தவறுகளில் இருந்து நீங்கள் முழுமையாகப் பாடம் பெறவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

மூன்றாவது முறை நீங்கள் முதல்வரான பிறகு, ஈழத் தமிழர் விவகாரத்தில் மிகச்சரியான அணுகு முறையை மேற்கொண்டதில் உலகத் தமிழர் அனை வரும் உள்ளம் மகிழ்ந்தனர். முல்லை பெரியாறு பிரச்னையில் நீங்கள் காட்டிய கண்டிப்பும், சட்ட பூர்வமாக மேற்கொண்ட முயற்சிகளும் உங்கள் அரசியல் ஆளுமையை அற்புதமாக வெளிப்படுத்தின. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தாரை வார்த்த கச்சத்தீவை மீண்டும் தமிழர் பெறுவதற்கு உச்ச நீதி மன்றத்தை நாடி நிற்கும் உங்கள் நடைமுறை உத்தி விவேகம் நிரம்பியது. எப்போது ஆட்சி நாற்காலியில் அமர்ந்தாலும் காவிரி நீரைப் பெறுவதில் நீங்கள் காட்டும் தீவிரம் பாராட்டுக்கு உரியது. மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளும் உங்கள் போர்க்குணம் புகழத்தக்கது. ஆனால், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இவை மட்டும் போதுமா? யோசியுங்கள்.

ஏறிய விலைவாசி இன்று வரை இறங்கவே இல்லை. விண்ணைத் தொட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் முழுப்பொறுப்பு என்றால், கடந்த ஆட்சியில் நீங்கள் கருணாநிதியைக் குறை கூறியிருக்கக் கூடாது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங் களில் மின்பற்றாக்குறை முற்றாகத் தீர்ந்துவிடும் என்றீர்கள். ஆனால், மின்தடையின் கடுமை கொஞ்சமும் குறையவில்லை. காற்றாலைகளும் உங்களைக் கைவிடும்போது நிலைமை மிகவும் கவலைக்குரியதாகி விடும். இதை நீங்கள் பூரணமாகப் புரிந்துவைத்திருப்பதனால்தான் கூடங்குளம். அணுமின் நிலையம் குறித்து உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டீர்கள். ஆனால், எதிர்ப்பாளர்களைக் களத்தில் நேரில் சந்தித்து, அவர்களுடைய அச்ச உணர்வைப் போக்க நீங்கள் ஏன் முயலவில்லை? அவர்களும் உங்களுக்கு அதீத நம்பிக்கையுடன் வாக்களித்தவர்கள்தானே! வன்முறையின் உச்சத்தில் மனித ரத்தம் ஆறாக ஓடிய நவகாளியில் செருப்பும் அணியாமல் முள் நிறைந்த பாதைகளில் தடி ஊன்றி ஒற்றை மனிதராய் தனித்து நடந்து மத நெருப்பைத் தணிவித்த மகாத்மா வலம் வந்த பொதுவாழ்வில் ஒரு முதலமைச்சர் மக்களைச் சந்திக்கத் தயங்குவது எந்த வகையில் சரியானது?

உங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படும் என்ற தோற்றமும் இன்று பொய்த்துப் போனது. முதல்வரானதும் நீங்கள் அளித்த முதல் நேர்காணலில் 'கொள்ளையர் அனைவரும் ஆந்திராவின் பக்கம் அடைக்கலமாகி விட்டனர்’ என்று, சிரித்தபடி சொன்னீர்கள். ஆனால், கொலையும் களவும் மாநிலம் முழுவதும் இன்று பரவிவிட்டதைப் பார்த்தால், ஓடிப் போனவர்கள். தங்கள் கூட்டாளிகளுடன் மீண்டும் திரும்பி விட் டார்களோ என்று திகைப்பு எழுகிறது.

மாண்புமிகு முதல்வரே... நீங்கள் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் பரமக்குடியிலும் கூடங்குளத்திலும் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடந்து மொத்தம் ஏழு மனித உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன. பூவைப் பறிப்பதற்குக் கோடரி தூக்குபவரை நல்ல தோட்டக்காரர் என்று எப்படிச் சொல்ல முடியும்? பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தலித் வாக்காளர்களின் ஆதரவைக் கேள்விக்குறியாக்கி விட்டது. கூடங்குளம் துப்பாக்கிச் சூடு, மீனவர்கள் மன உணர்வைக் காயப்படுத்தி விட்டது.

பொதுப்பணித் துறையில் இருந்து கல்வித் துறை வரை ஊழல் அரக்கனின் நீள்கரங்கள் ஆக்கிரமித்து இருப்பதை நீங்கள் அறியவில்லையா?

விலைவாசி குறையவில்லை; மின்தடை நீங்கவில்லை; சட்டம் - ஒழுங்கு நிறைவைத் தர வில்லை; ஊழலற்ற நிர்வாகம் நடக்கவில்லை; விமர்சனங்களை வரவேற்கும் ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை. இந்த மோசமான சூழலிலும் தி.மு.கழகம் உயிர்த்தெழுவதைப் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை. விரும்பி வாக்களிப்பது என்ற நிலையில் இருந்து விடுபட்டு, வேறு வழி இல்லாமல் வாக்களிப்பது என்ற நிலையில் மக்களை நீங்கள் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறீர்கள். இந்த இடத்தில்தான் உங்கள் நடவடிக்கைகளை நீங்கள் தவறாமல் மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

மாயாவதியிடம் 21 எம்.பி-க்கள், மம்தாவிடம் 19 எம்.பி-க்கள், முலாயம் சிங் யாதவிடம் 23 எம்.பி-க்கள், கருணாநிதியிடம் 18 எம்.பி-க்கள் இருப்பதால் தான், அவர்கள் தயவை மன்மோகன் அரசு நாடுகிறது. நீங்களோ ஒற்றை வரிசையில் 9 பேரை வைத்திருக்கிறீர்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களில் கையாண்ட செயல்முறைகள் செல்லுபடியாகாது. தேசிய அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் நினைத்தபடி காய்களை நகர்த்த விரும்பினால், பெரும்பான்மை மக்கள் ஆதரவை நீங்கள் பெற்றாக வேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய மந்திரக்கோல்தான் மதுவிலக்கு அறிவிப்பு.

உங்களுக்குப் பிடித்த மனிதர் மோடியின் குஜராத்தைப் போல் தமிழகத்தை மதுவிலக்கு மாநில மாக நீங்கள் மாற்ற வேண்டும்.

மக்கள் நலனில் நாட்டம் உள்ள எந்த அரசும் மதுவை விற்க முன்வராது. எம்.ஜி.ஆர். டாஸ்மாக்கின் கதவுகளைத் திறந்தபோது அரசின் வருவாய் 183 கோடி ரூபாய். இன்று உங்கள் ஆட்சியில் 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. மதுவின் மீது விதிக்கப்படும் விற்பனை வரி, கலால் வரி மூலம் அரசுக்கு வரும் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடி என்றால், டாஸ்மாக் விற்பனை எத்தனை ஆயிரம் கோடி இருக்கும் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். சாராயத்தில் ஈட்டுவது பாவத்தின் சம்பளம் அல்லவா! குடிக்கத் தூண்டுவது அரசு; குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரைத் தண்டிப்பதும் அதே அரசு என்றால், எவ்வளவு போலித்தனம் முதல்வரே!

இன்று 13 வயது பையன் குடிக்கிறான். கல்லூரி மாணவன் கைகளில் மதுக் கோப்பையுடன் காட்சி தருகிறான். ஏழையும் பாழையும் சாராயம் குடித்துச் சாக்கடையோரம் சரிந்து கிடக்கிறார்கள். எந்த வீட் டிலும் நிம்மதி இல்லை. வாகன விபத்துகள் அதிகரிக்க எது காரணம்? குடும்ப உறவுகள் குலைந்துபோவது எதனால்? விவாகரத்துகள் கூடிவிட்டதற்கு அடிப்படை எது? கூலித் தொழிலாளர்கள் குடல் வெந்து கிடப்பது எந்தக் கொடுமையால்? ஏழ்மை நிரந்தரமாக ஒவ்வொரு வீட்டிலும் பாய் போட்டுப் படுத்துக் கிடப்பது எதனுடைய தயவால்? இவை எல்லாவற்றுக்கும் காரணம் மது அல்லவா? தாய்மை உணர்வோடு இந்த இழிவைச் சந்தியுங்கள்!

அன்பு கூர்ந்து மதுக்கடைகளை மூடுங்கள். அரசு வருவாய்க்கு மாற்று வழி தேடுங்கள். வரி சீர்த்திருத்தத்தில் கவனம் செலுத்துங்கள். அரசு 300 ரூபாய்க்கு அளிக்கும் ஒரு யூனிட் மணல், கடைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மதுவை விற்பதை விட மணலை நேரடியாக விற்பனை செய்யுங்கள். கிரானைட் கொள்ளைக்காரர்களிடம் கையூட்டு பெற்றுக் களியாட்டம் போட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். இயற்கை அன்னையின் மடி சுரண்டும் மனிதர்களிடம் கருணை காட்டாது கைவிலங்கு பூட்டுங்கள். மது வருவாய் இல்லாத குஜராத் மாநிலத்தில் மோடி உபரி பட்ஜெட் போட முடியும் என்றால், உங்களால் மட்டும் ஏன் முடியாது?

கருணாநிதி கட்டி முடித்த அண்ணா நூலகத்தை இழுத்து மூடினால் அது 'காழ்ப்பு அரசியல்’ என்று விமர்சிக்கப்படும். மதுவின் நிறமும் மணமும் அறியாத ஒரு தலைமுறையின் உயர்நிலைப் பண்பாட்டை மதுக் கடைகளைத் திறந்ததன் மூலம் பாழ்படுத்தியவர் கருணாநிதி. அவர் திறந்துவைத்த மதுக்கடைகளை நீங்கள் மூட முடிவெடுத்தால் தமிழின வரலாற்றில் உங்கள் நடவடிக்கை பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும். லாட்டரி சீட்டுக்குத் தடைவிதித்த நீங்கள் மதுக்கடைகளையும் தயக்கமின்றி மூடத் துணியுங்கள். தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். ஆண்கள் வாக்குகள் கட்சி சார்ந்து பிரியக்கூடியவை. பெண்கள் ஒரே உணர்வுடன் வாக்களிக்கும் வழக்கம் உள்ளவர்கள். மதுக் கடைகளை மூடினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு தேவதைக்கு வாக்களிக்கும் மகிழ்ச் சியுடன் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.

அன்பிற்கினிய முதல்வரே... உங்கள் ஆட்சியில் சில நிறைகளும் உண்டு; பல குறைகளும் உண்டு. லண்டன் மாநகரைப் பற்றிப் பாடும் போது‘with all they faults still I love thee’ என்றான் பைரன். மதுக் கடைகளை நீங்கள் மகாத்மா பிறந்த நாளிலோ, பின்னரோ விரைந்து மூட முடிவெடுத்தால், தமிழகத்துப் பெண் மக்கள் அனைவரும் பைரனைப் போல் உங்கள் ஆட்சியை ஆயிரம் குறைகளையும் மீறி நேசிக்கத் தொடங்கி விடுவார்கள். நீங்களும் சூளுரைத்தபடி தகுதிமிக்க தமிழுலகின் இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை எளிதில் பெற்றுத் தரும் அளவுக்குத் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவீர்கள். இந்த எளியவனின் அரிய ஆலோசனைக்கு உரிய மதிப்பளித்தால், உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது. எவரிடத்தும் எனக்கொன்றும் ஆகப்போவது எதுவும் இல்லை; ஆக வேண்டிய அவசியமும் இல்லை. உள்ளதைச் சொல்கிறேன். இந்த மண்ணின் நலனுக்காக உண்மையைச் சொல்கிறேன்.

என்றும் நிறம் மாறாத நிஜமான அன்புடன்

தமிழருவி மணியன்

மகிந்தவின் இந்தியப் பயணம் ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அவமானம்: - அனலை நிதிஸ் ச. குமாரன்


ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு நாடுகள் சிறிலங்காவின் அரச தலைவர்கள் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுவரும் இவ்வேளையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இந்திய நாட்டுக்குள் வரவேற்றுள்ளது ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நிகழ்காலத்தில் நடக்கும் அறியாமைகள் எதிர்காலங்களில் பல்வேறு எதிர்வினைகளை உண்டுபண்ணுவதுடன், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்திவிடும். இதுவே வரலாறாகி பல நூறு ஆண்டுகள் நிலைத்துவிட வழிகோலப்படும். நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் தக்க தருணத்தில் தேவையான காய்நகர்த்தல்களை இந்திய அரசு செய்திருந்தால் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பற்றியிருக்கலாம்.
கலைஞர் தனக்கு வந்த பாணியிலேயே பேசியும் வந்தார். நிபந்தனைகளை விதித்து காலைவாரி விடும் பரம்பரையில் தான் வந்தவர் இல்லை என்று அடிக்கடி கூறி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவினை வழங்கியே வருகிறார். மிரட்டிப் பார்ப்பதும், பின்னர் கைவிடுவதும் கைவந்த கலையாகி விட்டது கலைஞருக்கு.
ஈழத் தமிழர்கள் மீது ஏதோ தானேதான் அதீத கரிசனை கொண்டுள்ளவர் போன்று பல அறிக்கைகளை தொடர்ந்தும் சமீப மாதங்களில் விட்டுக்கொண்டு வரும் கலைஞர், இந்திய மத்திய அரசு செய்யும் காரியங்களை எள்ளளவேனும் நிறுத்த வழி செய்யும் வலிமை இருந்தும்கூட வாய்ப்பேச்சில் வீரரடி என்கிற பாணியிலையே செயற்படுகிறார்.
சிங்கள இரானுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று போராடும் அனைத்துத் தமிழக அரசியல் மற்றும் பொது அமைப்புகளின் உணர்வுகளையும் மீறி இந்திய நடுவண் அரசு 400-க்கும் அதிகமான சிங்களப் படையினருக்குப் பயிற்;சி அளிப்பதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரே இந்தியப் பாராளுமன்றத்தில் கூறுகிறார். தமிழகத்துக்கு விளையாட வந்த விளையாட்டு வீரர்களையே தமிழகத்தை விட்டு அனுப்பினார் தமிழக முதல்வர். இப்படியான கொந்தளிப்பு நிலையே காணப்படும் இன்றைய நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழர்கள் என்றால் அனைவருக்குமே ஏளனம்
சில அற்ப காரணங்களுக்காகப் போராட்டங்களைச் செய்து வெற்றிகளை அடைகிறார்கள் பல இந்திய மாநிலத் தலைவர்கள். அப்படியிருக்கையில், தமிழகத்தின் உயிரிலும் மேலான உணர்வுப் பிரச்சினையான தமிழீழத் தமிழர் பிரச்சினையை இந்திய நடுவண் அரசு மதிக்காமல் செயற்படுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் அவமரியாதையே. தமிழர்கள் என்றால் அடிவாங்கி ஓடும் இனம் என்கிற கருத்தையே இந்திய மற்றும் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் வைத்துள்ளன.
யூதர் ஒருவருக்கு அடிபட்டாலோ அல்லது சீனத்தவருக்கு மற்ற இனத்தவர் அடித்தாலோ ஒட்டுமொத்த யூதரோ அல்லது சீனரோ துணைக்கு வந்துவிடுவார்கள். இதன் காரணமாக இன்று யாரும் யூதரையோ அல்லது சீனரையோ தொட அஞ்சுகிறார்கள். இதைப் போன்று பல நூறு சம்பவங்களை உலகம் பூராவும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் வாழும் பல்வேறு இன மக்களும் தங்கள் தேசிய அடையாளங்களுடன் ஒற்றுமையாக இணைந்து வரும் இக்காலத்தில் இந்திய நடுவண் அரசு தமிழர்களை ஒற்றுமைப்பட விடாமல் செயற்படுகிற வேலைகளேயே செய்கிறது.
தன் தேசத்தில் வாழும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயற்படும் இந்திய நடுவண் அரசை ஆதரித்து இந்திய இறையாண்மைக்குள்ளேயே தாமும் வாழுவதாகத் தமிழக மக்கள் தொடர்ந்தும் கூறுவேர்களேயானால் தமிழினம் என்றுமே சோரம் போகும் இனம் என்ற கணிப்பில் இந்திய நடுவண் அரசென்றாலும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலத்தவரானாலும் தமிழகத்தேயே மதிக்காமல் போகும் காலம் வெகு தொலைவிலில்லை.
தமிழீழ மக்களைக் காப்பாற்றும்படி கூறி மானமுள்ள பலர் தீக்குளித்துச் செத்தார்கள். செத்தாவது தமது இனத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று மாண்டுபோனவர்களின் கனவுகளை இந்திய நடுவண் அரசு ஒரு பொருளாகவே எடுத்துக்கொள்ளவில்லை. செத்தால் என்ன இவர்கள் தமிழர்கள்தானே என்கிற நினைப்பே இந்திய நடுவண் அரசுக்கும், அதன் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இருந்து வருகிறது.
தாமே தமிழினத் தலைவர்கள் என்று கூறிவரும் தலைவர்கள் தமது இனத்தைக் காட்டிகொடுக்காமல் இருந்தாலே போதும் மற்ற இனத்தவர்கள் தமிழினத்தின் மீது மரியாதை வைத்துச் செயற்படுவார்கள். எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் தலைமைகள் இருக்கும் இனத்தை எப்படித்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்கிற கேள்வியே அனைவர் மனங்களிலும் எழுகிறது.
தமிழர்களை அழித்தவர்களுக்கு விருந்தாம்!
அனைத்துத் தமிழகக் கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தது இந்திய அரசு. திட்டமிட்டவாறே 4-நாள் பயணமாக செப்டம்பர் 19-ஆம் தேதியன்று மகிந்த டெல்லி சென்றடைந்தார். இந்தியாவின் தலைவர்களைச் செப்டம்பர் 20-ஆம் தேதியன்று சந்தித்ததுடன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்ததுடன் அவர் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டார் மகிந்த.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச தரத்திலான புத்தமத மற்றும் அறிவுசார் பட்டப்படிப்புக்களை கற்பிக்கவிருக்கும் தர்ம தம்ம பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்க சிறிலங்காவின் ஜனாதிபதி ராஜபக்சாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், இம்மாநிலத்தை ஆளுவது பாரதிய ஜனதா தளம். இம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் அனுமதியின்றி இந்திய நடுவண் அரசு செயற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆக இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் தீங்குகளையே விளைவித்து வருகிறார்கள் என்பது இதிலிருந்து நன்கே தெரிகிறது.
தமிழகத்தில் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியதும், சவுகானின் ஒப்புதல் பெறாமல்;தான் இந்திய நடுவண் அரசு மகிந்தாவை வரவழைத்துள்ளது என்று பா.ஜ.கட்சியினர் கூறி வருகிறார்கள். வை.கோ தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேசம் சென்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேச எல்லையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க, தே.மு.க, நாம் தமிழர் கட்சிஇ தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து, மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், �ராஜபக்சவின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.கவும் அங்கம் வகிக்கிறது.
தி.மு.கவைப் போல மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாட்டைக் கண்டித்து மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார். அதுபோல, ராஜபட்சவின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்தும் சக்தி கருணாநிதிக்கு உள்ளது. ஏனெனில் மத்திய அரசின் அழைப்பின் பேரில்தான் ராஜபக்ச இந்தியா வருகிறார். ராஜபக்ச வருகையைத் தடுத்து நிறுத்த அவர் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர் மத்திய அரசிலிருந்து விலக வேண்டும்" என்றார் ராதாகிருஷ்ணன்.
யார் சொன்னாலென்ன நமது வேலைகள் நமது குடும்ப நலன்களுக்காக நடந்தால் திருப்தியே என்கிற மனநிலையில்;தான் கலைஞர் இன்றும் இருக்கிறார். ஏமாற மக்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கலைஞர் நன்கே மக்களின் தகைமைகளை அறிந்து செயல்படுகிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
தமிழினம் செய்த பாவம் என்னவெனில் தன்னலம் கருதாத சிறந்த தமிழ்த் தலைவர்கள் இப்போது நம்மிடம் இல்லையென்பதே. எதையாவது கூறிவிட்டு இருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாகக் கலைஞர் போன்ற தமிழகத் தலைவர்களினால் செய்யக் கூடிய வேலையை தேவையில்லாமல் பிரச்சாரப்படுத்தி தமிழர்களுக்கு இன்னும் அவப்பெயரை உண்டுபண்ணும் வேலைகளை நிறுத்துவதே தமிழர்களுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும். செப்டம்பர் 17-ஆம் தேதியன்று சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ சாரதி மகிந்தவின் இந்தியப் பயணத்தை எதிர்த்துத் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார். �ஆடி ஓடித் திரிந்தவன் இன்று பிணமாகக் கிடக்கிறானே...ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் சோனியா, மன்மோகன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கதறுகிறார் மரணித்தவரின் தந்தை தங்கவேல்.
�இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொலை செய்த கொலைகாரப் பாவி ராஜபக்ச இந்திய தேசத்துக்குள் கால் வைக்கக் கூடாது" என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு, தான் கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். அதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிப்போய் அணைத்தார்கள். கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
தமிழினத்தையே சம்ஷாரம் செய்து அழித்த சிங்களத்தின் அதிபர் மகிந்தவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஒரு மதத்தின் போதனையை அளிக்கவிருக்கும் நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் செய்ததன் மூலமாக அது இந்தியாவின் வரலாற்றில் மறக்க முடியாத வடுவை உண்டுபண்ணும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தமிழர்களின் சதையை வெட்டி ரசித்த கொலைகாரர்களுக்கும், தமிழ்ப் பெண்களைத் துவம்சம் செய்தவர்களுக்கும், பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரக்கர்களுக்கும் இந்தியாவின் மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசும் அழைத்து மதிப்பளித்துள்ளதானது நிச்சயம் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, புத்தர், காந்தி பிறந்த தேசத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள செயலாகும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

தனிஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது! - அப்துல் கலாமின் ஆலோசகர்!


இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டு வரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனிஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், கூறியுள்ளார்.
இது குறித்து வி.பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
மத்திய பிரதேசம் மாநிலத்தில், புத்தமத பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்பு கொடி காட்டுவதற்கு தமிழகத்தில் இருந்து வைகோ தலைமையில் பலர் சென்று அங்கு கைதாகியுள்ளனர். இதுபோன்ற ஒரு போராட்டம் உலக வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை. இந்த போராட்டத்தினால், இலங்கையில் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை பிற மாநிலத்தவர்கள் உணர்ந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலம் முதல், இலங்கை தமிழர்களின் அகிம்சை வழி மற்றும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வரலாற்றை உயர் அதிகாரிகள் திரித்துக் கூறிவருகின்றனர்.
இதனால், பெரும்பான்மையான வடமாநில தலைவர்கள், ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் இல்லை என்று தவறாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலம் முதல் இலங்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. எனவே இலங்கை அரசின் மனித தன்மையற்ற செயலையும், ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தையும், நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வடமாநில தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இந்த பணியை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், நாட்டின் முக்கிய பொறுப்புக்கு வரவுள்ள அடுத்த தலைவருக்கும், இலங்கை தமிழர்களின் போராட்டத்தை உயர் அதிகாரிகள் திரித்துக் கூறிவிடுவார்கள். இதனால், புதிதாக தலைமை ஏற்கும் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடக்கூடும்.
இலங்கை தமிழர்களின் நியாயமான போராட்டத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய தேசிய தலைவரை காண்பது அரிதாக உள்ளது. எனவே, தமிழக அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, இலங்கையுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வெளிவிவகார கொள்கைகளை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும். ஜனநாயக முறையை அமலுக்கு கொண்டு வர இலங்கைக்கு கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. பொதுத்தேர்தலில், தமிழ் தலைவர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் விதமாக, தமிழர்கள் குடியிருப்பு பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியமர்த்துகின்றனர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு, இலங்கை அரசுதான் முக்கிய காரணம். விடுதலைப்புலிகளை தவிர, உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும், ஒழுக்கம், தியாகம் கொண்ட மூப்படை ராணுவத்தை கொண்டிருக்கவில்லை.
இந்தியாவை தூண்டில் போல் பயன்படுத்திக்கொண்டு, அரசியல், பொருளாதார, ராணுவ உதவிகளை எல்லாம் இலங்கை பெற்று அனுபவிக்கிறது. அதே நேரம், சீனாவின் தீவிர நட்பு நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விஷயத்தில், இந்தியாவின் வெளிவிவகார கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல், மிரட்டல் ஆகியவைகளை எதிர்க்க இந்தியாவுக்கு பலம் இருந்தும், வெளிவிவகார கொள்கையில் தோல்வியடைந்துள்ளதால், அண்டை நாடுகள், இந்தியாவுடன் நல்ல உறவுகளை வைத்துக்கொள்வது இல்லை. இதனால், அந்த நாடுகள் சீனாவை துருப்பு சீட்டாக பயன்படுத்தி, இந்தியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மிகப்பெரிய நாடாக இருந்தும், கேலிக்கூத்தான வெளிவிவகார கொள்கையை வைத்துள்ளதால், இந்தியாவை இலங்கை வஞ்சித்து ஏமாற்றுகிறது.
ஆசிய கண்டத்தில், மிகப்பெரிய சக்தியாக திகழும் இந்தியாவும், சீனாவும் எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் 60 சதவீத பங்களிப்பை கொண்டு இருக்கும். இதனால், இந்தியாவை ஒருபோதும் எதிரி நாடாக சீனா கருதாது. ஆனால், இலங்கையுடன் பொருளாதார உறவுகளை கொண்டுள்ள சீனா எதிர்காலத்தில், ராணுவ தளத்தை இலங்கையில் அமைக்கும்.
எனவே, இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதை நிறுத்தவேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், அது உள்நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரம், இலங்கையில் அரசியல் தீர்வுகாண இந்தியா முயற்சித்தால், அதை ஒருபோதும் சீனா எதிர்க்காது. எனவே இலங்கையில் ஜனநாயகம் மலர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ஆலோசனை நடத்தி, இந்திராகாந்திக்கு பின் இந்திய அரசு மேற்கொண்டு வரும் வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜனநாயக முறையை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும். இது ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு நம்மால் வழங்கக்கூடிய உடனடி தீர்வாகும். இதன்பின்னரும், இந்த ஜனநாயக முறையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை பூமியில் உள்ள எவராலும் தடுக்க முடியாது.
அதே நேரம், தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர் முக்கிய பதவிக்கு வந்து, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை மாற்றி அமைத்துவிட்டால், தனி ஈழம் என்ற கனவு நிறைவேறுவது நெடுந்தொலைவில் இல்லை. இந்த கனவு நிறைவேறினால், தமிழ் ஈழம் நாடு, இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும்.
இந்த தேசத்தின் நல்ல மனிதர்களுடன் என் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக இதையெல்லாம் கூறுகிறேன்.அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்


இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.
“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார்
. ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்...

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?


உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) �டைனமோ�வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.
(இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?
இல்லை. சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன. அதன் மூலம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.
3. கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?
கூடங்குளம் அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.
4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?
கண்டிப்பாகத் தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும். மூன்றாவது - விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணு உலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும். நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.
நான்காவது - சுற்றுப்புற சீர்கேடு. அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.
ஐந்தாவது - பாதுகாப்பு. ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது. தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ தாக்கப்படும் அபாயம் உள்ளது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் இடர்ப்பட நேரிடும்.
5. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?
கண்டிப்பாக இல்லை. முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்) பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.
ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.
எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா.
வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.
நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும். தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.
6. இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறீர்கள். ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது மக்கள் தானே. இப்போது கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?
கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான். இரண்டாவது அணு உலை செயல்படத் துவங்கிய பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும். இதுவரை இந்தியாவின் அணு உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை. அணு உலைகளின் உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான். ஒரு வேளை 1,000 மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 280 மெகாவாட் மட்டுமே. இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு (transmission) 30 விழுக்காடு போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும். அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே. வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.
7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?
அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?
பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்.
9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?
முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?
ஆமாம். நிச்சயமாக.
முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!
11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்!
ஆமாம். அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.
12. எரிமலைப் பாறைகளா?
ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.
மேலும் பூ மியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
பூ மியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.
14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன?
இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம். மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.
இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும். ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.
16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.
இந்தியா நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர் அப்துல்கலாம். அணு உலையைத் திறப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச் சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா? சிங்கள அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர். இலங்கை அரசை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நடிகை அசின் செய்தால் தவறு. அப்துல்கலாம் செய்தால் சரியா?
இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்? இதுதான் அவரது இன உணர்வு, மனித நேயம். அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி நம்புவது?
17. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள். ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
முதலில் இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுனசாகரில் தான் அமைவதாக இருந்தது. ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கர்நாடகாவில் கைக்கா என்ற இடத்தை முடிவு செய்தனர் . இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை. பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத் தள்ளிவிடப்பட்டது.
18. ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களா?
ஆமாம். தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளித்தவாயர்கள். ஆனால் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு பாலாறை, காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப் பெரிய கொடுமை. இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன. சிங்கள சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
19. சரி! இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?
நிறைய உள்ளன. இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது. இதை நாம் சொல்லவில்லை. சப்பானில் புகுசிமா அணு உலை வெடித்தற்குப் பின் இரசிய அதிபர் தம் நாட்டு விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார். அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத் தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம் மிகவும் பலவீனமாக உள்ளது. கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை. இதைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லை.
1989ம் ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும் அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய போதும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஒரு வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல் நாட்டிலிருந்து தான் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும். அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது அணு உலை நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது.
சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர். பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
அதுபோன்று 5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர். அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.
20. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள். இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?
அதுதான் வேதனையான செய்தி. இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை. இதற்காக மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி பி.என். கிர்பால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத் தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் அபராதமும் விதித்தார். இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.
21. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?
விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும்.
மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும். விபத்து ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. மொத்தத்தில் தென்தமிழகம் மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.
கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.
22. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன. விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?
யார் சொன்னது? இரசியாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது. மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது.
மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின. சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை இரசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார். ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது.
சமீபத்தில் சப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
23. ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன?
மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை. எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை. சப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.
செர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.
24. மற்ற நாடுகளை விடுங்கள். இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன. குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?
கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள். அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் .
1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய்.
25. ஒருவேளை விபத்துக்கள் நடந்தால் நம் அரசுகள் நம்மைக் காப்பாற்றாது என்று கூறுகிறீர்களா?
நிச்சயமாக, இந்த அரசுகள் போன 2004 சுனாமியின் போது எப்படி நம்மைப் பாதுகாத்தன என்பதைக் கண் முன்னால் பார்த்தோம். சுனாமி இந்தோனேசியாவைத் தாக்கி 5 மணி நேரம் கழித்தே இந்தியக் கடலைத் தொட்டது. இதை மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் விட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருந்ததுதான் இந்தியாவின் நிலை. இந்தியாவின் பேரிடர் மேலாண்மை உலகறிந்த செய்தி.
இந்திய அரசின் மக்கள் மீதான அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டு போபால் சம்பவம். போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் யூனியன் கார்பைடு (எவெரெடி) நிறவனத்திலிருந்து மீதைல் ஐசோ சயனைடு என்ற விசவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த 5000க்கு மேற்பட்ட மக்கள் உடனடியாக இறந்து போனார்கள். பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 20,000 பேர் இறந்து போனார்கள்.
காங்கிரசு தலைமையிலான அரசு உடனே என்ன செய்தது தெரியுமா, அந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் அண்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி டெல்லி வழியாக அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 26 வருடங்கள் நடத்திய வழக்கில் அண்டர்சன் ஆஜராகவே இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னரும் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை. இதுதான் இந்திய அரசு மக்களைக் காக்கும் லட்சணம். இன்னும் தமிழர்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் இந்தியாவிற்கு கொண்டாட்டமாகிவிடும். கேரள மீனவர்கள் சுடப்பட்டதால் இத்தாலி கப்பல் கேப்டனை கைது செய்பவர்கள், கப்பலை சிறைபிடிப்பவர்கள் இராமேசுவரம் மீனவர்கள் சுடப்படும் பொழுது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.
26. இப்போது சமீபத்தில் விபத்து நட்டஈடு சட்டமெல்லாம் நிறைவேற்றினார்களே! அதில் கூட நியாயம் கிடைக்காதா?
அந்த சட்டமே அவர்களாகப் போட்ட சட்டமில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதற்காக அரசு நிறைவேற்றிய சட்டம். இதன் மூலம் இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு 2500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும் அதிகபட்சமாக 2500 கோடியைக் கொடுத்துவிட்டு அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்ளும். மீதியை நாம்தான் சுமக்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை விசயத்திலோ இன்னும் கொடுமை. விபத்து நடந்தால் அந்த இரசிய நிறுவனம் எந்தப் பொறுப்பும் ஏற்காது. எல்லாம் இந்திய அரசுதான் ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது.
அது சரி! விபத்தே நடக்காது என்றால் நட்ட ஈடு சட்டம் எதற்கு என்பதுதான் விளங்கவில்லை.
27. இப்படியெல்லாம் பயந்தால் வரலாறு படைக்க முடியுமா? நாடு முன்னேறுவது எப்படி?
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. கண்டிப்பாக பெரு விபத்துக்கள் நடக்கும், பேரழிவுகள் ஏற்படும் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வது முட்டாள்தனம்.
நாட்டு முன்னேற்றத்திற்கு மின்சாரம் அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் மின்சாரம் தயாரிக்க பல நல்ல வழிகள் உள்ள போது அணு உலை மூலமாகத்தான் மின்சாரம் தயாரிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு நாட்டு முன்னேற்றம் காரணம் அல்ல.
28. அப்படியானால் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க என்னதான் வழி என்று கேட்கிறார்களே?
அன்னியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கான தடையற்ற மலிவு விலை மின்சாரம், உலக மயம் தோற்றுவிக்கும் நுகர்பொருள் கலாச்சாரம், கேளிக்கை விடுதிகள், முழுக்கக் குளிரூட்டப்பட்ட மால்கள், நகரிய வேடிக்கைகள் என்று பெரும்பான்மை மக்களாகிய நம்மைச் சுரண்டும், புறந்தள்ளும் ஒரு பாதையை வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அதற்கு மின் வினியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனையை நம்மிடமே கேட்பது அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என மாற்றுவழிகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.
29. பிற வழிகளில் மின்சாரம் தயாரித்தால் அதிக செலவாகும். அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே?
மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிடவேண்டும். அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த உலைக்காக அரசு வழக்கும் 200 விழுக்காடு மானியத்தையும் கணக்கிட்டோமானால் அணு மின்சாரத்தின் விலை மிகவும் அதிகம்.
மேலும் இந்த அணு உலைகள் மற்ற திட்டங்களைப் போல் காலங்காலமாக பலன்தரக் கூடியவை அல்ல. இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்.
அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4 டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள். அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறோம் என்பதை அணுஉலை நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
30. அணுஉலையின் விஞ்ஞானி சிரிகுமார் பானர்ஜி பேசுகையில் அணுக்கழிவு சிறிய அளவில் தான் இருக்கும். அதை மறுசுழற்சி செய்து ஆபத்தில்லாததாக மாற்றி எங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துக்கொள்வோம் என்று கூறினாரே?
இதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். அவர் சொன்ன சிறிய அளவு என்பது எவ்வளவு தெரியுமா? சுமார் 30 முதல் 50 டன்கள். 30 ஆண்டுகளில் 1500 டன்கள் வரை இந்த அணுக்கழிவுகள் உருவாகும். உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரகசியமாக வேற்று நாட்டு கடலுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் புதைத்து வருகிறார்கள்.
அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றை பெட்டகங்களில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.
கூடங்குளம் அணுஉலையின் கழிவுகள் முதலில் இரசியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறினார்கள். பின் கல்பாக்கம் எடுத்துச் செல்வோம் என்று கூறினார்கள். இப்போது கூடங்குளத்திலேயே புதைப்போம் என்கிறார்கள். மிகப்பெரிய கதிரியக்கத்தை உருவாக்கும் அணுக்கழிவுகளை நம் நிலத்தில் புதைத்து நஞ்சாக்குவதை நாம் எப்படி அனுமதிப்பது. பானர்ஜி சொன்னது மாதிரி புளுட்டோனியத்தை ஒரு உருண்டை உருட்டி அவர் வீட்டில் வரவேற்பறையில் வைக்கட்டும். பிறகு நாமே அணுஉலைகளை வரவேற்போம்.
31. அப்படியானால் 13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலையை மூடுவதுதான் தீர்வா? இத்தனை கோடி ரூபாய்களை வீணாக்குவதா?
அணு உலையை அனல்மின் உலையாக மாற்றலாம். அணுவிற்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். அவ்வாறு மாற்றிய முன்னுதாரணங்கள் பல வெளிநாட்டில் உண்டு. அப்படி முடியாவிட்டால் உலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 1,78,000 கோடி. சேதுசமுத்திரத் திட்டத்தில் கடலில் தூர்வாரி பின் அதை மதவாத சக்திகளுக்குப் பணிந்து பாதியிலேயே கைவிட்டதில் வீணானது பல ஆயிரம் கோடி. காமன்வெல்த் விளையாட்டு அரங்கம் நிர்மாணித்ததில் செய்த ஊழல் பல ஆயிரம் கோடி. இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடிகளை ஒப்பிடும்போது இது வெறும் கொசு.
32. நீங்கள் இந்த விபரங்களை அணுஉலை கட்டுமுன்னரே வெளிப்படுத்தியிருக்கலாமே? கட்டும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?
கட்டும்வரை பேசாமல் இருந்ததாக அரசியல்வாதிகள் கூறுவது முழுப்பொய். ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை அல்லது நமக்குத் தெரியவில்லை என்பதற்காக போராட்டம் நடக்கவில்லை என்று கருதக்கூடாது.
1987லிருந்து தொடர்ந்து போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 1987 செப்டம்பர் 22ல் இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 1988ல் இந்தியாவுக்கு வந்த இரசிய அதிபர் கார்ப்பசேவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. 1989-ல் நெல்லையில் ஒரு பெரிய பேரணி நடத்தப்பட்டது. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பெரிய பேரணியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார்.
1989 மே 1ம் தேதி தேசிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கன்னியாகுமரி பேரணியில் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
இந்த கூடங்குளம் அணுஉலையின் அடிக்கல் நாட்டு விழா தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகியோர் அதில் கலந்து கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டம் நடைபெற்றது.
ஒருமுறை இசையமைப்பாளர் இளையராசா அணு உலை எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டபோது உடனடியாக அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.
2002ல் அணுஉலையை நிலவியல் ரீதியாக ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டு வழக்குத் தொடர்ந்த காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இப்படி அரசின் கடுமையான அடக்குமுறைகளை மீறி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழக்கம்போல் மக்கள் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்கின்றன.
இடையில் சோவியத் இரசியா உடைந்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு அணுஉலை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. 2001-ல் இருந்துதான் மீண்டும் கட்டத்தொடங்கினார்கள். அணுமின் நிலையத்தைப் போலவே படிப்படியாக போராட்டமும் வளர்ந்து நிற்கிறது. புகுசிமா விபத்திற்குப்பிறகு மக்களிடையே அணுஉலையின் நாசங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே இப்போராட்டங்கள் வலுப்பெற்றன.
33. அந்நிய நாட்டில் சதி காரணமாக நீங்கள் அணுஉலையை எதிர்ப்பதாகவும், உங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் குற்றம் சாட்டுகிறார்களே?
கூடங்குளம் அணுஉலை இரசிய தொழிற்நுட்பம் என்பதால் அமெரிக்க சதி பின்னணியில் இருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், அமெரிக்க தொழிற்நுட்பத்துடன் நடக்கும் தாராப்பூர் அணு உலையையும் எதிர்த்து இதே போன்று போராட்டங்கள் நடக்கிறதே. அங்கு எந்த நாட்டு சதி பின்னணியில் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமாரை அமெரிக்கக் கைக்கூலி என்றே விமர்சிக்கிறார்கள். ஆனால் இதே போன்று மேற்கு வங்கத்தில் ஹரிப்பூரில் ஒரு அணுஉலையை மூடினாரே அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் பின்னால் எந்த அந்நிய நாடு உள்ளது? அவர் எந்த நாட்டு கைக்கூலி? அவர் எந்த நாட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதை மூடினார்.
கூடங்குளம் மட்டுமல்ல, மகராசுடிராவின் ஜெய்தாபூரிலும் ஏன் ஆந்திரா, கர்நாடகாவிலும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றனவே. அங்கு எந்த அன்னிய சதி உள்ளது. தைரியமிருந்தால் இதே காங்கிரசுக் கட்சி தான் ஆட்சி செய்யும் கேரளாவில் வேண்டுமனால் ஒரு அணுஉலை திறந்து பார்க்கட்டுமே.
வெறும் காசுக்காக வேலை செய்வது அரசியல்வாதிகளின் பாணி. ஆனால் மக்களுக்காக உழைக்கும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மூன்றாந்தர அரசியல் பாணியில் இழிவுபடுத்திப் பேசுவதும் மன்மோகன், நாராயணசாமியின் அரசியல்.
இவ்வளவுக்கும் மன்மோகன், நாராயணசாமியின் கைகளில் அதிகாரம் உள்ளது. ஆட்சி உள்ளது. காவல்துறை உள்ளது. ஏதாவது தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். அதை விட்டு மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவது மிகவும் கேவலமான ஒரு செயல்.
34. சில தொண்டு நிறுவனங்கள் தான் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார்களே?
மக்கள் பங்களிப்பு இல்லாமல் வெறும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே ஒரு போராட்டத்தை நடத்திவிடமுடியாது. அல்லது காசு கொடுத்து மட்டும் ஒரு எழுச்சியை உருவாக்கிவிட முடியாது. 100 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்தப் போராட்டத்தை மக்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் யாராலும் நடத்திவிட முடியாது. மேலும் நியாயமான மக்கள் போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாதா என்ன?
35. கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆனால் வெளி மாவட்ட மக்களோ அணு உலையை ஆதரிக்கிறார்களே?
உண்மைகளை அறிந்த, அறிவியலை அறிந்த எல்லோருமே அணு உலையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். மத்திய அரசு, காங்கிரசு கட்சி, பிஜேபி, இந்து முன்னணி போன்ற சிலர் தம் கட்சிக்காரர்களை விட்டு ஆதரவுப் போராட்டம் நடத்துகிறார்கள். உண்மைகளை அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளா வண்ணம் தடுக்கிறார்கள். மின்வெட்டை அதிகப்படுத்தி, கூடங்குளம் அணு உலை வந்தால்தான் மின்வெட்டுத் தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் மின்வெட்டுப்பிரச்சினை வேறு, அணுஉலைப் பிரச்சினை வேறு. இரண்டையும் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடாது. மின் பற்றாக்குறைக்கு அணு உலை தீர்வு ஆகாது. தவறான மின் பகிர்மானக் கொள்கையாலும், தனியாருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாலும் தான் மின்தடைப் பிரச்சினையேயொழிய அணுஉலை திறக்கப்படாமலிருப்பது அதற்குக் காரணம் அல்ல.
மின்சாரம் தயாரிப்பதற்கு பல மாற்று வழிகள் இருந்தாலும் அணு உலை மூலமாகத்தான் நாங்கள் மின்சாரம் தயாரிப்போம். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மின்தடைதான் என்று மிரட்டுவது அரசின் பிடிவாதத்தைக் காட்டுகிறது.
மக்கள் கேட்பது எங்களின் பிணக்குவியலிலிருந்துதான் மின்சாரம் பெறப்பட வேண்டுமா? எங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா? என்பதுதான்.
நீங்கள் எக்கேடும் கெட்டுப்போங்கள், எங்களுக்குத்தேவை 2 விளக்கு, ஒரு மின்விசிறி என்று பதிலளித்தால் அது சுயநலத்தின் உச்சம்.
36. மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் அரசு ஏன் அணுஉலை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது?
அதில்தான் அவர்கள் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது. இந்த அணுஉலை மட்டுமல்ல. இது போன்று 80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு. இதில் கைமாறும் இந்திய பணம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 8 லட்சம் கோடி. இப்போது தெரிகிறதா இந்த அரசியல்வாதிகள் ஏன் இதில் வெகு ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது. நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி அந்நிய நாட்டினருக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில் கட்டுகிறார்கள். இதுதான் இவர்களின் தேசபக்தியின் கதை. அணுஉலை மூடப்பட்டால் அணு வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் இழப்பேயொழிய மக்களுக்கு அல்ல.
இரசிய, அமெரிக்க தனியார் முதலாளிகளின் இலாபம் முக்கியமா அல்லது மக்களின் உயிரும், சந்ததியின் எதிர்காலமும் முக்கியமா.
37. இது கிறித்தவ மக்களின் போராட்டம் என்றும், சர்ச் பாதிரியார்கள் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்களே?
அந்தப்பகுதி கிராமங்கள் பெரும்பாலும் மீனவ கிராமங்கள். அங்கு அதிக எண்ணிக்கையில் கிறித்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் கிறித்தவர்களாயிருப்பதால் தம் வாழ்வை அழிக்கும் அணு உலையை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறீர்களா?
கிறித்தவப் பாதிரியார்கள் பின்னணியில் இல்லை. நேரடியாகவே மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். அதிலென்ன தவறு. இன்னும் கணிசமான அளவில் இந்துக்களும், இசுலாமியாகளும் ஏன் கேரள மீனவ மக்கள் கூட இப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.
38. இந்து முன்னணி, பிஜேபி ஆகியோர் அணு உலையை ஆதரிப்பதன் மர்மம் இதுதானா?
சரியாகப் புரிந்து கொண்டீர்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ராமர்பாலம் கடலுக்குள் இருப்பதாகக் கூறி நிறுத்திய கட்சி பிஜேபி. அவர்களுக்கு அணுஉலையைத் திறக்கச் சொல்லிக் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது.
39. அணு உலையை உடனே திறக்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே?
ஆமாம். இந்த நாட்டை ஏறத்தாழ 50 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சி செய்த கட்சி காங்கிரசுதான். இத்தனை ஆண்டுகளில் காங்கிரசு, மக்களுக்கான ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா? சத்தியமூர்த்தி பவனில் வேட்டி கிழிய சண்டையிடுவதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள் தமிழக காங்கிரசார். மக்களைப்பற்றி இப்போதென்ன புதிதாக அக்கறை!
40. சி.பி.எம் முதலான கட்சிகள் கூட அணுஉலையை ஆதரிக்கின்றனவே?
ஈழப்பிரச்சினை நடந்தபோது சி.பி.எம். என்ன செய்தது என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சி.பி.எம்.மின் புத்ததேவ் பட்டாச்சார்யா நந்திகிராம், சிங்கூரில் முதலாளி டாடாவிற்கு அனுசரணையாக மக்களை எப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்பதெல்லாம் நாடறிந்த செய்தி. சி.பி.எம். கட்சி மார்க்சியக் கொள்கைக்கு ஒரு தேசிய அவமானம்.
41. அணு உலை எதிர்ப்பாளர்கள் தேசத்துரோகிகள். நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு தடை செய்பவர்கள் என்று சொல்கிறார்களே?
இந்த நாட்டை கொள்ளையடித்து, சுரண்டி, இயற்கை வளத்தை வெளிநாட்டினருக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து அதில் கமிசன், லஞ்சம் பெற்று, அந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தம் சந்ததியரின் நலம் காக்கவும், தம் சொந்த நிலத்தைக் காக்கவும் போராடும் மக்களைப் பார்த்து தேசத் துரோகிகள் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம்.
அரசியல்வாதிகளில் யோக்கியர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாட்டின் நீர்வளத்தை கொக்கோகோலா, பெப்சி நிறுவனத்திற்கு விற்றவர்கள், அரசு நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்கள், சுதேசி உள்நாட்டு நிறுவனங்களை கொன்றவர்கள், மான்சான்டோ விதைகளை அனுமதித்து நிலத்தை மலடாக்கியவர்கள் தான் இந்த புதிய உலகப் பொருளாதார மேதைகள். இவர்கள் நாட்டின் தொழில்வளத்தைப் பற்றி கவலைப்படுவதாக கூறுவது, ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாயின் கதைதான்.
ஏற்கனவே 1,82,000 மெகாவாட் தயாரிக்கப்படும் இந்த நாட்டில் 42% கிராமங்களுக்க மின் இணைப்பு இல்லை. சென்னையின் வெறும் 500 நிறுவனங்கள் மட்டுமே தமிழக மின் உபயோகத்தின் 40%-ஐ செலவு செய்கின்றன. சிறு குறு தொழில்கள், விவசாயத்திற்கு 8 மணி நேர மின் வெட்டு. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம். இதுதான் இந்தியாவின் தொழிற்கொள்கை.
42. இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்?
மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அது அராஜகம். சென்ற தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற இயற்கையை வரும் தலைமுறைக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு. இயற்கையை நஞ்சாக்க யாருக்கும் உரிமை இல்லை. மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அல்ல. மக்களுக்காகத்தான் எல்லாமே, அவர்களை அழித்து அல்ல.
மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு அரசுகள் பதில் சொல்லட்டும். ஒரு திறந்த விவாதத்திற்கு அரசுகள் வரட்டும். அதை விட்டுவிட்டு வெளிநாட்டு பணம் என்றும், தேசத் துரோகம் என்றும், அந்நிய சதி என்றும் மூன்றாந்தரக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மக்கள் பக்கமிருக்கும் நேர்மையை கொச்சைப்படுத்துவதாகும்.
மின்சாரத் தேவைக்கும் அணுஉலைக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் வேறுவேறு பிரச்சினைகள். மக்களுக்கு இதைத் தெளிவாக்க வேண்டியது நம் கடமை.
மின் தடையை நீக்கக் கோரி மக்களோடு இணைந்து நாமும் போராடுவோம். ஆனால் அதற்காக கொலைகார அணுஉலையை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் மக்கள் நடமாட்டம் இல்லாத ராஜஸ்தான் பாலைவனங்களில் அவர்களது அணு சோதனைகளை நடத்திக்கொள்ளட்டும் அல்லது பாதுகாப்பானது என்ற தைரியமான நம்பிக்கை இருந்தால் டெல்லியில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளட்டும்.
-கிற்று இணையம்-